அய்யாபுரம் சித்திரை திருவிழா... ஸ்ரீ முப்புடாதி அம்மன் அலங்கார சப்பரத்தில் பவனி
நெல்லை மாவட்டத்தில் 5 நாள் சப்பர பவனி நடைபெறும் சிறப்பு பெற்ற இந்த கோவில் நேற்று முளைப்பாரி கும்மிப் பாடலுடன் முதல் நாள் சப்பர பவனி சிறப்பாக நடைபெற்றது
நெல்லை: தென்காசி அருகேயுள்ள அய்யாபுரத்தில் தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் 5 நாள் சித்திரை திருவிழா நேற்று சிறப்பாக தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் 5 நாள் சப்பர பவனி நடைபெறும் சிறப்பு பெற்ற இந்த கோவில் நேற்று முளைப்பாரி கும்மிப் பாடலுடன் முதல் நாள் சப்பர பவனி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியினை அய்யாபுரம் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தென் மாவட்டங்களில் 'முப்பிடாதி' என்ற பெயர் மிகப் பிரசித்தம். எண்ணற்றோருக்கு குலதெய்வமாகத் திகழும் இந்த அம்மன் முப்புரங்களையும் காத்ததால், முப்புராரி என்று அழைக்கப்படுகிறார். அதுவே பிறகு முப்புடாதி, முப்பிடாரி என்றும் மாறியதாகச் சொல்வர்.
அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி. பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால் முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படுகிறார் இந்த அம்மன். இதுவே மருவி முப்பிடாதி என்றானது. இந்த அம்மனுக்கான கோயில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் அமைந்துள்ளன.
அக்னி நட்சத்திரம் 2019: கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்க நீர் மோர் தானம் கொடுங்க
முப்பெரும் தேவியரின் சக்தி
இரும்பு, பொன், வெள்ளியாலான... அந்த அசுரர்களின் மூன்று கோட்டைகளுக்கும் காவலாக இருந்தவள் இந்த அம்மன் என்கிற ஒரு தகவல் உண்டு. நெல்லைச் சீமையில் பல்வேறு பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்த அம்மனுக்கு, அந்தந்த பகுதிகளுக்கே உரிய தனிக்கதைகளும் உண்டு.
முப்பெரும் சக்தி அன்னைகளான சரஸ்வதி, இலட்சுமி, பார்வதி எனும் தெய்வங்களை திருநெல்வேலி பகுதி மக்கள், தங்களுடைய பண்பாட்டிற்கு ஏற்ப முப்பிடாரி என்று பெயரிட்டு வணங்கி வருகிறார்கள்.
அய்யாபுரம் ஸ்ரீ முப்புடாதி அம்மன்
நெல்லையில் பல்வேறு பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்த அம்மனுக்கு, அந்தந்த பகுதிகளுக்கே உரிய தனிக்கதைகளும் உண்டு.
தென்காசி தாலுகா, குத்துக்கல்வலசை பஞ்சாயத்து அய்யாபுரத்தில் ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
அம்மன் சப்பர பவனி
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமையன்று முளைப்பாரி கும்மிப் பாடலுடன் தொடங்கியது. முதல் நாள் சப்பர பவனி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியினை அய்யாபுரம் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
முளைப்பாரி ஊர்வலம்
இரண்டாம் நாளான இன்று பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி சப்பர பவனியும் 5.05.19 ஞாயிறு மூன்றாம் நாள் நாளை ஆடல் பாடல் நிகழ்ச்சியும் சப்பர பவனியும் நடைபெறும். 6.05.19 திங்கள் கிழமை கரகாட்டம் சப்பர பவனி நடைபெறும். 7.05.19 செவ்வாய் ஐந்தாம் நாள் முளைப்பாரி ஊர்வலமும், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், சப்பர பவனி நடைபெறும்.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
நெல்லை மாவட்டத்திலேயே ஐந்து நாள் சப்பர வீதி உலா நடைபெறும் சிறப்பு பெற்ற இந்த திருவிழாவின் கடைசி நாளான்று அம்மன் சப்பர வீதி உலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கப்பிரதட்ஷனம் செய்து வழிபடுவார்கள். வெளியூர்களில் படிப்புக்காவும் வேலைக்காகவும் சென்றிருப்பவர்கள் சித்திரை மாதத்தில் சொந்த கிராமத்து நடைபெறும் திருவிழாவைக் காண குடும்பம் குடும்பமாக வந்திருந்து அம்மனை தரிசனம் செய்வதோடு நேர்த்திக்கடனையும் செலுத்துகின்றனர்.