பாம்பு கடித்து மரணித்த அங்கம் பூம்பாவை... எலும்பிலிருந்து உயிர்பித்த திருஞான சம்பந்தர்
பாம்பு கடித்து உயிரிழந்த அங்கம் பூம்பாவையை பதிகம் பாடி சாம்பலில் இருந்து உயிர்த்தெழ வைத்தார் திருஞான சம்பந்தர்.
சென்னை: பாம்பு கடித்து மரணமடைந்த பூம்பாவையை எரித்து அதன் சாம்பலையும், எலும்பையும் பாதுகாத்து வைத்திருந்தார் சிவநேசர். கபாலீஸ்வரரை நினைத்து பதிகம் பாடி பூம்பாவையை உயிர்தெழ வைத்தார் திருஞான சம்பந்தர். இந்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது.
திருமயிலை தலத்தில் சிவநேசர் என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது பக்தி கொண்ட அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டினைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார்.
ஆனால் கடவுளின் எண்ணம் வேறாக இருந்தது.
ஒருநாள் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் பூக்களை பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டியது. பூம்பாவை மரணமடைந்த பின்னரும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு ஏற்பட்டது. எனவே அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.
பூம்பாவை சாம்பல்
திருஞான சம்பந்தர் திருவொற்றியூர் வந்திருப்பதை அறிந்த சிவநேசர் அவரை சந்தித்து வணங்கினார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார். திருஞானசம்பந்தர் ஆறுதல் கூறினார்.
உயிர்தெழுந்த பூம்பாவை
சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து " மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். " என்று பாடினார். பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள்.
மகளாக மாறினாள்
சம்பந்தரை வணங்கிய சிவநேசர், தனது மகள் பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள்.
அங்கம் பூம்பாவைக்கு சந்நிதி
கபாலீஸ்வரர் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பெருவிழாவின் 8ம் நாளான இன்று காலையில் நடைபெற்றது. திருஞானசம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருளினர்.
தீர்க்காயுள் கிடைக்கும்
ஒரு கும்பத்தில் எலும்புக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்பட்டது பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாக நடத்திக்காட்டினர். இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மயிலாப்பூரில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான 63 நாயன்மார்களுக்கு வெள்ளி வாகனத்தில் கபாலீஸ்வரர் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.