சொகுசு வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறனுமா? கபாலீஸ்வரர் ரிஷபவாகனம் பாருங்க!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: சென்னை மயிலாப்பூர் எனப்படும் திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் ஸமேத கபாலீஸ்வரர் பங்குனி பெறுவிழா ஐந்தாம் நாள் ரிஷ்ப வாகனத்தை முன்னிட்டு இன்று திங்கள் கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருவதை காணலாம். இது காண கண்கொள்ளா காட்சியாகும்.
ரிஷப வாகனம்:
ரிஷப வாகனம் அல்லது விடை வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்து சமய புராணங்களிபடி ரிஷபம் என்பது சிவனின் வாகனம் ஆகும். ரிஷப வாகனமானது மரத்தினால் செய்யப்படுகிறது. இதன் தொன்மையைக் காக்க வெள்ளியாலும், தங்கத்தாலும், பித்தளையாலும் காப்புகள் செய்யப்பட்டு போடப்படுகின்றன. ரிஷப வாகனமானது நின்ற நிலையில் உள்ளது ரிஷபத்தின் நாக்கு மேல்வாயை நக்கியவாறு உள்ளதாகவும் கழுத்தில் மணிகள் மாலைகளாக உள்ளது போல அழகுற வடிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் மேல் உற்சவரை அமர்த்த ஏதுவாக தாங்கு பலகை அமைக்கப்படுகிறது.
ரிஷப விரதம்:
ஈசனுக்குரிய மிகவும் விசேஷமான விரதங்களில் ஒன்று ரிஷப விரதம். இந்த விரதம் ரிஷப மாதம் எனப்படும் வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமி திதியில் கடைபிடிக்கப்படும். வாகன யோகம் மற்றும் வாகனம் சம்பந்தமான பிரச்சினைகளை போக்க வல்ல விரதம் இது. மேலும் விவசாய சம்மந்தமான வாகனங்களின் சேர்க்கையும் ஏற்படும் என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. இந்த விரதத்தினால் வாகன யோகம் அடையலாம். வாகனம் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். வாகன விபத்துகள் நீங்கும்.
புராணத் தகவல்கள் :
1. இந்த விரதத்தை கடைபிடித்தே இறைவன் ஸ்ரீஹரி கருட வாகனத்தையும், பலவிதமான செல்வங்களையும் அடைந்தார்.
2. இந்த விரதத்தை கடைபிடித்தே தேவேந்திரன் ஐராவதத்தை வாகனமாக அடைந்தான்.
3. இந்த விரதத்தை கடைபிடித்தே அக்னிதேவன் செம்மறி ஆட்டினை வாகனமாக அடைந்தான்.
4. இந்த விரதத்தை கடைபிடித்தே யமன் மகிஷ வாகனத்தை அடைந்தான்.
5. இந்த விரதத்தை கடைபிடித்தே குபேரன் புஷ்பக விமானத்தை அடைந்தான்.
6. இறைவன் ரிஷபாரூடரை வணங்கி, இந்த விரதத்தை கடைபிடித்தே சந்திரன் பவழம் பதித்த அதிசய புஷ்பக விமானம் ஒன்றை அடைந்தான். மற்றும் சூரிய பகவான் 7 குதிரைகள் பூட்டிய ரதத்தினையும் அடைந்தார்.
7. ஒரு ரிஷியின் மூலம் இந்த விரதத்தைப் பற்றி அறிந்த ராஜா விஷ்வசேனன், தானும் அதைக் கடைபிடித்து முக்காலத்தையும் உணரும் சக்தி பெற்றார்.
8. சந்துஷ்ட மகாராஜா இந்த விரதத்தை கடைபிடித்து அஷ்டமா சித்திகள் அனைத்தையும் அடைந்தார்.
9. ராஜா வித்ருதன் இந்த விரதத்தின் மகிமையால் தனது பூதவுடலுடனேயே, ஈரேழு லோகங்களையும் சுற்றி வரும் பாக்கியம் பெற்றார். எனவே அவர் இந்த சிறப்புமிகு விரதத்தினைப் பற்றி தனது சந்ததிகளுக்கும் கூறி, இதனை நெடுங்காலம் கடைபிடித்து பின்னாளில் ஒரு சிறந்த சிவயோகியாக மாறினார்.
ரிஷபத்திற்க்கும் ஜோதிடத்திற்க்கும் உள்ள சம்மந்தம்:
பொதுவாக கால் நடைகளுக்கு காரகர் சந்திரன் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது, ரிஷபம் எனும் காளை கால் நடை வகையை சார்ந்தது என்பதால் சந்திரன் காரகர் ஆகிறார்.
கால் நடைகளுக்குறிய பாவமாக ரிஷப ராசியை குறிப்பிடுகிறது ஜோதிட சாஸ்திரம். இந்த ரிஷப ராசியே சந்திரன் உச்சம் அடையும் ராசி என்பது
குறிப்பிடத்தக்கது. சொகுசு வாகனங்களுக்கு அதிபதி சுக்கிரன்.
ரிஷபத்திற்க்கும் ஜோதிடத்ததிற்க்கும் உள்ள சம்மந்தம் 12 ராசிகளில் ஒன்றாக ரிஷபம் அமைந்ததிலிருந்தே அதன் சிறப்பு விளங்கும். ரிஷபராசியின் அதிபதி சுக்கிரன். மிருகங்களுக்கு காரகன் சுக்கிரன். படைப்புத்தொழிலுக்கு கருவடையும் தன்மைக்கு காரகன் சுக்கிரன். வாகன காரகன் சுக்கிரன்.
கால புருஷனுக்கு நான்காம் இடமாகிய கடகம் மாத்ரு ஸ்தானம் மற்றும் சுகம், வீடு வாகனம் ஆகியவற்றை பற்றி கூறும் பாவமாக அமைந்துள்ளது. கடக ராசி மாத்ரு காரகனான சந்திரனின் ஆட்சி வீடு ஆகும். நாம் கருவில் இருக்கும்போதே நம்மை நமது அன்னை சுமந்துக்கொண்டே எல்லா இடங்களுக்கும் சென்றதால் நமது அன்னையே நமது முதல் வாகனம் ஆகும்.
வாகனங்களின் காரகர் சுக்கிரன். பயணத்தின் காரகர் சந்திரன். இதிலிருந்து சந்திரன் மற்றும் சுக்கிரனின் தொடர்புகள் வாகனத்திற்க்கும் பயணத்திற்க்கும் எவ்வளவு இன்றியமையாதது என தெரிந்துக்கொள்ளலாம்.
ரிஷப விரதமெல்லாம் ஞாபகம் வெச்சிக்கிட்டு இருக்கிறது உங்களுக்கு கஷ்டமா? அப்ப இன்று இரவு திரு மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப்பெருவிழாவை முன்னிட்டு சிவபெருமானும் பார்வதியும் வெள்ளி ரிஷபத்தில் காட்சளிக்க இருக்கிறார்கள். இன்று இரவு 11 மணியளவில் புறப்பாடு ஆகும் வெள்விடை காட்சியை தரிசித்தால் திரு ஞானசம்மந்தருக்கு ஞானப்பால் ஊட்டியதுபோல் ஞானம்வேண்டி நிற்பவருக்கெல்லாம் ஞானப்பால் கிட்டிவிடும் என்பதும் சர்வ நிச்சயம். மேலும் எந்த வாகனம் வாங்கவேண்டும் என நீண்ட நாட்களாக கனவு காண்கிறீர்களோ அதை அடுத்த ரிஷப வாகனத்திற்க்குள் வாங்கி விடுவீர்கள்.