மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா - அதிகார நந்தியை தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிகார நந்தி காட்சியும், திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழாவும் நடைபெற்றது.
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகார நந்தி காட்சியும், திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழாவும் நடைபெற்றது.
மயிலையே கயிலை, கயிலையே மயிலை என்னும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது கபாலீஸ்வரர் ஆலயம். அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது இங்குதான். திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றியது இந்த தலத்தில்தான். வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான். இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.
திங்கட்கிழமை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு 10 மணி அளவில் அம்மை மயில் வடிவில் சிவபூஜை காட்சி நடைபெற்றது. புன்னை மரம், கற்பக விருட்சம், வேங்கை மர வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. மூன்றாம் நாளன்று அதிகார நந்தியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நந்தியின் தரிசனம்
அதிகாரம் பதவி மட்டுமின்றி திருமண யோகத்திற்க்கும் நந்தியம்பெருமான் முக்கியத்துவம் பெறுகிறார். இன்னும் சொல்லபோனால் செவ்வாய் தோஷம் நிவர்த்திக்கு நந்திவழிபாடே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரதோஷ காலத்தில் நந்தி வழிபாடு செய்வது செவ்வாயின் காரகங்களான திருமணயோகம், கடன் நிவருத்தி, ஆற்றல், வெற்றி, உயர்பதவி கிடைக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
அதிகார பதவி கிடைக்கும்
திருமயிலை அதிகார நந்தி 100 வருட சிறப்பு வாய்ந்த நந்தி. வேலையில் பிரச்சனை என்றாலும் தகுதிகேற்ப அதிகாரம் இல்லை என்றாலும் உயர்பதவி முன்னேற்றம் கிடைக்கா விட்டாலும் திருமயிலை கபாலீஸ்வரர் அதிகார நந்தியை தரிசித்து பிரார்தனை செய்துக்கொள்ளலாம். அடுத்த அதிகார நந்தியை பார்க்கும் முன் உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடும்.
அறுபத்து மூவருக்கு காட்சி தரும் கபாலீஸ்வரர்
மார்ச் 17ஆம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணிக்கு கபாலீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான எட்டாம் நாள் விழாவாக நடைபெறும் அறுபத்து மூவர் விழா உலகப்புகழ் பெற்றது. அன்று நடைபெறும் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி விழாவும் மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆண்டு அறுபத்து மூவர் விழா 18ஆம் தேதி நடக்கிறது. வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு ஐந்திரு மேனிகள் விழாவும் நடைபெறுகிறது.
அங்கம்பூம்பாவை மரணம்
சிவநேசர் என்னும் சிவபக்தர், தனது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். ஆனால். விதிவசமாக பூம்பாவை பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். அவளுடைய அஸ்தியை ஒரு குடத்தில் வைத்து, திருஞானசம்பந்தரின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலைக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட சிவநேசர், அஸ்தி குடத்தை எடுத்துக்கொண்டு வந்து திருஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கி, நடந்த சம்பவத்தைக் கூறினார்.
உயிர்தெழுந்த பூம்பாவை
விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததன் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறி, சிவநேசரின் கோரிக்கையை சம்பந்தர் நிராகரித்துவிடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டுசெய்து, பின் முக்தி அடைந்தாள். இக்கோவில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்ஸவத்தின் 8ஆம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவமூர்த்திகள், கபாலி தீர்த்தத்துக்கு எழுந்தருள்கின்றனர். ஒரு கும்பத்தில் அஸ்திக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாகச் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மயிலையில் திருக்கல்யாண காட்சி
இதைத்தொடர்ந்து, மார்ச் 20ஆம் தேதி திருக்கூத்த பெருமான் திருக்காட்சி, திருக்கல்யாணம் நடைபெறும். அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் கொடியிறக்கத்துடன் பங்குனிப் பெருவிழா நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து 22ஆம் தேதி முதல் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
பெருமாள் கோவில்
சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை மதுசூதன பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா நேற்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடி மரத்துக்கு பூஜைகள் செய்து மாத்தூர்மட தந்திரி சங்கரநாராயணரு கொடியேற்றினார். இரவு சுவாமி பூ பந்தல் வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.
9ஆம் நாள் விழாவான 19ஆம் தேதி காலை கணபதி ஹோமம், 8 மணிக்கு சுவாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. 10ம் திருவிழாவான 20ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டு துறைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு தெப்ப திருவிழாவும் நடக்கிறது.