ஆடி வெள்ளியில் அவதரித்து அசுரன் மஹிசனை அழித்த மைசூர் சாமுண்டீஸ்வரி
சாமுண்டீஸ்வரி தேவி ஆடிமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை மஹிசூரில் தோன்றினாள். கத்தி, சக்கரம், திரிசூலம், வாள், வேல், வில் என அனைத்து ஆயுதங்களையும் தாங்கி 16 கரங்களுடன் பயங்கரியாக மாறி..
சென்னை: அட்டகாசம் செய்து வந்த எருமை தலையன் மஹிசனை அழிப்பதற்காக அன்னை சாமுண்டீஸ்வரி ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமையன்று அவதாரம் செய்திருக்கிறாள்.
ஆதிகாலத்தில் இந்தப் பகுதி மகிஷாசூரன் என்ற அசுர வம்ச மன்னனால் ஆளப்பட்டதாகவும், அவனது பெயரிலேயே மகிஷா ஊரு என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும், அதுவே மருவி மைசூரு என்றானதாகவும் சொல்லப்படுகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனை வதம் செய்து இந்த நகரத்தின் காவல் தெய்வமாக மாறியதாக வரலாறு கூறுகிறது.
மைசூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. தேவர்களால் சாந்தமான அன்னையின் அருட்கோலத்தை மார்க்கண்டேய மகரிஷி 8 கரங்களுடன் வடிவமைத்து சாமுண்டீஸ்வரி மலைப்பகுதியில் அமைத்தார். அமர்ந்த கோலத்தில் இன்றும் அன்னை சாமுண்டி அருளாசி வழங்கி வருகிறாள். அழகிய சாமுண்டி மலைமீது சென்றால், உலகாளும் சாமுண்டீஸ்வரி தேவி எழிலுடன் காட்சி தருகிறார். மன்னர் ஆட்சிகாலம் தொடங்கி மக்களாட்சி காலம் வரை தமிழகம், கர்நாடகாவை ஆட்சி செய்வோர் சாமுண்டீஸ்வரியின் அருளாசியை பெறாமல் ஆட்சி நடத்துவதில்லை.
சாகா வரம் அளித்த சிவன்
அசுரர்களுக்கு சிவபெருமான் வரம் கொடுப்பதும், பின்னர் இன்னலில் சிக்கித் தவிப்பதும் புராண கதைகளை படித்தவர்களுக்கு தெரிந்து இருக்கும்.
மஹிஷாசூரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். அவனின் தவத்தை மெச்சிய சிவன், என்ன வரம் வேண்டும் என்று கேட்ட, அதற்கு மஹிஷாசுரன், தனக்கு சாகாவரம் வேண்டும் என்றான். அதற்கு சிவனோ,ஆண்கள், பிராணிகள், ஜலம் மூலம் மரணம் ஏற்படாது என்று வரமளித்தார்.
அன்னை சாமுண்டீஸ்வரி
சிவனிடம் வரம் பெற்ற மஹிஷாசுரன், தனக்கு மரணமில்லை என்பதால், அட்டகாசம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்தான். மஹிஷாசுரன் அட்டகாசம் தாங்கவில்லை என்று சிவனிடம் முறையிட்ட தேவர்கள் அவனை அழிக்க வேண்டினார்கள். அதற்கு சிவனோ, என்னிடம் வரம் பெற்றுள்ள மஹிஷாசுரனுக்கு ஆண்கள், பிராணிகள், ஜலம் மூலம் மரணம் ஏற்படாது. ஆனால் பெண்ணால் கண்டிப்பாக மரணம் வரும் என்று கூறினார். உடனே மஹிஷனை அளிக்க அன்னை பார்வதியிடம் பக்தியுடன் வேண்டி முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்று கொண்ட பார்வதிதேவி சாமுண்டீஸ்வரி தேவியாக ஆடிமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை மஹிசூரில் அவதரித்தாள்.
மகிஷாசூர வதம்
சாமுண்டீஸ்வரிதேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சியளித்தாள். ஒவ்வொரு கையிலும் கத்தி, சக்கரம், திரிசூலம் உள்பட பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். மக்களை வாட்டிவதைத்து வந்த மஹிஷாசுரனிடம் போர் தொடுத்து அவனை வதம் செய்தார். அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கியதுடன், தங்களுக்கு துணையாக இதே இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று சாமுண்டிமலையில் குடிகொண்டாள்.
சாமுண்டீஸ்வரி அன்னை
மகிஷனை சம்ஹரித்த காலம் அறிய முடியாத காலம் தொடங்கி இன்று வரை பல மாற்றங்களை மைசூர் கண்டு வந்தாலும் அங்கு மாறவே மாறாத ஒரே சக்தியாக தேவி சாமுண்டீஸ்வரி விளங்குகிறாள். 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தன் அன்னைக்கு திருப்பணி செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். 1573ம் ஆண்டு நான்காம் சாமராஜ உடையார் மைசூரை ஆண்டு வந்தார். இவரின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரியின் ஆலயத்தை தரிசித்து விட்டு திரும்பும்போது மழையும் இடியும் சூழ்ந்து கொண்டது. அப்போது மன்னரையும் அவரது ஆட்களையும் காப்பாற்றிய அன்னை சாமுண்டீஸ்வரிக்கு நன்றி தெரிவிக்க மைசூரின் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக சாமுண்டீஸ்வரி ஆலயத்தை விரிவாக எழுப்பினார். 3486 அடி உயரத்தில் கொலு வீற்றிருக்கும் இந்த சாமுண்டீஸ்வரி கோயிலை 1872-ம் ஆண்டு கிருஷ்ணராஜா உடையார் புனரமைத்து விரிவாக்கினார்.
எட்டுக்கரங்களுடன் அன்னை
ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தில் ஏழு தங்கக் கலசங்கள் உள்ளன. கருவறையில் எட்டுக் கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். பழமையான இச்சிலை மார்க்கண்டேய மகரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டது. இங்கு நரபலி, மிருகபலி அளிக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் இப்பழக்கம் நிறுத்தப்பட்டது கோபுர நுழைவு வாசலில் விநாயகர் வீற்றிருக்கிறார். வாசல் கதவில், அம்மனின் வெள்ளி கவசமிட்ட சிற்பங்கள் உள்ளன. வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். கருவறை முன் கொடிமரம், அம்பிகையின் திருப்பாதம், நந்தி உள்ளன. கருவறை வாசலில் நந்தினி, கமலினி என்னும் துவாரபாலகியர் காட்சி தருகின்றனர். சந்நிதியின் வலப்புறம் பைரவர் இருக்கிறார்.
ஜம்பு சவாரி
தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைப்பார். பின்னர் புகழ்பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெறும் அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை காண்பார்கள். நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகளும் கொண்டாட்டங்களும் மைசூரில் நடக்கும்.
விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையில் சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வருவது சிறப்பு.
ஆடி 3வது வெள்ளி அவதார தினம்
தேவாங்கச் செட்டியார்களின் குல தெய்வமாக ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் போற்றப்படுகிறார். தேவாங்க செட்டியார்களின் திவ்ய தேசங்களில் ஒன்றாக மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம் திகழ்கிறது. சமுண்டியை வணங்கும் போது வீரமுண்டி சாமுண்டி நீனு....சர்வேஸ்வரின நீனு...அச்சு பெல்ல கோட்டே கட்டி...அசி கப்பு அந்தர ஆக்கி...வீ ளுதெள கொட்டின புட்டு...கோமளவல்லி நினகே...கொலுமண்டப கட்டிரம்மா.. என்று வணங்குகின்றனர்.
ஆடிமாதம் வரும் 3வது வெள்ளிக்கிழமை சாமுண்டீஸ்வரி தேவி பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டுகள் ஆடிமாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.