ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நவராத்திரி: ரங்கநாச்சியார் திருவடி சேவை தரிசனம் பார்க்க வாங்க
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது. வருகிற 23ஆம்தேதி தாயார் திருவடி சேவை நடக்கிறது. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் பல உற்சவங்களின் போது தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தாலும், நவராத்திரி விழாவின் ஏழாவது நாள் மட்டுமே தனது கால் பாதங்கள் தெரியும்படி சேவை சாதிப்பது வழக்கமாகும்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் பல உற்சவங்களின் போது தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தாலும், நவராத்திரி விழாவின் ஏழாவது நாள் மட்டுமே தனது கால் பாதங்கள் தெரியும்படி சேவை சாதிப்பது வழக்கமாகும். இதன் காரணமாகவே இதற்கு தாயார் திருவடி சேவை என பெயர் வந்தது. இதன்படி நேற்று உற்சவர் தாயாரின் கால் பாதங்கள் தெரியும்படி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் உற்சவம் என்பதால் தாயாரின் திருவடிகளை சேவிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள்.
ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை மகாளய அமாவாசை முடிந்து மறுநாள் தொடங்கும். இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசை உள்ளது. நேற்று மகாளய அமாவாசை கடைபிடிக்கப்பட்ட நிலையில் மாத இறுதியில் ஒரு அமாவாசை வருகிறது. அதன் பிறகே நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பத்து நாட்களும் கொலு வைத்து கொண்டாடுவார்கள்.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான நேற்று மூலஸ்தானத்தில் ரங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார்.
நவராத்திரி கொலு இரவு 7.45 மணிக்கு ஆரம்பித்து 8.45 மணி வரை நடைபெற்றது. இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
2ஆம் திருநாளான இன்று வெள்ளிக்கிழமை முதல் 6ஆம் திருநாளான 22-ந் தேதி வரை மற்றும் 8ஆம் திருநாளான 24ஆம்தேதியும் ரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ஆம் திருநாளான 23ஆம்தேதி அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9ஆம் நாளான 25ஆம்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணைஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.