நவராத்திரி விரதம் யாரெல்லாம் அனுஷ்டிக்க வேண்டும் தெரியுமா?
நவராத்திரி பண்டிகை விரதத்தை யாரெல்லாம் அனுஷ்டிக்க வேண்டும் என்று நாம் அறிந்து கொள்வோம்
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு புரட்டாசி மாதம் ஐந்தாம் தேதி அதாவது செப்டம்பர் 21ஆம் தேதி ஆரம்பமாகின்றது.
நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும்.
இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.
ஜோதிடமும் நவராத்திரியும்:
ஜோதிடத்தில் தாய்மை மற்றும் பெண்களை குறிக்கும் கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும். நம் வாழ்வில் பெண்மையின் அவசியத்தை உணர்த்தும் பாவங்கள் மூன்று. அவை குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாம் பாவம், மாத்ரு ஸ்தானம் மற்றும் சுகஸ்தானம் எனப்படும் நான்காம் பாவம், களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் பாவம் மற்றும் அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் எனப்படும் பன்னிரெண்டாம் பாவம் ஆகும்.
குடும்ப வாழ்க்கை
ஒருவருக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைய இரண்டாம் வீடு மற்றும் சுக்கிரனின் நிலையை கொண்டு பார்க்க முடியும். மேலும் குடும்பத்திற்கு தேவையான செல்வ செழிப்பிற்க்கும் காரகர் சுக்கிர பகவான் ஆகும். இதனை உணர்த்தும் வகையில் கால புருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி வீடாக அமைந்து சந்திரன் உச்சமாகிறார்.
சுக்கிரன் உச்சம்
நான்காம் பாவமான கடகம் சந்தினின் ஆட்சி வீடாகும்.கால புருஷனுக்கு களத்திர ஸ்தானமான துலாமும் சுக்கிரனின் ஆட்சி வீடாகும். மேலும் தூக்கம் மற்றும் படுக்கை சுகத்தை உணர்த்தும் பன்னிரெண்டாம் பாவமான மீனத்தில் சுக்கிரன் உச்சமாவது குறிப்பிடத்தக்கது.
நல்ல தூக்கம்
ஒருவர் எத்தனை கஷ்டப்பட்டாலும் அதன் பலனை சுகமாக அனுபவிக்க சுகஸ்தானம் சிறப்பாக அமைய வேண்டும். எனவே சந்திரனும் நான்காம் பாவ அதிபதியும் நல்ல நிலையில் ஆட்சி உச்சம் பெற்று நிற்க வேண்டும் ஒருவருக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும்.அதிக மகிழ்ச்சி, கோபம், அதிக பயம் இதுபோன்ற உணர்வுகள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது.
சந்திரனின் அருள்
ஒருவருக்கு நல்ல மனோநிலை அமைய சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும். இரவின் காரகன் சந்திரன் ஆகும். அந்த சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொருத்தே ஒருவரின் இரவு பொழுதின் தன்மையையும் தூக்கத்தையும் தீர்மாணிக்கமுடியும். இரவில்தான் தூங்கவேண்டும் என்பது இயற்க்கையின் நியதி. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டுவிட்டால் அவருக்கு தூக்கம் என்பது ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.
மனைவி
பெண்களின் சிறப்பை விளக்கும் வண்ணம் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என கூறியிருக்கிறார்கள். ஒருவருக்கு மனைவி சகல சௌபாக்கியவதியாக அமைய ஜாதகத்தில் ஏழாம்பாவம் சுக்கிரனும் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும்.
பெண்ணின் துணை
வாழ்க்கை முழுமை பெற கட்டில் சுகம் இன்றியமையாததகும். அந்த கட்டில் சுகத்தை தீர்மானிப்பது பன்னிரெண்டாம் வீடு மற்றும் சுக்கிரன் ஆகும்.
ஜாதகத்தில் சுக்கிரன்
சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்கு வரும். நல்ல சுவையான உணவு (சுக்கிரன்), குளுமையான சூழ்நிலை (சுக்கிரன்) இனிமையான இசை (சுக்கிரன்) வசதியான படுக்கைகள் மற்றும் நறுமணம் மிக்க மலர்கள் மற்றும் சுவை நிறைந்த பழங்கள் (சுக்கிரன்) கூடவே அழகான மற்றும் அன்பான மனைவி (சுக்கிரன்) இவையெல்லாம் நினைத்து பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம் சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும்.
நவராத்திரி விரதம்
பெண்மையின் சிறப்பை விளக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், கடகம், துலாம் ஆகிய ராசிகளை லக்கினமாகவோ அல்லது ராசியாகவோ கொண்டவர்கள், சந்திரன் அல்லது சுக்கிரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக அமையப்பெற்றவர்கள், சுக்கிரன் உச்சம் அடைந்தவர்கள், மாளவியா யோகம் பெற்றவர்கள் இயற்கையாகவே நவராத்திரி பூஜையில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
களத்திர தோஷம்
ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஏழாம் வீடுதான் களத்திர ஸ்தானம் ஆகும். இந்த இடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று இருப்பது, ஏழாம் வீட்டில் சுக்கிரன் நீச்சம் பெற்று இருப்பது, 7-க்கு உடைய கிரகம் 6, 8, 12 போன்ற இடங்களில் தனித்தோ அல்லது பாவ கிரகங்களுடன் சேர்ந்தோ இருப்பது, ராகு அல்லது கேது 7-ல் இருப்பது களத்திர தோஷத்தைக் குறிப்பிடும்.
பாப கிரகங்களின் பார்வை
ஏழாவது வீட்டுக்குரிய கிரகமோ அல்லது சுக்கிரனோ, பாவ கிரகங்களின் பார்வை பெற்று இருந்தாலோ அல்லது 6, 8-க்குரிய கிரகத்துடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது 6, 8, 12-ல் மறைந்து இருந்தாலோ களத்திர தோஷம் என்று அர்த்தம். பொதுவாக, லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் உள்ள கிரகங்களைக் கொண்டுதான், ஒருவருக்கு களத்திர தோஷம் இருக்கிறதா, இல்லையா என்று முடிவு செய்யப்படுகிறது. அத்தகைய ஜாதக அமைப்பை பெற்றவர்கள் நவராத்திரி பூஜை செய்வது களத்திர தோஷம் போக்கும்.
பெண் சாபம்
பெண் சாபத்தை குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். பெண் சாபம் பெற்றவர்களுக்கு களத்திர ஸ்தானம் பழுதடைந்தோ அல்லது களத்திர ஸ்தானாதிபதி பலமிழந்த நிலை மற்றும் சுக்கிரன் கெட்டு போன நிலையில் ஜாதக அமைப்பு இருக்கும். இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
பரிகாரம் என்ன?
கால புருஷனுக்கு ஏழாம் வீடான துலா ராசிக்கு அதிபதியான சுக்கிரன் களத்திரகாரகன் என்றழைக்கப்படுகிறார். அவர் 6/8/12 அதிபதிகளாக பெற்றவர்கள் சுக்கிரனுக்கு பரிகாரம் செய்வது, தாய், சகோதரி மற்றும் பெண்களுக்கு சீர் செய்தல், நவராத்திரி பூஜை செய்வது போன்றவை சிறந்த பரிகாரங்களாகும்.
கன்னித்தன்மை
பெண்களுக்கு கன்னித்தன்மையை சிறப்பிக்கும் விதமாக பூப்படைவது இறைவன் கொடுத்த வரமாகும். பூப்படைவதற்க்கு சந்திர செவ்வாய் சேர்க்கை காரக கிரகமாகின்றன. எனவே ஒரு பெண்ணிற்க்கு கன்னித்தன்மை அடையாமல் அதாவது பூப்படையாமல் இருப்பவர்கள் கன்யா மாதம் எனப்படும் புரட்டாசியில் கடைபிடிக்கப்படும் நவராத்திரியில் பாலா எனப்படும் பாலா திரிபுர சுந்தரியை வணங்க விரைவில் பூப்படைந்து கன்னித்தன்மை ஏற்படும்.
தாய்மை பேறு
ஒரு கன்னிப்பெண் தாய்மையடைய சுக்கிரனின் அருள் பெற்றிருக்க வேண்டும். திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பேறில்லாமல் இருப்பவர்கள் நவராத்திரி நோன்பிருந்து வழிபட குழந்தை பாக்கியம் ஏற்படும்.
தம்பதியர் ஒற்றுமை
கணவன் மனைவியருக்குள் ஒற்றுமையின்றி சதா சர்வ காலமும் சண்டை போட்டுக்கொண்டு படுக்கை முள்படுக்கையாகவும் இரவு கொடுமையாணதாகவும் உணருபவர்கள் நவராத்திரியில் அன்னை காமாக்ஷியை வழிபட கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்.
சாரதா நவராத்திரி
பல வித பிரச்சனைகளால் நிம்மதியிழந்து இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் நவராத்திரியில் விரதமிருந்து ஜேஷ்டா தேவியை வழிபட தூக்கம் நல்லமுறையில் அமையும். குழந்தைகளுக்கு ஜாதகத்தில் புதன் நீசமானவர்கள், நான்கு, ஐந்தாம் பாவம் கெட்டு கல்வியில் தடை ஏற்பட பெற்றவர்கள் சாரதா நவராத்திரியில் சரஸ்வதியை வழிபட கல்வித்தடை நீங்கி படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.