அத்திவரதரை அத்தனை சீக்கிரம் மறக்கமுடியுமா - நவராத்திரி கொலுப்படியில் குடியேற வீட்டுக்கு வரார்
நவராத்திரி நாட்களில் கொலு படிகளில் குடியேற நம் வீட்டிற்கு வரப்போகிறார் அத்திவரதர். அதற்காக அத்திவரதர் பொம்மைகளை அழகாக செய்து வருகின்றனர் கடலூர் மாவட்ட மக்கள். ஆன்லைனிலும் அத்திவரதர் பொம்மைகளை வாங்க மக
சென்னை: முப்பெரும் தேவியரை கொண்டாடும் நவராத்திரி பண்டிகை ஞாயிறு முதல் தொடங்க உள்ளது. இந்த நாட்களில் ஆலயங்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகைக்காக கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்படைந்த நிலையில் புது வரவாக அத்திவரதர் பொம்மைகள் அதிக அளவில் விற்பனையாகின்றன. காஞ்சிபுரத்தின் பெருமையை உலகறியச் செய்த அத்திவரதரை அத்தனை சீக்கிரம் மறக்க முடியுமா? அனைவரின் இல்லங்களில் குடியேறிய அத்தி வரதர் இந்த ஆண்டு நம்முடைய இல்லங்களின் கொலுவில் குடியேற வரப்போகிறார்.
நவம் என்றால் ஒன்பது. நவ கிரகங்கள் அருளோடு முப்பெரும் தேவியரான அலைமகள், மலைமகள், கலைமகளை கொண்டாடும் பண்டிகைதான் நவராத்திரி. பண்டிகை நாட்களில் பிரதமை தொடங்கி நவமி ஒன்பது நாட்களும் கொலு வைத்து கொண்டாடுவார்கள். கொலுவில் ஓரறிவு உயிரினங்கள் முதல் தெய்வங்களின் உருவங்கள் வரை படிகளில் வைத்து வணங்குவார்கள். அசுரனை வதம் செய்த பத்தாம் நாள் விஜயதசமி நாளுடன் நவராத்திரி பண்டிகை நிறைவடையும்.
வீடுகளில் பஜனைகள் பாடி சர்க்கரைப் பொங்கல், சுண்டல் செய்து வணங்குவார்கள். தினசரியும் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு குங்குமம் மஞ்சள் கொடுத்து இயன்ற அளவு தானம் கொடுப்பார்கள். கொலுவில் வைப்பதற்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பொம்மைகள் செய்யப்பட்டாலும் இந்த ஆண்டு நான்கு வேதங்கள், கடோத்கஜன், கும்பகர்ணன் உள்ளிட்ட பொம்மைகள் புதுவரவாக வந்துள்ளன.
அதே போல கிருஷ்ணன், விநாயகர் பல வடிவங்களில் செய்யப்பட்டாலும் அத்திவரதர் பொம்மைகள் இந்த ஆண்டு அதிகம் செய்யப்படுகின்றன. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வந்து 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆண்டு கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெற்றது.
உலகம் முழுவதிலும் இருந்து அத்திவரதரைக்காண பக்தர்கள் அலைமோதினர். அத்திவரதர் பக்தர்களுக்கு சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் காட்சி அளித்தார். இதை லட்சக்கணக்கான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர். அத்திவரதர் அனைவரின் உள்ளங்களிலும் குடியேறினார். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அனைவரின் இல்லங்களிலும் கொலு பொம்மையாக குடியேறப்போகிறார் அத்திரவரதர்.
அத்திவரதர் பொம்மைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கடலூர் பகுதியில் பொம்மைகள் தயாரிப்போரிடம் இருந்து அத்திவரதர் பொம்மைகளை தயாரித்த தர வியாபாரிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இதன்படி பொம்மை தயாரிப்போரும் அத்திவரதர் பொம்மைகளை தயாரிக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். 10 இன்ச் அளவு கொண்ட பொம்மை முதல் 2 அடி உயரம் வரை உள்ள அத்திவரதர் பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை ரூ.500 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைனிலும் அத்திவரதர் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கொலு வைக்காத வீடுகளிலும் இந்த அத்திவரதர் பொம்மைகள் அனைவரையும் கவர்ந்துள்ளதால் பலர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.