நாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி: கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாட்டம்
Recommended Video
சென்னை: நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான நவராத்திரி விழா நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் இந்த நவராத்திரி. ஒன்பது நாட்கள் போரிட்டு இறுதியில் மகிஷனை வதம் செய்து வெற்றி பெற்ற நாள்தான் விஜயதசமி.
நவராத்திரி என்றால் ஒன்பது இரவு பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்ற அர்த்தம் உண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா தான் இந்த நவராத்திரி திருவிழா. அசுரனை அழித்த விழா என்பதை விட மனிதர்களுக்கும் இதன்மூலம் பல நன்மைகள் உள்ளது. நம்முள் இருக்கும் சோம்பேறித்தனம் என்னும் மகிஷனை அழிக்கவே அதிகாலையில் சீக்கிரம் எழுந்து குளித்து விரதம் இருந்து அம்மனை வழிபடுகிறோம். இதன்மூலம் நம்முடைய சக்தி அதிகரிக்கும். தினசரியும் தொலைக்காட்சிகளில் மூழ்கிவிடும் பெண்கள் இந்த ஒன்பது நாட்களும் கொஞ்சம் டிவி சீரியலுக்கு விடை கொடுத்துவிட்டு கோவில்களிலும் அக்கம் பக்கத்து வீடுகளிலும் வைத்திருக்கும் கொலுவை பார்வையிட்டு பாடல்களை பாடி உற்சாகமடைந்துள்ளனர்.
நவராத்திரி பண்டிகை வட இந்தியாவிலும் கர்நாடக மாநிலம் மைசூருவிலும் மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மைசூரு தசரா போல தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
ஒன்பது நாட்கள் ஒன்பது அலங்காரம்
நவராத்திரி பண்டிகை அம்மனுக்காக கொண்டாடும் பண்டிகை. ஒன்பது நாளும் ஒன்பது விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. முதல்நாள் மகேஸ்வரி, இரண்டாம் நாள் ராஜராஜேஸ்வரி, மூன்றாம் நாள் வராகி, நான்காம் நாள் மகாலட்சுமி, ஐந்தாம் நாள் மோகினி வடிவம், ஆறாம் நாள் சண்டிகா தேவி, ஏழாம் நாள் சாம்பவி துர்க்கை, எட்டாம் நாள், நரசிம்ம தாரிணி, ஒன்பதாம் நாள் பரமேஸ்வரி என ஒன்பது நாட்களும் ஒன்பது அம்மன் அலங்காரம் மேற்கொள்ளப்படுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.
கன்னி பெண்களுக்கு பூஜை
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம். ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது. கன்னியின் வயதிற்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாட்களும் ஒன்பது கன்னிகைகளையும் ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்வது அளவிட முடியாத புண்ணியம் ஏற்படும். கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக கொடுக்க வேண்டும்.
கொலு கொண்டாட்டம்
நாடு முழுவதும் கோவில்களிலும் ஆலயங்களிலும் கொலு வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை.
நன்மைகள் நடக்கும்
ஒன்பது நாட்களில் லலிதாம்பிகையின் அவதார தினத்தில் ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும். நவராத்திரி பூஜை நேரத்தில் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஐந்து சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் கைகூடும்.
துன்பம் நீக்கும் பண்டிகை
தினசரியும் சுண்டல் செய்து படைக்கலாம். சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம். நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். நவகிரகங்களின் பாதிப்பினால் வரக்கூடிய துன்பங்கள் நீங்கும். நம்முள் இருக்கும் சோம்பேறித்தனங்கள் விலகி ஓடும் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.