மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா - கொலுமண்டபத்தில் எழுந்தருளிய அம்மன்
மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
மதுரை: நவராத்திரி விழா தமிழகமெங்கும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் முதல் நாளன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி பங்குனி உத்திரம் வரை 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இந்த கோவிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து மீனாட்சி, சொக்கநாதரை தரிசனம் செய்து செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள் அனைத்தும் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது.
லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 1 மாத காலமாக சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா சனிக்கிழமை தொடங்கியது வரும் 25ஆம் தேதி வரை விழா நடைபெறும்.
நவராத்திரி விழாவையொட்டி அம்மன் மற்றும் சுவாமி சன்னதி மற்றும் கொலுசாவடி முழுவதும் வண்ண, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. அனைத்து கோபுரங்கள் மற்றும் பொற்றாமரைக்குளம் பகுதியிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக நவராத்திரி கொலு நேரங்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொலுவை தரிசனம் செய்வதோடு அலங்கார ரூபமாய் காட்சி தரும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் அரசு விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் தான் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களும் சாமி தரிசனம்
செய்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருவிழா நாட்களில் மூலஸ்தானத்தில் உள்ள மீனாட்சி அம்மனை தினசரி மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும், பின்னர் இரவு 6.45 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம். தினசரியும் 5.30 மணி முதல் 6.45 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் நடைபெறுவதால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் உற்சவர் மீனாட்சி அம்மனை தரிசிக்க பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவையொட்டி அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர்
மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார். விழாவில் முதல்நாளன்று மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கொரோனா நோய் தொற்று காரணமாக சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் இந்தாண்டு கொலு பொம்மைகள் வைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக உற்சவர் மீனாட்சி அம்மன் அருகே 3 படிகளில் மீனாட்சி, சுந்தரேசுவரர், பெருமாள் சுவாமியின் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் அம்மன் அலங்கார ரூபமாக கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.