ஆவணி அமாவாசை சோடசக்கலை பூஜை: அஷ்ட லட்சுமியின் அருளோடு நினைத்தது நிறைவேறும்
Recommended Video
சென்னை: அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பவுர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16வதாக வரும் சோடசக்கலை நேரம் அற்புதமான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும். ஆவணி அமாவாசை திதி இன்று பிற்பகல் தொடங்கி நாளை வரை உள்ளது. சோடசக்கலை தியான நேரம் மாலை 3 .36 முதல் 5 .36 மணி வரையாகும். இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். அஷ்ட லட்சுமியின் அருளோடு செல்வ வளம் பெருகும்.
பணக்காரனாகவேண்டும், ஏன் கோடீஸ்வரனாகவேண்டும் என்று கூட பலருக்கும் ஆசை இருக்கும், அந்த ஆசை எப்படி நிறைவேறும். நன்றாக படித்து வேலைக்கு போய் கை நிறைய சம்பாதித்து சிக்கனமாக செலவு செய்து சேமித்து வைத்தால் பணம் கையில் சேரும். வீடு, கார் பங்களா என்று செட்டில் ஆகலாம். நினைத்ததை வாங்கலாம். இல்லை எனில் ஏழை, நடுத்தர மக்களாகவே வாழ்ந்து விட்டு போக வேண்டியதுதான்.
சேட்டுகள், மார்வாடிகள் எல்லோரும் தலைமுறை தலைமுறையாகவே செல்வந்தர்களாக திகழ காரணம் அவர்களின் நடைமுறை வாழ்க்கைதான். பணத்தை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. பணத்தை எப்படி பெருக்குவது பணத்தை எப்படி தக்க வைப்பது என்ற சூட்சுமம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அம்பானி, அதானி எல்லாம் எப்படி பணக்காரர்களாக மாறுகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பணம் பண்ணும் வழியும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
குபேரன் மகாலட்சுமி
சுக்கிரனும், குபேரனும் அன்னை மகாலட்சுமியும் பணக்காரர்கள் வீட்டில் மட்டும்தான்தான் தங்குவார்களா? நம்ம வீட்டிற்கு எல்லாம் வர மாட்டார்களா என்று பலரும் நினைப்பார்கள். மகாலட்சுமியையும், குபேரனையும் நம் வீட்டிற்கு வர வழைக்கவும், தங்க வைக்கவும் ஒரு பரிகாரம் உள்ளது. அதை செய்தால் கண்டிப்பாக நீங்களும் பணக்காரர்கள் ஆகலாம்.
அஷ்ட லட்சுமிகள் வருகை
வீட்டில் குப்பைகள் இருக்கக் கூடாது. சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமான வீட்டிற்குள்தான் மகாலட்சுமியின் நடமாட்டம் இருக்கும். பூஜை அறையில் பூக்களைப் போட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நறுமணம் கமழும் வகையில் வைத்திருக்க வேண்டும். எங்கே நறுமணம் திகழ்கிறதோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்வார்கள்.
அன்னதானத்தின் பலன்
மாதம் தோறும் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அன்னதானத்திற்காக ஒதுக்கி வையுங்கள். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் செய்யும் அன்னதானத்திற்கு அதிக பலன் உண்டு. முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். நல்லவை அதிகம் நடக்கும். பணம் வீட்டில் அதிகம் சேரும்.
சோடசக்கலை
சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். எல்லாம் வல்ல அன்னை அபிராமி ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு தேவியாகத் தோற்றமளித்து, தன்னை நாடும் பக்தர்களுக்கு அருளாசி புரிகின்றாள்.
தியானம் மந்திரம்
அமாவாசை முடிவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே தியானத்தை தொடங்க வேண்டும் பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வைக்க வேண்டும். சைவ உணவுதான் சாப்பிட வேண்டும். வயிறு காலியாக இருந்தாலும் நல்லதுதான். ஆசனத்தில் அமர்ந்து இறைவனை மந்திரங்களால் ஜபிக்க வேண்டும். மனதிற்குப் பிடித்த மந்திரத்தை மனதால் ஜபித்து தியானம் செய்யலாம்.
அமாவாசைத் திதி
அம்மாவசி தானான அரூபித் தாயே
அகண்டபரி பூரணியே யமலை சக்தி
நம்மாலே பாடரிது நினது பேரை
நாவிலே வந்தருள்செய் நாயே னுக்குத்
தம்மாலே சோடசதோத் திரம் விளங்கத்
தயவுசெய்து நின்பதத்தில் தரிப்பாய் தேவி!
சும்மா நீ இருக்காதே கண்பார்த் தாள்வாய்
சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!
பிரதமை திதி - ஸ்ரீகாமேஸ்வரிதேவி
பிரதமையில் பிரவிடையாய்ந் கலைவே றாகிப்
பின்கலைவிட் டிடகலையில் பிறந்த கன்னி
உறவாகி ரவியைவிட் டகலா நின்ற
உமையவளே என்பிறவி ஒழியச் செய்வாய்
இறவாத வரத்துடனே ஏமம் வாமம்
எட்டெட்டுஞ் சிந்திக்க எனக்குத் தந்து
சுருதியிலே வந்தருள்செய் அடியே னுக்குச்
சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!
படிக்க வேண்டிய மந்திரம்
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.
வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ பிரதமை, அமாவாசை.
நினைத்தது நிறைவேறும்
பூஜை அறையில் ஆசனத்தை விரித்து அமைதியாக வடகிழக்க திசையைப் பார்த்து கண்களை மூடி அமரவேண்டும். நம்முடைய தேவையை என்னவோ அதை நினைத்து தியானத்தில் இருக்க அவண்டும். இந்த தியானத்தை ஜாதி, மதம் கடந்து யார் வேண்டுமானாலும் செய்யலாம். நோய் தீர, கடன் தீர, வம்பு வழக்குகள் தீர, பிரிந்த தம்பதியர் சேர என எதை நினைத்து வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். நினைத்தது நிறைவேறிய உடன் அடுத்ததை நினைத்து தியானம் செய்யலாம். வீடு, பங்களா, கார், பணம், வேலை, காதல், திருமணம் என உங்களுக்கு என்ன விருப்பமோ, நல்லதாக நினைத்து மனதார வேண்டுங்கள். நாளைய தினம் தியானத்தில் அமரும் சோடசக்கலை தியான நேரம் மாலை 3 .36 முதல் 5 .36 மணி வரையாகும். இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும்.