ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021: எந்த ராசிக்காரர்களுக்கு பொற்கால ஆண்டு.. அதிர்ஷ்டம் தேடி வரும்
2021ஆம் ஆண்டு உற்சாகமாக பிறந்திருக்கிறது. உலகம் முழுவதும் கொண்டாட்டங்களுடன் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு பொற்கால ஆண்டாக அமையப்போகிறது என்று பார்க்கலாம்.
சென்னை: 2021ஆம் ஆண்டு நிறைய பேருக்கு பொற்கால ஆண்டாக அமைய ஒன் இந்தியா இணைய தளம் சார்பாக வாழ்த்துகிறோம். கடந்த கால கஷ்டங்களில் இருந்து பலரும் படிப்பினைகளை கற்றுக்கொண்டிருப்பார்கள். இனி எந்த பிரச்சினைகள் வந்தாலும் கவலையில்லை சமாளித்து விடலாம் என்ற தன்னம்பிக்கை வந்து விடும். இந்த புத்தாண்டில் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமான நிலையில் உள்ளதால் பலருக்கும் அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.
நவகிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியன் கால புருஷ தத்துவத்திற்கு ஒன்பதாம் வீட்டில் புதனுடன் இணைந்திருக்கும் போது பிறக்கிறது. கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்றிருக்கிறார். குருவும் சனியும் மகரத்தில் அமர்ந்து தர்ம கர்மாதிபதி யோகத்தை கொடுக்கப் போகின்றனர்.
சுக்கிரன், புதன் சஞ்சாரமும், செவ்வாயின் பயணமும் சாதகமான நிலையிலேயே இருக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் பலருக்கும் அதிர்ஷ்டங்கள் நிறைந்த ஆண்டாக பொற்கால ஆண்டாக அமையப்போகிறது.
மார்கழி நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 17 #Margazhi,#Thiruppaavai
மேஷம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்ட தேவதை தேடி வரும் ஆண்டாக அமையப்போகிறது. காரணம் பத்தாம் வீட்டில் அமர்ந்துள்ள சனியும் குருவும் நல்ல யோகங்களை தரப்போகிறார்கள். பெற்றோர்கள் ஆசியுடன், குருவின் ஆசி கிடைக்கும். தர்மகர்மாதிபதி யோகம் கூடி வந்துள்ளது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெருவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.
ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, நீங்கள் இந்த ஆண்டு தொட்டது துலங்கும். வெற்றியை நோக்கி பயணம் செய்யப்போகிறீர்கள். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இருக்கிறது அதிர்ஷ்டங்கள் தேடி வரும் பண வரவு அதிகரிக்கும். ஜென்ம ராசியில் ராகு இருப்பதால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து இருக்கவும், 3ல் சந்திரன் ஆட்சி பெற்றிருக்கும் போது வருடம் பிறக்கிறது தைரியம் தன்னம்பிக்கை கூடும். குல தெய்வ வழிபாடு செய்யவும் மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
மிதுனம்
2021ஆம் ஆண்டு மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது. கடந்த ஆண்டு அதிகம் கஷ்டப்பட்டது நீங்கதான். குடும்பத்தில் பல சிக்கல்களை சந்தித்து இருப்பீர்கள். நிறைய இழப்புகள், அவமானங்களை சந்தித்து இருப்பீர்கள். இனி உங்களின் கனவுகள் நனவாகும். லாபதிபதி லாபத்தில் இருப்பதால் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலை சாற்றி வணங்கவும்.
கடகம்
சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே, உங்க ராசிநாதன் சந்திரன் ஆட்சி பெற்றிருக்கும் போது புது வருடம் பிறக்கிறது. புகழ் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். 2021ஆம் ஆண்டு ஒளிமயமான ஆண்டாக அமையப்போகிறது. இந்த ஆண்டு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உங்கள் இலக்கை அடைவீர்கள். லட்சியத்தில் வெற்றி பெற வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள்.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, 2021ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. கடன் நோய் எதிரி தொல்லை நீங்கும். தொழிலில் லாபமும், மாத வருமானமும் வரும். எதிரிகள் நண்பர்களாக மாறக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வெற்றிகள் கைகூடி வரும். உங்களின் புகழ் கூடும். உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முன்னோர்களை வழிபடலாம். தினசரியும் சூரிய வழிபாடு செய்யவும். ஞாயிறுக்கிழமைகளில் கோதுமை தானம் செய்யவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முயற்சிகள் பலிதமாகும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சுபிட்சம் ஏற்படும். பேச்சில் இனிமை கூடும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சனி இணைந்திருப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பல ஆண்டுகாலமாக இழுத்தடித்த வழக்கு முடிவுக்கு வரும். சொத்துக்கள் வாங்குவீர்கள். வருமானம் அதிகரிக்கும். இந்த ஆண்டு ஒருமுறை ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் ரங்கமன்னாரை வழிபட நன்மைகள் நடைபெறும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே நீங்கள் நீதிமான். எதையும் வெட்டு ஒன்று துண்டு 2 என்று பேசுவீர்கள். இந்த ஆண்டு அர்த்தாஷ்டம சனி நான்காம் வீட்டில் குரு இருந்தாலும் பிரச்சினையில்லை செவ்வாய் பார்வை கிடைப்பதால் இந்த ஆண்டு குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். எட்டில் உள்ள ராகு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நல்ல தன லாபத்தை கொடுக்கும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குருவின் பார்வையால் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். செவ்வாய்கிழமை கால பைரவர் வழிபாடு உங்களுக்கு நன்மையை கொடுக்கும். ஞாயிறுக்கிழமைகளில் யோக நரசிம்மரை வழிபடலாம்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இந்த ஆண்டு மறக்கமுடியாத ஆண்டாக அமையப்போகிறது. உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குரு நீசபங்கம் பெற்றிருக்கிறார். ஏழரை சனியில் இருந்து விடுபட்டிருக்கிறீர்கள். கவலைகள் கஷ்டங்கள் நீங்கிவிடும். மிகப்பெரிய சாதனைகளை செய்யப்போகிறீர்கள். இந்த ஆண்டு குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வெற்றிகள் தேடி வரும் ஆண்டாக பொற்கால ஆண்டாக அமையப்போகிறது. பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெற பழனி தண்டாயுதபாணியை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும் மனோ தைரியம் அதிகரிக்கும். நாகாத்தம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.
தனுசு
குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த ஆண்டு பிறக்கும் போது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கிறார். கவலைகள் தீரும் ஆண்டாக அமைகிறது. தனம் தான்யம் அதிகரிக்கக் கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. ஏழரை சனி பாத சனியாக தொடர்கிறது என்பதால் எதையும் யோசித்து செய்யவும். நீங்கள் தொட்டது துலங்கும். ராசிக்கு இரண்டாம் வீட்டில் குரு இருப்பதால் இந்த ஆண்டு மிகக்சிறந்த பொற்காலமாக அமைகிறது. வியாழக்கிழமைகளில் ராகவேந்திரரை வணங்கலாம்.
மகரம்
சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்கள் இந்த ஆண்டு எச்சரிக்கையுடன் அடி எடுத்து வைக்கவும். ஜென்ம சனி, ஜென்ம குரு இருப்பதால் நிதானம் தேவை. அவரசப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். மகரம் ராசிக்காரர்கள் அகலக்கால் வைக்க வேண்டாம். இருப்பதை விட்டு பறக்க ஆசைப்படாதீங்க. ஆண்டு பிற்பகுதியில் அதிர்ஷ்டம் தேடி வரும், வெற்றிகள் கைகூடி வரும். காரியத்தில் கண்ணாக இருந்து சாதிப்பீர்கள். இந்த ஆண்டு ஒருமுறை திருநாள்ளாறு சனிபகவானை வழிபட்டு வரவும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு விரைய சனி விரைய குரு இருப்பதால் தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம். மூன்றாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும் இந்த ஆண்டு யோகங்களும் அதிஷ்டங்களும் நடைபெற வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபாடு செய்யவும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் இந்த ஆண்டு செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். ராஜகிரகங்களின் சஞ்சாரம் சாதகமான நிலையில் உள்ளன. எனக்கு ராஜாவா நான் வாழுறேன் என்று பாடும் அளவிற்கு இந்த ஆண்டு பொற்கால ஆண்டாக அமைந்துள்ளது. லாப குரு, சனி, வருமானத்தை அள்ளிக்கொடுக்கப்போகிறார்கள். 30ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செல்வம் செல்வாக்கு மீண்டு வரும். எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். ராஜ கிரகங்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் குல தெய்வ வழிபாடு மறக்காமல் செய்யவும் நன்மைகள் அதிகம் நடைபெறும்.