கலைமகள், அலைமகள், மலைமகள்... முப்பெரும் தேவியரை போற்றும் நவராத்திரி
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியை போற்றும் வகையில் 9 நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சென்னை: சிவனுக்கான ஒரு ராத்திரி சிவராத்திரி. அன்னைக்கான ஒன்பது ராத்திரி நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் அன்னையை எந்த அம்சமாக கொண்டாடப்பட வேண்டும் என்பதைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ளலாம்.
நவராத்திரி பூஜை மட்டும் ஏன் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என வணங்குகின்றனர் என்ற கேள்வி எழுவது இயல்பு. கலைமகளுக்குத்தானே முதல் பூஜை செய்யவேண்டும். ஏன் இங்கே அலைமகளுக்கு முதல் பூஜை என்ற கேள்வி நியாயப்படி எழுவது இயல்பு.
சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்றுதான் வரும். ஆனால் நவராத்திரியின்போது மட்டும் ஏன் இந்த முறை மாற்றமடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று வருகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.
துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள். நவராத்திரியின்போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம் என்பதுதான் காரணம்.
ராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள்.
9 நாட்களிலும் அன்னையை வழிபடும் முறையை அறிந்து கொள்வோம்:
சாமுண்டியை வணங்குவோம்
நவராத்திரியின் முதலாம் நாளில் நாம் சக்தித் தாயை சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்ததால், சாமுண்டா எனவும் அழைப்பர். முதல் ராத்திரியின்போது மலர்களால் அலங்கரித்து வழிபட்டால் சர்வமங்கள ரூபிணியாக அவள் நமது கிரகத்தில் கொலு வீற்றிருப்பாள்.
வராஹிதேவி
இரண்டாவது ராத்தியின்போது அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். ஆபரணங்களை அவளுக்கு அணிவித்தால் சர்வபூர்ண பூஜிதமாக அருள் பாலிப்பாள்.
பூஜைக்கு மகிழும் அன்னை
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். மூன்றாவது ராத்திரியின்போது முதலில் செய்வித்த பூஜைகளுக்கு மகிழ்ந்து ஞானத்தை நமக்கு அளிக்கிறாள்.
மகாலட்சுமியை வணங்குவோம்
முதல் மூன்று நாட்களிலும் மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் துர்க்கையிடமிருந்து பெறும் நாம், அடுத்த மூன்று நாட்களிலும், மகாலட்சுமியை பூஜிக்க வேண்டும். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை நான்காவது நாளில் இருந்து பூஜிக்கின்றனர்.
வைஷ்ணவி தேவி
சக்தியை நான்காம் நாள் அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள்.அன்னைக்கு பாசம் அதிகம். அதனால் என்னை பூஜிப்பவர்களை எப்போதும் கைவிட மாட்டேன் என்று கூறுகிறாள். ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். சகல சவுபாக்கியங்களும், ஆயுள் விருத்தியும் கிட்டும். பஞ்ச பூதங்கள் நம்மை சரிவர நடத்தும்.
தேவி கவுமாரி
ஆறாவது நாளில் அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். அறுசுவையுடன் அல்லாது போனாலும், பசியின்றி இருக்க உணவு கிடைக்கும் வண்ணம் நம்மை மகாலட்சுமி காத்தருளுவாள். இந்த ஆறு நாட்களும் முடிந்த பிறகு வித்தைக்கு அதிபதியான சரஸ்வதியை வணங்க வேண்டும்.
கலைவாணியின் அருள்
ஏழாவது நாளில் நாதஸ்வரூபமாக எழுந்தருளும் கலைவாணி நமக்கு வினயத்தைத் தந்தருளுகிறாள். எட்டாவது நாளில் வாழ்க்கையில் எட்டாததையும் எட்டச் செய்து நமக்கு ஏற்றத்தை அளிக்கிறாள் அன்னை. ஒன்பதாவது நாளில் அழியாத தன்மையைத் தருகிறாள். செல்வம் அழிந்தாலும் கற்ற வித்தை அழியாது என்பதை உணர்த்துகிறாள் தேவி சரஸ்வதி
பத்தாவது நாள் விஜயதசமி. விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.