நலம் தரும் நவராத்திரி - முப்பெரும் தேவியரை வணங்குவோம்
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியை போற்றும் வகையில் 9 நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சென்னை: சிவனுக்கான ஒரு ராத்திரி சிவராத்திரி. அன்னை பார்வதிக்கான ஒன்பது ராத்திரி நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் அன்னையை எந்த அம்சமாக கொண்டாடப்பட வேண்டும் என்பதைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ளலாம்.
நவராத்திரி பூஜை மட்டும் ஏன் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என வணங்குகின்றனர் என்ற கேள்வி எழுவது இயல்பு. கலைமகளுக்குத்தானே முதல் பூஜை செய்யவேண்டும். ஏன் இங்கே அலைமகளுக்கு முதல் பூஜை என்ற கேள்வி நியாயப்படி எழுவது இயல்பு. சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்றுதான் வரும். ஆனால் நவராத்திரியின்போது மட்டும் ஏன் இந்த முறை மாற்றமடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று வணங்குகிறோம்.
துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள். நவராத்திரியின்போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம் என்பதுதான் காரணம். ராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள்.
நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் பகலில் ஆயிரெத்தெட்டு சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும். நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.
நவராத்திரி நாட்களில் வீட்டில் கோலமிடுவதற்கு சுண்ணாம்பு மாவை பயன்படுத்தக்கூடாது அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். இவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும் என்பது ஐதீகம். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.
9 நாட்களிலும் அன்னையை வழிபடும் முறை:
1. பிரதமை - புரட்டாசியில் வரும் மகாளயபட்ச அமாவாசைக்கு அடுத்த நாளாகிய பிரதமை திதியிலிருந்து துவங்கி நவமி வரையாகிய ஒன்பது நாட்களும் பல்வேறு ரூபங்களில் அம்பிகை நமக்கு அருள்பாலிக்கிறாள். நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.
2. துவிதியை - இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி தேவியாக போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும்.
3. திரிதியை - மூன்றாவது நாளுக்கு உரிய வாராகி அன்னை, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.
4. சதுர்த்தி - நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
5. பஞ்சமி - ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை.
6. சஷ்டி - ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம் இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. இவள் விரும்புவது தேங்காய் சாதம்.
7. சப்தமி - ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து வழிபடலாம்.
8. அஷ்டமி - எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, சர்க்கரை பொங்கல் படையல் இட்டு வழிபடலாம்.
9. நவமி - ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம். இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து
10. பத்தாவது நாள் விஜயதசமி. விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.