செல்வ வளம் தரும் நவராத்திரி வழிபாடு
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
நவராத்திரி பூஜை என்பது ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும் பொதுவாக நவரத்திரி பூஜை வருடத்திற்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
பொதுவாக புரட்டாசி மாதத்தில் தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். இந்த வருடம் 13-10-2015 முதல் 22-10-2015 வரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.
ஆனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வாராஹி நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
புரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
தை மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
மேற்கண்ட நான்கு நவராத்திரிகளில் சாரதா நவராத்திரி இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கொண்டடப்படுகிறது. வசந்த நவராத்திரி மேற்கு வங்காளம் குஜராத் போன்ற சில மாநிலங்களிலும் வாராஹி நவராத்திரியும் சியாமளா நவராத்திரியும் சில ஊர்களிலும் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது.
சக்தி வடிவம்
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம்.
முதல் நாள் மஹேஸ்வரி பாலா 02
இரண்டாம் நாள் கௌமாரி குமாரி 03
மூன்றாம் நாள் வாராஹி கல்யாணி 04
நான்காம் நாள் மஹாலட்சுமி ரோகிணி 05
ஐந்தாம் நாள் வைஷ்ணவி சுபத்ரா 06
ஆறாம் நாள் இந்திராணி காளிகா 07
ஏழாம் நாள் சாமுண்டி சண்டிகா 08
எட்டாம் நாள் நரசிம்ஹி தருணி 09
ஒன்பதாம் நாள் சரஸ்வதி சுமங்கலி 10
மேற்கண்ட அட்டவணைப்படி கன்னியின் வயதிற்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாட்களும் ஒன்பது கன்னிகைகளையும் ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்வது அளவிட முடியாத புண்ணியம் ஏற்படும். கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.
குழந்தையும் தெய்வமும்
இன்று முதல் ஒன்பது நாட்கள் கொலு வைத்து பூஜித்தால் எல்லா தெய்வ வடிவங்களிலிருந்தும் பராசக்தி வெளிப்படுவாள் என்பது ஐதீகம்.
ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து
வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.
நவராத்திரி கொலு
அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.
வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.
ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும்
என்பது நம்பிக்கை.
நவராத்திரி விரதம்
நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.
சகல செல்வங்களும் கிடைக்கும்
நவராத்திரி நாட்களில் இரவு ஏழு மணி முதல் ஒன்பதரை மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
கொலு பாடல்கள்
ஈசனும் அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை ஒன்பது நாட்களும் தரிசித்தால் நவராத்திரி பூஜை செய்த பலன்கள் கிடைக்கும். அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.
அம்பிகை வழிபாடு
நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று ஸ்ரீஹயக்கிரீவரை வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதாசகரஸ்ர நாமத்தையும் ஓதுவது சிறப்பான பலன்களைத் தரும்.
அம்பிகை வழிபாடு
நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் பகலில் ஆயிரெத்தெட்டு சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும். நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.
அரிசி மாவில் கோலம்
நவராத்திரி நாட்களில் வீட்டில் கோலமிடுவதற்க்கு சுண்ணாம்பு மாவை பயன்படுத்தக்கூடாது அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். இவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும் என்பது ஐதீகம். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.
அம்பிகை அருள்
நவராத்திரி ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும். கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும்கிடைக்கும்.
ஏழைகளுக்கு தானம்
தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவி புரிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பது மிகமிக முக்கியம்.
நவதானிய சுண்டல்
நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள். சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம். நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.
செல்வம் பெருகும்
ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக் கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை தேவியின் நாமத்தை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நமஹ என்று நூற்றியெட்டு முறை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.
நவராத்திரி விரதம்
ஆதி காலத்தில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தை மாதத்தில் நடந்திருக்கின்றன. நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும் கட்டிலில் தூங்கக்கூடாது.
திருமணம் கைகூடும்
நவராத்திரி ஒன்பது நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று ஐந்து சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் கைகூடும்.
தானத்தின் பலன்
நவராத்திரி ஒன்பது நாட்களில் வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
பூஜை வழிபாடு
நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவி யரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி ஸங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை, கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதுர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம் கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.
வாழ்வில் வளம் கிடைக்கும்
நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தேவியை வணங்குவோம் வாழ்க்கையில் வளம் பெறுவோம்.