Nirjala Ekadashi 2020 : பாண்டவ நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால் எவ்வளவு புண்ணியம் தெரியுமா
ஒரு ஏகாதசி விரதம் இருந்தாலே ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலனை கொடுப்பது பாண்டவ நிர்ஜல ஏகாதசி விரதம்.
சென்னை: வைகுண்ட ஏகாதசி விரதம் பற்றி பலருக்கும் தெரியும் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்வார்கள். நிர்ஜல ஏகாதசி விரதம் பலருக்கும் தெரியாது. இந்த விரதம் கடைபிடிப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்றும் 24 ஏகாதசி விரதம் கடைபிடித்த பலன் கிடைக்கும் என்று பீமனுக்கு எடுத்துக் கூறியுள்ளார் வியாசர். மகிமை வாய்ந்த நிர்ஜல ஏகாதசி விரதம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கோவிலுக்கு செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே பெருமாளை வணங்கி விரதம் இருக்கலாம்.
விரதங்களிலே சிறப்பு வாய்ந்து ஏகாதசி விரதம் என்று பெருமாளே கூறுவதாக புராணங்கள் கூறுகின்றன. மனிதன் பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதையே விரும்புகிறான். அந்த நோக்கத்தை அடைய செய்யக்கூடியது இந்த ஏகாதசி விரதம். எனவேதான் விஷ்ணுவைவிட உயர்ந்த தேவரில்லை. தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை. காயத்ரியை விட உயர்ந்த மந்திரமில்லை. ஏகாதசியைவிட சிறந்த விரதமில்லை என புராணங்களும் அதைப் போற்றுகின்றன.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப்படுகின்றன. ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி களிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. அதன்படி ஏகாதசி அன்று முழு உபவாசம் இருக்க வேண்டும். பால்,பழம்,கிழங்கு மட்டும் சாப்பிடலாம்.மறுநாள் அதாவது துவாதசி அன்று ஆரத்தி எடுத்து விட்டு துளசி தீர்த்தம் குடித்துவிட்டு பின்னர் சாப்பிடலாம்.
சந்திர கிரகணம் 2020: ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம் எங்கு யாரெல்லாம் பார்க்கமுடியும்
ஏகாதசி விரத மகிமை
சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றிவர ஏறக்குறைய இருபத்து ஒன்பதறை நாட்கள் ஆகின்றன. ஒவ்வொருநாளும் ஒரு திதி எனப்படும்.
ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரையில் உள்ள 15 திதிகள் சுக்லபட்சம். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் உள்ள 15 திதிகள் கிருஷ்ணபட்சம். ஏகாதசியன்று விரதமிருந்தால், முதல் பத்து நாட்கள் உணவு உட்கொண்டு, அதனால் உள்ளே சேர்ந்துள்ள கழிவுப் பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன. பதினோராவது நாளான ஏகாதசியன்று வயிறு சுத்தமாகிறது. அன்று ஜீரணக் கருவிகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது. மறுநாள் துவாதசி தினத்தில் சத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடலாம்.
ஏகாதசி விரத மகிமை
"தர்மபுத்திரா, எல்லாத் துன்பங்களையும் நீக்கக் கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே. ஏகாதசியன்று, உபவாசம் இருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை. சகல விதமான சாஸ்திரங்களும் இதைத் தான் சொல்கின்றன'' என்று பதில் சொன்னார் வியாசர். அப்போது அருகில் இருந்து இதைக் கேட்ட பீமன், "உத்தமரான முனிவரே, என்னுடன் பிறந்தவர்கள் எல்லாம் ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். என் தாயும் மனைவியும்கூட ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் என்னையும் ஏகாதசி விரதம் இருக்க சொல்கிறார்கள் என்னால் செய்ய கூடியதா அது? என்று கேட்டார்.
அடங்காத நெருப்பு
ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேளை சாப்பிடாமல் இருப்பதே என்னால் முடியாது. என்னைப் போய் முறையாக உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் இரு என்றால் நடக்கக் கூடியதா இது. விருகம் என்னும் ஒரு தீ என் வயிற்றில் இருக்கிறது. ஏராளமான உணவைப் போட்டால் ஒழிய, என் வயிற்றில் இருக்கும் நெருப்பு அடங்காது. வருடத்துக்கு ஒரே ஒரு நாள் என்னால் உபவாசம் இருக்க முடியும். எனவே எனக்குத் தகுந்தாற்போல நான் எல்லா விதமான ஏகாதசிகளின் பலனையும் பெரும் விதம் ஓர் ஏகாதசியை எனக்குச் சொல்லுங்கள் என வேண்டினான்.
பீமன் இருந்த ஏகாதசி விரதம்
கவலைப்படாதே பீமா. உனக்காகவே ஒரு ஏகாதசி இருக்கிறது ஆனால் அது கடுமையானது. ஜேஷ்டா மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. அந்த ஏகாதசி விரதத்தை நீ கடைப்பிடி என வழிகாட்டினார் வியாசர். வியாசரை வணங்கிய பீமன் நிர்ஜல ஏகாதசி அன்று தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்தான். மறுநாள் துவாதசி அன்று உணவு உண்டான். அன்று முதல் அந்த துவாதசி பாண்டவ துவாதசி என்றும், பீமன் விரதம் இருந்த அந்த ஏகாதசி பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படலாயிற்று. துன்பங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி இது.
வைகுண்ட பதவி கிடைக்கும்
நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால் மற்றைய ஏகாதசி விரதமிருந்த பலனுண்டு. இந்த ஏகாதசி விரதமிருப்போரை வைகுண்டத்தின் தூதுவர்கள் இறப்பிற்கு பின் நேரடியாக வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார்கள். புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும். வாழ்வில் வளமும் செல்வமும் பெருகும். பிறவி பிணி நீங்கும். நிர்ஜல ஏகாதசியை பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும். தனம், தானியம் உள்ளிட்ட சகல ஐஸ்வர்யங்களும் தேடி வரும்.
பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்
ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம். இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள். இன்று துவாதசியுடன் இணைந்த ஏகாதசி வருவது சிறப்பு இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள். வயதானவர்களுக்கு குடை, செருப்பு தானமாக கொடுக்கலாம்.