மரணயோகம்... ராகுகாலத்தில் பட்ஜெட் தாக்கல்- நிர்மலா சீதாராமன் சென்டிமெண்ட்
நல்ல செயலை செய்யும் முன்பு நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டும் என்பார்கள். ராகு காலம், எமகண்டம், குளிகை காலத்தை தவிர்த்து விடுவார்கள்.
டெல்லி: இன்றைய தினம் நிறைந்த வெள்ளிக்கிழமை வளர்பிறை திருதியை திதி முழுக்க மரணயோகம் நிறைந்த நாள். இந்த நாளில் காலை 10.30 முதல் 12 மணிவரை ராகு காலம். இந்த நாளில் நாட்டின் வரவு செலவுக்கு தேவையான நிதியை ஒதுக்கும் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
ராகு பகவான் ஒரு செயலை பெருக்குவார். எது கொடுத்தாலும் அள்ளிக்கொடுப்பார். ராகுவின் அதி தேவதை துர்க்கை எனவேதான் ராகு காலம் துர்க்கா வழிபாட்டிற்கு உகந்ததாக உள்ளது. ராகு காலம் நல்லது செல்ல தவிர்க்க வேண்டிய நேரம் என்று ஜோதிட ரீதியாக கூறினாலும் ராகுதிசை, ராகு புத்தி நடப்பவர்கள் ராகு காலத்தில் செய்யும் செயல் நன்மையில் முடியும். ராகு அள்ளிக்கொடுப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை ராகு காலத்தில் தாக்கல் செய்துள்ளார்.
நல்ல செயலை அல்லது புதிய முயற்சி ஒன்றை நாம் தொடங்கும்போது நல்ல நேரம் பார்த்தே செய்வார்கள். ஒவ்வொரு நாளும் வரக்கூடிய ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களில் புதிய முயற்சிகள் எதையும் தொடங்குவதில்லை. லோக்சபா தேர்தல் அறிவிப்பு ஞாயிறு மாலை ராகு காலத்தில் வெளியிட்ட போதே ராகு காலம் பற்றிய பேச்சு எழுந்தது. ஜோதிடர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். இப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராகுகாலத்தில் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
நிறைய வளரும்
வளர்பிறை திருதியை வளம் பெருகும் நாள். திருதியை நாளில் தொடங்கும் செயல்கள் மேலும் மேலும் வளரும். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வளர்ப்பிறை திருதியை நாள், ஆயில்யல் நட்சத்திரம், மரணயோகம் கொண்ட நாள். செல்வம் பெருகவேண்டும். வருமான பற்றாக்குறை நீங்க வேண்டும் என்பதற்காகவே இன்று ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன். ஆனால் அவர் நல்ல நேரத்தில் வீட்டை விட்டு கிளம்பி நாடாளுமன்றத்திற்குள் வந்து விட்டார் என்பதுதான் முக்கியம்.
நல்ல நேரங்கள் இல்லை
ஒரு நாளில் சரியில்லாத நேரம் என்று ராகு காலம் மற்றும் எமகண்ட நேரங்களைச் சொல்லுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தை வகுத்த ரிஷிகள், நவகிரகங்களில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கு ஏழு நாள்களை ஏற்படுத்தினர். ராகு, கேது ஆகிய சாயா கிரகங்களுக்கு நாள்களை ஒதுக்க முடியவில்லை. எனவே, ஒவ்வொரு நாளும் பகல் 1 மணி 30 நிமிடம், இரவு 1 மணி 30 நிமிடம் என்று ராகு, கேதுக்களுக்கு ஒருநாளுக்குத் தலா 3 மணி நேரம் ஒதுக்கித் தந்தனர்.
ராகுபகவான் அள்ளி கொடுப்பார்
ஜாதகத்தில் ராகு, கேது என்பவை சர்ப்ப கிரகங்கள் என்பதால், அவற்றை விஷக் காலமாகக் கருதுகின்றனர். அதனால் சுபகாரியங்களுக்கு ஏற்ற காலமாகக் கருதப்படவில்லை. இதில், ராகு காலத்தில் எந்தச் செயலையும் செய்யலாம், பாதிப்பு இல்லை. எமகண்டத்தில்தான் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது. அழிவை நோக்கிப்போகும்.
ராகுவினால் நன்மை
ராகு காலம் என்பது எல்லோருக்கும் தீமையைத்தான் செய்யும் என்று சொல்ல முடியாது. ஒன்பது கிரகங்களும் நல்லதும் செய்யும் கெட்டதும் செய்யும். ராகு காலம் என்பது சிலருக்கு நல்லதையே செய்யும். அதை அவரவர்களின் ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் நிலை, தசா புக்தியில் தற்போது நடக்கும் தசை இவற்றை வைத்தே முடிவு செய்ய முடியும்.
தொட்டது துலங்காது
மரணயோகத்தில் எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது. தவிர்க்க வேண்டிய யோகம். மரண யோகம்! மரண யோகத்தன்று ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது. அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்து பிரிந்து விடுவார்கள். மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். நற் செயல்களுக்கு மரணயோக நாட்களைத் தவிர்ப்பது நல்லது.
மரணயோகம்
வெள்ளிக்கிழமை ஆயில்யம் நட்சத்திரம் இன்று முழுக்க மரணயோகம். இந்த நாளில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது. இதுபோல முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் செயல்களை அன்று செய்யலாம். பட்ஜெட்டில் பற்றாக்குறை இன்றி இருக்க பணம் மேலும் பெருக ராகு காலத்தில் மரணயோக நாளில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். எந்த நேரம் எந்த யோகமாக இருந்தால் என்ன மக்களிடம் பணப்பற்றக்குறை நீங்கி செழிப்பாக இருந்தால் சரிதான்.