லோக்சபா தேர்தலில் பாஜக,காங்கிரஸ் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது - ஜோதிடர்கள் கணிப்பு
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சென்னை: தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சு வார்த்தைகள், தொகுதிப்பங்கீடுகள் என அரசியல் கட்சிகள் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க கருத்துக்கணிப்புகளும் வெளியாகி அரசியல்வாதிகளிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன. ஜோதிடர்களும் தங்களின் பங்குக்கு கணிப்புகளை கூறி வருகின்றனர். நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்கட்சியான காங்கிரஸ் என எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ராசிகளில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வை, நட்சத்திரங்களின் சஞ்சாரம் ஆகியவை யாருக்கு சாதகமாக இருக்கிறதோ அந்த கட்சிக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு அமையும். 2029ஆம் ஆண்டு வரை மோடிக்கு சாதகமாக இருக்கிறது என்று சில ஆண்டுகளாகவே ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.
ராகு காலத்தில் தேர்தல் தேதியை அறிவிச்சாச்சு... இது ராகு திசை நடக்கிற ராகுல்காந்திக்கு சாதகம் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். ராகுல் காந்தி இந்தியாவை ஆளும் காலம் வந்தால் அதுதான் இந்தியாவுக்கு 'ராகுகாலம்' மக்களே உஷார்!! பாஜகவினர் கூறி வருகின்றனர்.
ராகுல் காந்தி மட்டுமில்ல ஈசானியத்துல இமயமலை உயரமா பாரமா இ௫க்குறவரை எந்த காந்தி வந்தாலும் இந்தியாவுக்கு 'இராகு கேது காலம்தான்' என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். அதெல்லாம் இருக்கட்டும் இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கப்போகிறது என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.
பங்குனி உத்திரம் 2019 - முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பார்க்க திருப்பரங்குன்றம் வாங்க
ஏழு கட்ட வாக்குப்பதிவு
நாட்டில் மொத்தம் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மொத்த லோக்சபா தொகுதிகளில் 131 தொகுதிகள் தனித் தொகுதிகள் அந்த 131 தொகுதிகளில் பட்டியல் சாதிகளுக்கு 84 தொகுதிகளும், 47 தொகுதிகள் பட்டியல் பழங்குடி மக்களுக்கு எனவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த தனித் தொகுதிகளில் முறையே, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மட்டுமே போட்டியிட முடியும்.
ஆட்சி அமைக்க தேவை 272
பொதுத் தேர்தலில் ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டுமானால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு சில தொகுதிகள் குறைவாக இருந்தால், பிற கட்சிகளிடம் இருந்தோ, சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் கூட்டணி வைத்தும் ஆட்சி அமைக்கலாம். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வீசிய அலையில் பாஜக வென்றது.
புல்வாமா தாக்குதல் அலை
இந்த லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான பிரச்சாரங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவமும் அதற்கு இந்திய அரசு மேற்கொண்ட தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் என இளைய தலைமுறை வாக்காளர்களை மோடியின் பக்கம் சாய வைத்துள்ளது. இது பாஜகவிற்கு சாதகமான நிலையாக இருந்தாலும் மோடிக்கு இந்த தேர்தல் சாதகமாக இல்லை என்று கூறுகின்றனர் ஜோதிடர்கள்.
கிரகங்களின் கூட்டணி சாதகமா
தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஏப்ரல், மே மாதங்களில் தனுசு ராசியில் சனியோடு கேது அமர்கிறார். மிதுன ராசியில் ராகு அமர்கிறார். விருச்சிகத்தில் உள்ள குருபகவான் அதிசாரமாக தனுசு ராசியில் மூல நட்சத்திற்கு செல்கிறார். மே 18 வரை சஞ்சரிக்கும் அவர் பின்னர் வக்ர கதியில் பயணிக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் மோடி, ராகுல்காந்தி இருவருக்குமே ஆதரவானதாகவே இருக்கிறது. அதே நேரத்தில் செவ்வாய் மார்ச் 22ஆம் தேதியன்று ரிஷப ராசிக்கு செல்கிறார் மே 7ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இது மோடிக்கு சாதகமில்லை என்கிறார் ஜோதிடர் சர்மா.
சனி செவ்வாய் யுத்த கிரகங்கள்
பொதுவாகவே சனியும் செவ்வாயும் பகை கிரகங்கள். இந்த கிரகங்கள் ஒரு ராசியில் இணைந்து இருந்தாலோ, நேருக்கு நேராக பார்த்தாலோ நாட்டில் வன்முறை, தீ விபத்து, போராட்டம் நடைபெறும். மே 8ஆம் தேதிக்கு மேல் மிதுனத்தில் செவ்வாய் அமர்வதால் தேர்தல் வாக்குப்பதிவின் போது வன்முறை வெடிக்கும் என்றும் எச்சரிக்கிறார் ஜோதிடர்.
மோடிக்கு சாதகமில்லை
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே கிரகங்கள், நட்சத்திரங்களின் சஞ்சாரம் ஆளும் பாஜகவிற்கு சாதகமில்லை. எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே உள்ளது. இதன் காரணமாகத்தான் சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆளும் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது என்கிறார் ஜோதிடர் சர்மா. அதேபோல இப்போதைய கிரகங்களின் சஞ்சாரமும் மத்தியில் ஆளும் கட்சிக்கு சாதகமானதாக இல்லை என்கிறார் ஜோதிடர் சர்மா.
கூட்டணி ஆட்சி
தற்போது உள்ள சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது ஆளும் கட்சிக்கோ, எதிர்கட்சிக்கோ ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை கிடைக்காது. மாநிலக்கட்சிகளின் தயவை நாட வேண்டியிருக்கும். மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் ஜோதிடர் சர்மா கூறியுள்ளார்.