அக்டோபர் மாத ராசி பலன் 2020: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு பலன்கள் பரிகாரங்கள்
துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் யோகமான மாதமாக அமைந்துள்ளது.
சென்னை: அக்டோபர் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் துலாம், விருச்சிகம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. அக்டோபர் மாதம் கன்னி மாதம் பாதி நாட்களும், துலாம் மாதம் பாதி நாட்களும் இணைந்தது. புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஐப்பசியில் துலாம் ராசிக்கு மாறுகிறார். சூரியன் துலாம் ராசியில் நீச்ச நிலையில் சஞ்சரிப்பார். இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
அக்டோபர் மாதம் மற்ற கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் கன்னி மற்றும் துலாம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் மேஷம் ராசியில் இருந்து வக்ரகதியில் மீனம் ராசிக்கு பயணம் செய்கிறார். ரிஷபத்தில் ராகு சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் சுக்கிரன் பயணம் செய்கிறார் 23ஆம் தேதி கன்னி ராசிக்கு வந்து நீச்சமடைகிறார்.
கன்னி ராசியில் உள்ள சூரியன் 17ஆம் தேதி வருகிறார். புதன் துலாம் ராசியில் இருந்து வக்ரகதியில் கன்னி ராசிக்கு வருகிறார். விருச்சிகத்தில் கேது சஞ்சரிக்க தனுசு ராசியில் குரு, மகரம் ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இந்த கிரகங்களின் மாற்றம் கூட்டணியால் துலாம்,விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். எந்த விசயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
லாபகரமான மாதம்
சூரியன் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் மாத பிற்பகுதி வரைக்கும் இருப்பதால் சுப விரைய செலவுகள் வரும். உங்க ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நிறைய லாபங்கள் வரும். திருமணம் கைகூடி வரும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து விசாரித்து செய்யுங்கள். அர்த்தாஷ்டம சனி உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சில நோய்களை சுட்டிக்காட்டுவார்.
கோபம் தவிர்க்கவும்
பெண்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் கணவன் மனைவிக்கு இடையே ரொம்ப அந்நியோன்னியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் புரமோசன் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும் மேன்மை நிலை அதிகரிக்கும். பெற்றோர்கள் உறவினர்களின் ஆசி அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் உங்க ராசியில் வந்து அமர்வதால் உடல் உஷ்ணம் கூடும் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். உங்க வளர்ச்சி அதிகரிக்கும் இதைப்பார்த்து பலரும் பொறாமைப்படுவார்கள். கண் திருஷ்டி அதிகரிக்கும் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி காதல் உறவில் சில வாக்குவாதங்கள் வரலாம் கவனமும் எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு மாத முற்பகுதியில் நினைத்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும். குல தெய்வத்தை வணங்குங்கள்.
நெருக்கடி நீங்கும்
செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு இந்த மாதம் நிறைய நல்ல விசயங்கள் நடைபெறப் போகிறது. நல்ல தன வருமானம் வரும். தடைகள் நீங்கும் நிதி நெருக்கடிகள் நீங்கும். குரு பகவானின் பார்வை ஆறாம் வீட்டில் விழுவதால் கடன் பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பேச்சில் கவனமாக இருங்க யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். திருமண உறவில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
நிதி நெருக்கடி நீங்கும்
வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை. பெரிய முயற்சிகளை எடுக்காதீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். உயரதிகாரிகளிடம் கவனமாக பேசுங்கள். வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது. ஞானகாரகன் கேது உங்க ராசியில் சஞ்சரிப்பதால் நிறைய ஆன்மீக பயணம் செல்வீர்கள். பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள். நிதி நெருக்கடிகள் நீங்கும். பாதிப்புகள் நீங்க விநாயகரை வணங்குங்கள்.வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். முருகனை வணங்க தடைகள் நீங்கும்.
தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்
தனுசு ராசிக்கு ராசிநாதன் குரு சஞ்சரிக்கிறார். இரண்டாம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் வீட்டில் சூரியன், ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், பதினொன்றாம் வீட்டில் புதன் என கிரகங்கள் சஞ்சாரம் அமைந்துள்ளது. உங்களுக்கு இது அதிர்ஷ்டகரமான மாதமாகும். வாழ்க்கையில் நிறைய சந்தோஷமான சம்பவங்கள் இந்த மாதம் நடைபெறும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கிரகங்களின் கூட்டணி தொழில் வேலையில் வளர்ச்சி முன்னேற்றத்தை கொடுக்கும். அலுவலக வேலையில் உங்க செயல்பாடுகள் அதிகரிக்கும் திறமை பளிச்சிடும் அதிகரிக்கும். விவேகமாக செயல்படுவீர்கள். சனிபகவான் இரண்டாம் வீட்டில் பாத சனியாக சஞ்சரிக்கிறார். தடைகள் வந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. யாரிடமும் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களுடைய செயல்களை யாரிடமும் சொல்ல வேண்டாம் அது செயல்படாமல் போக வாய்ப்பு உள்ளது. அமைதியாக செய்து முடித்து விட்டு சொல்வது நல்லது. வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை. சுடு சொற்கள் பேசி விட வேண்டாம். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்க சனிபகவானை சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.