உங்கள் குழந்தை வேதத்தில் சூரியனை போல் பிரகாசிக்க வேண்டுமா? வியாசர்பாடி வாங்க!
சென்னை: ஆஷாட மாத பௌர்ணமியான இன்று (27/07/2018) வியாச பூஜை அனுஷ்டிக்க படுகிறது. சென்னை வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு ரவீஸ்வரர் கோயிலில் வேதவியசாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ஆனி அல்லது ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமியில் குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள்.
'வேத வியாசர்' எனப் போற்றப்பட்ட, ஸ்ரீ வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர் என்பதாகும். வேதங்களை நான்காகப் பிரித்து, வகைப்படுத்தித் தொகுத்ததால், இவர் 'வேதவியாசர்' என்றழைக்கப்பட்டார். வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாசமஹரிஷி தம் திருவாக்கினால் அருள, விநாயகப் பெருமான் அதை எழுதியருளினார்.
வியாச மஹரிஷி, ஸ்ரீமத் பாகவதம், உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை மனிதசமுதாய மேம்பாட்டுக்காக இயற்றியருளியிருக்கிறார். இந்த வியாச பூஜையை முதன் முதலில், செய்தவர் வேத வியாச மஹரிஷியின் புதல்வரும், ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித் மஹாராஜாவுக்கு பதேசித்தவருமான, ஸ்ரீ சுகப்பிரம்மரிஷியாவார். அவரை அடுத்து, ஸ்ரீ சூதமுனிவர், ஸ்ரீ சுகப்பிரம்மரிஷிக்கு 'வியாச பூஜை' யை, தம் குருவை ஆராதிக்கும் முகமாகச் செய்தார். இது இரண்டாவது வியாச பூஜையாகச் சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, வியாச பூஜை, குருவை ஆராதிக்கும் முகமாக, வழிவழியாகச் செய்யப்பட்டு வருகிறது.
வாழ்க்கை முழுவதும் சன்னியாசிகள் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும். சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிபடுத்தும் வகையிலும், தான் துவங்கவிருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும், வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள், குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, ஆதிகுருவில் (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்.
வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர். பகவான் கிருஷ்ணன் அருளிய கீதையைத் தொகுத்தவர் அவர்தான். பிரம்ம சூத்திரத்தை (வேதங்களின் சாரம்) எழுதியவர் வியாசர். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ப்ரஸ்தான த்ரயம் எனப்படும் மூன்று நூல்களிலுமே, வியாச முனிவரின் பங்குள்ளது. வேதத்தின் அங்கங்கள் சப்த சாஸ்திரம் முகம், ஜ்யோதிஷம் சஷுஷி சீரோத்ர முக்தம் நிருக்தம்.கல்பஹகரெள, யாதுரஸ்ய வேதஸ்ய, ஸாநாஸிகா, பாதபத்ம த்வ்யச்சந்த ஆத்யெள புதைஹி” என 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதமேதை “பாஸ்கராசார்யான்” குறிப்பிட்டு உள்ளார்.
வேத புருஷனின் முகம் இலக்கணம், கண்கள் “ஜோதிஷம்”, செவிகள் நிருக்தம், கைகள் கல்பம், சிக்ஷை அவனது மூக்கு, சந்தஸ் அவன் இரண்டு கால்கள் ஆகும், மனிதனுக்கு கண்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தூரம் “ஜோதிஷம்” முக்கியம், “ஜோதிஷம்” எவ்வளவு அவசியம் ஆனது என்பதை எடுதுரைக்கிறது. சிக்ஷா, சந்தஸ், நிருத்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம் ஆகிய ஆறும் வேதத்தின் அங்கங்களாகும். இதில் ஜோதிஷம் வேதத்தின் கண்கள் என்று சொல்லப்படுகிறது. நம் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஜோதிடம் முக்கியக் காரணியாக விளங்குகிறது.
ஜோதிஷம், வைத்தியம் தெரியாதவர்களில்லை என்பார்கள். ஜோதிஷ சாஸ்திரம் பொய் என்றால் கிரஹணத்தை பார் என்றும், ஜோதிடரின் வாக்கு ஒரு நாளும் பொய்க்காது என்றும் மக்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஜோதிடத்தின் தந்தை என்றழைக்கப்படும் வியாசரின் தந்தையான பராசர முனி, ஜோதிஷ சாஸ்திரத்தை வேதத்தின் கண்கள் என போற்றுகிறார். ஜோதிட ஸ்திரம் மக்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு வழிகாட்டக்கூடிய வெளிச்சம் என்பதால் இதனை வேத சக்ஷு என்றும் அழைப்பதுண்டு.
சூரியனும் ஜோதிடமும்:
சூரியனை சுற்றி இருக்கும் கிரஹங்கள் மற்றும் நட்சத்திர மண்டலங்களும் மனிதனுக்கு “தனிப்பட்ட வாழ்வியலினின் மாறுதலை நுணுக்கங்களை கண்டு எடுத்துரைப்பதே “ஜோதிஷம்” ஆகும். சூரியன், நவகிரக நாயகன், ஆத்ம காரகன், ஒளிப்பிழம்பு, உலகத்தின் ஒளிவிளக்கு. உலகின் இயக்கம் அவன் வசம். 'முத்தொழிலிலும் சூரியன் தென்படுவதால், பரம்பொருளின் மறுவடிவமாகத் திகழ்கிறான்’ என்று புராணம் கூறும் (விரிஞ்சி நாராயண சங்கராத்மனே). கிரகங்களின் நாயகன் சூரியன். ஒளி வடிவானவன்; பார்வைக்கு இலக்காகும் பரம்பொருள், அவன் (சூர்ய:ப்ரத்யஷதேவதா).
'உலகின் அணையா விளக்கு’ என்பார் வராகமிஹிரர் (த்ரைலோக்ய தீபோரலி:). சூரியனது கிரணங்களே, மற்ற கிரகங்களை இயக்க வைக்கிறது. காலை, மதியம் மற்றும் அந்தி சாயும் வேளைகளில் அவனை ஆராதிப்பது சிறப்பு என்கிறது வேதம். சூரிய வழிபாடு சுகாதாரத்தை நிலை நிறுத்தும் (ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்). சூரியனின் கிரணம் படாத இடமே இல்லை. கிரணம் பட்டு, அதன் தாக்கத்தால் பொருளில் தென்படும் மாற்றங்களைக் கொண்டு உருவானதே காலம்; அதாவது வேளை என்கிறது வேதம்.
வியாசபகவான் திருக்கோயில்:
வியாசரின் பெயரில் அழைக்கப்படும் வியாசர்பாடி, அவர் இந்தத் தலத்துக்கு வருவதற்கு முன்பாக பானுபுரம் என்று அழைக்கப்பட்டது. சூரியன் தனக்கேற்பட்ட சாபம் நீங்கி, இழந்த தேவ அந்தஸ்தைத் திரும்பப் பெற, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தவம் இருந்த தலம். இங்கு சூரியனால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஈசன் அருள்மிகு இரவீஸ்வரர் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார். அம்பிகையின் திருநாமம் அருள்மிகு மரகதாம்பிகை.
ஒருமுறை சூரியனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாத சூரியனின் மனைவி உஷாதேவி, தன்னைப் போலவே ஒருத்தியை உருவாக்கி, அவளுக்கு பிரத்யுஷா என்ற பெயரிட்டு சூரியனிடம் அனுப்பிவிட்டு, ஒரு குதிரையின் வடிவம்கொண்டு வனத்துக்குச் சென்று விடுகிறாள். ஒரு கட்டத்தில் தன்னுடன் இருப்பது உஷாதேவி இல்லை என்ற உண்மைச் சூரியனுக்குத் தெரியவருகிறது. கோபத்துடன் வேகமும்கொண்ட சூரியன் தன் மனைவி யைத் தேடிக்கொண்டு புறப்பட்டார். வழியில் பிரம்ம தேவர் எதிர்ப்பட்டார். மனைவி தன்னை ஏமாற்றிச் சென்ற ஆத்திரத்தில் இருந்த சூரியன், வழியில் எதிர்ப்பட்ட பிரம்ம தேவரை நமஸ்கரிக்காமல் சென்றுவிடுகிறார்.
தம்மை மதிக்காமல் செல்லும் சூரியனின் போக்கு பிரம்ம தேவருக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சூரியன் மனிதனாகப் பிறந்து சித்தம் மயங்கி அலையும்படி சாபம் கொடுக்கிறார். தான் செய்த தவற்றை உணர்ந்த சூரியன், பிரம்ம தேவரைப் பணிந்து சாப விமோசனம் கேட்டார். அதற்குப் பிரம்ம தேவர் நாரதரிடம் கேட்டுக்கொள்ளும்படி கூறிவிட்டார்.
சூரியன் நாரதரிடம் ஆலோசனை கேட்டார். சூரியனைப் பூமிக்குச் செல்லும்படிக்கூறிய நாரதர், பூமியில் ஒரு வன்னி மரத்தினடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார். நாரதர் கூறியபடியே பூமிக்கு வந்த சூரியன், இந்தத் தலத்தில் ஒரு வன்னி மரத்தினடியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன் காரணமாகவே இந்தத் தலத்துக்கு முற்காலத்தில் பானுபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. சூரியன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இரவீஸ்வரரை, தை மாத ரத சப்தமியன்று வியாச முனிவர் பூஜித்து வழிபடுகிறார் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு மிக்க வேதவியாசருக்கு சென்னை வியாசர்பாடியில் சூரிய ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ரவீஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி அமைந்துள்ளது. வியாசர்பாடியின் ஒரு பகுதியில்தான் அக்காலத்தில் நைமிசாரண்யம் என்ற பகுதி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நைமிசாரண்யத்தில் முனிவர்கள் ஜாதுல்யா யாகம் நடத்த வேண்டும் என்றும், அந்த யாகத்தை வியாச முனிவரே நடத்தித் தர வேண்டும் என்றும் விரும்பினார்கள். முனிவர்களின் விருப்பத்தை நிறைவேற்று வதற்காக நைமிசாரண்யத்துக்கு வருகை தந்த வியாசர், யாகம் முடிந்த பிறகும் நைமிசாரண்யத்தில் இருந்து செல்லாமல் அங்கேயே ஆசிரமம் அமைத்து தங்கியிருக்க முடிவு செய்தார்.
அருள்மிகு ரவீஸ்வரரையும் வேதவியாசரையும் வணங்கி நல்லருள் பெற்று நலம்பல கண்டு உய்வோமாக. குரு பௌர்னமி நன்னாளில், ஆசாரியப் பெருமக்களுக்கு, இயன்ற பொருட்களை சமர்ப்பித்து ஆசி பெறுதல் சிறந்தது. குருபக்தி எனும் மிகவுயர்ந்த பொருட்களை குருவுக்குச் சமர்ப்பித்தலே உண்மையான சமர்ப்பணமாகும். வியாச பூஜையின் தத்துவம் இதுவே. நமது குல ஆசாரியர்களை, நமக்குக் கல்வி கற்பித்த குருமார்களை, நேரில் செல்ல முடியாவிட்டாலும், மனதால் வணங்கி வழிபடுவது நம் வாழ்வில் நலம் பல சேர்க்கும் என்பது நிதர்ஸனம்!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
9498098786