வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே எதுவும் இருக்காது இவ்ளோதாங்க வாழ்க்கை
வெங்காயம், வெள்ளை பூண்டை சில குடும்பத்தினர் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வி எழலாம். பூண்டு, வெங்காயத்தின் தோற்றம் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: கடவுளை காண வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆன்மீகத்தில் முழு மூச்சாக இறங்கியவர்கள் யாரும் முழுவதுமாக அறிந்திருக்க மாட்டார்கள். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்பதே உண்மை. அதுபோலத்தான் வெங்காயத்தின் உள்ளே என்ன இருக்கிறது என ஆய்வு செய்பவர்களும் கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். ஏனென்றால் உரிக்க உரிக்க தோல்தானே! வெங்காயம் இன்றைக்கு விலை மதிக்க முடியாத பொருளாக மாறி வருகிறது. ஆன்மீகத்திற்கும் வெங்காயத்திற்கும் உள்ள தொடர்பை பார்க்கலாம்.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை 150 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விலை உயர்வு பற்றி நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் வெங்காயத்தை சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளது பல விவாதங்களை உருவாக்கியுள்ளது.
வெங்காயம், வெள்ளை பூண்டை சில குடும்பத்தினர் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வி எழலாம். பூண்டு, வெங்காயத்தின் தோற்றம் சாஸ்திரங்களில் பலவிதங்களில் கூறப்பட்டுள்ளது. பிராமணரின் மனைவியினால் திருடப்பட்ட பசு மாமிசத்திலிருந்து வெங்காயம், பூண்டு தோன்றியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் வெங்காயம், பூண்டினை உண்பது பசு மாமிசத்தினைச் சாப்பிடுவதைப் போன்று பாவகரமானதாக கருதுகின்றனர். விரத நாட்களில் வெங்காயம் வெள்ளைப்பூண்டை தவிர்த்து விடுகின்றனர்.
வெங்காயம் பற்றி புராணங்கள்
வெங்காயம், பூண்டு உண்பவர்கள் பரிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கருட புராணம் கூறுகிறது. வெங்காயம், பூண்டு தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் என சிவ புராணம் கூறுகிறது. தர்ம நெறிகளைக் கடைபிடிப்பவர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்க்க வேண்டும் என பத்ம புராணம் மனு சம்ஹிதை, ஹரி பக்தி விலாஸம் ஆகிய வேத சாஸ்திரங்கள் தெளிவாக உரைக்கின்றன.
ராகுவின் ரத்தம்
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து பெற்ற அமிர்தத்தை பகவான் விஷ்ணு மோஹினி ரூபத்தில் தேவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் அசுரன் இராகுவும் தேவர்களின் வரிசையில் அமர்ந்து அமிர்தத்தைப் பெற்றான். இதைக் கண்ட சூரியனும் சந்திரனும் பகவானிடம் இதைத் தெரிவித்தனர். அமிர்தம் அந்த அசுரனின் தொண்டையிலிருந்து வயிற்றிற்குச் செல்வதற்குள் பகவான் விஷ்ணு தனது சக்கரத்தினால் அவனின் தலையைக் கொய்தார். அப்போது அவனது தொண்டையிலிருந்த இரத்தம் கீழே சிந்தியது. சிந்திய இரத்தத்திலிருந்து பூண்டு, வெங்காயம் தோன்றின.
அசுரனின் ரத்தம்
அந்த இரத்தத்தில் அமிர்தம் துளியளவு கலந்திருந்த காரணத்தினால், வெங்காயம், பூண்டு இரண்டும் உண்பவர்களுக்கு சில நன்மைகளைத் தரலாம். இருப்பினும், அவை அசுரர்களின் இரத்தம் என்பதால், அவை உண்பவர்களுக்கு அசுர குணத்தை வழங்குகின்றன. அசுரனின் இரத்தத்திலிருந்து தோன்றிய காரணத்தினால் இவற்றை இறைவனுக்கு அர்ப்பணிக்க இயலாது.
ஜோதிடத்தில் வெங்காயம்
ஜோதிடத்தில் ஆன்மீகத்திற்க்கும் வெங்காயத்திற்கும் சர்ப கிரகங்களே காரகமாம். ஆன்மீகத்திற்கு காரக கிரகமாக கேதுவை கூறலாம். சிலர் குருதான் என்பர் கேது ஆன்மீக நாட்டத்தை அதிகரிக்க செய்பவர். எனவே அவரை ஞான காரகன் என்று அழைக்கிறோம். ஆன்மீகந்தை அளவாக உபயோகிக்கும்போது நன்மை அளிக்கிறது. குருவோடு சேர்ந்த கேது அதிகப்படியான ஆன்மீக நாட்டத்தையளித்து இல்லற வாழ்விற்க்கு தடையாகிறது.
ராகு சுக்கிரன் கூட்டணி
வெங்காயம் மற்றும் பூண்டின் காரகன் ராகுவாகும். வெங்காயம் ஆன்மீகத்தை தடை செய்து லௌகீக வாழ்விற்க்கு வழிவகுக்கிறது. ராகுவும் சிற்றின்ப நாட்டத்தை அளித்து போக வாழ்விற்கு வழிவகுப்பதால் போக காரகன் என்கிறோம். வெங்காயத்தை அளவாக பயன்படுத்தும்போது மருத்துவபொருளாகிறது. அதிகமாக வெங்காயம் பூண்டு மசாலாவுடன் சேர்த்து உட்கொள்ளும்போது சுக்கிரனுடன் சேர்ந்த ராகு அதிக காம மற்றும் போக வாழ்கைக்கு வழிவகுக்கிறது. ஏன் எனில் மசாலாவின் காரகன் சுக்கிரன் ஆகும்.
மருந்தாகும் வெங்காயம்
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
அவசியமான வெங்காயம்
ஆன்மீகநாட்டம் கொண்டவர் வெங்காயம் சாப்பிடமாட்டார்கள்.வெங்காயம் சாப்பிடுபவர்கள் ஆன்மீகத்திற்குள் செல்வதில்லை. இரண்டிற்கும் சர்ப கிரகங்கள்தான் காரக கிரகமென்றாலும் ஜாதக கட்டத்தில் இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிர்தான். அதுபோலத்தான் வெங்காயமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று நேரெதிர்தான். இரண்டையும் தவிர்க்க முடியாது. அதே நேரம் இடம் பொருள் ஏவலறித்து இரண்டையும் உபயோகிக்கலாம்.