ஜோதிடத்தில் வெங்காயம் : ஆம்லேட் போட மட்டுமல்ல... கண் திருஷ்டியை போக்கும்
வெங்காயம் இன்றைக்கு விலை மதிக்க முடியாத பொருளாக மாறி வருகிறது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை 150 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஜோதிடத்திற்கும
சென்னை: வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வெங்காயம் சாம்பார் வைக்கவும் ஆம்லேட் போடவும் மட்டுமே பயன்படுவதில்லை. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. துர்சக்தியை விரட்டுவதோடு கண் திருஷ்டியை நீக்குகிறது. அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சிறிய வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வார்கள். அதே போல உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தை எடுத்து திருஷ்டி கழிப்பதன் மூலம் கண் திருஷ்டியினால் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்கலாம்.
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள். வெங்காயம் விற்கிற விலையில் கண் திருஷ்டி கழிப்பது எல்லாம் எப்படி என்று யோசிக்க வேண்டாம் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைக்கு செலவு செய்வதை விட பத்து ரூபாய் செலவில் பாதிப்பை போக்கிக்கொள்ளலாம்.
மருத்துவ குணம்
வெங்காயத்தில் கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் போன்ற சத்துகள் உள்ளது. வெங்காயத்தில் உள்ள குயிர்செடின் (Quercetin) எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள், காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை எதுவும் நம் உடலைத் தாக்காமல் பாதுகாக்கக்கூடியது.
ஆன்மீகத்தில் வெங்காயம்
ஆன்மீகநாட்டம் கொண்டவர் வெங்காயம் சாப்பிடமாட்டார்கள்.வெங்காயம் சாப்பிடுபவர்கள் ஆன்மீகத்திற்குள் செல்வதில்லை. இரண்டிற்கும் சர்ப கிரகங்கள்தான் காரக கிரகமென்றாலும் ஜாதக கட்டத்தில் இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிர்தான். அதுபோலத்தான் வெங்காயமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று நேரெதிர்தான். இரண்டையும் தவிர்க்க முடியாது. அதே நேரம் இடம் பொருள் ஏவலறித்து இரண்டையும் உபயோகிக்கலாம்.
தவிர்ப்பது ஏன்
வெங்காயம், வெள்ளை பூண்டை விரத நாட்களில் சிலர் சாப்பிடாமல் தவிர்த்து விடுவார்கள். வெங்காயம், பூண்டு உண்பவர்கள் பரிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கருட புராணம் கூறுகிறது. வெங்காயம், பூண்டு தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் என சிவ புராணம் கூறுகிறது. தர்ம நெறிகளைக் கடைபிடிப்பவர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்க்க வேண்டும் என பத்ம புராணம் மனு சம்ஹிதை, ஹரி பக்தி விலாஸம் ஆகிய வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆன்மீக நாட்டம்
ஜோதிடத்தில் ஆன்மீகத்திற்கும் வெங்காயத்திற்கும் சர்ப கிரகங்களே காரகனாகும். வெங்காயம் மற்றும் பூண்டின் காரகன் ராகுவாகும். வெங்காயம் ஆன்மீகத்தை தடை செய்து லௌகீக வாழ்விற்கு வழிவகுக்கிறது. ராகுவும் சிற்றின்ப நாட்டத்தை அளித்து போக வாழ்விற்கு வழிவகுப்பதால் போக காரகன் என்கிறோம். வெங்காயத்தை அளவாக பயன்படுத்தும்போது மருத்துவபொருளாகிறது.
மகிமை நிறைந்த வெங்காயம்
அதிகமாக வெங்காயம் பூண்டு மசாலாவுடன் சேர்த்து உட்கொள்ளும்போது சுக்கிரனுடன் சேர்ந்த ராகு அதிக காம மற்றும் போக வாழ்கைக்கு வழிவகுக்கிறது. ஏன் எனில் மசாலாவின் காரகன் சுக்கிரன் ஆகும். வெங்காயத்துக்கு சிறுநீர்ப்பெருக்கி, காமம்பெருக்கி, கோழையகற்றி போன்ற செய்கைகள் இருக்கின்றன. பிரான்ஸ் நாட்டு பாரம்பரியத்தில் திருமணமான தம்பதியருக்கு வெங்காய சூப் கொடுக்கும்முறை இன்றைக்கும் தொடர்கிறது.
வெங்காயத்தின் வீரிய சக்தி
ஆண்மையை அதிகரிக்க பாதாம், பிஸ்தா அதிகம் சாப்பிடுவதைப் போல் சின்ன வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டாலே போதும்; அந்த அளவுக்கு இதில் வீரிய சக்தி உள்ளது. வெங்காயத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் வீரியம் அதிகரிக்கும் என்னும் குறிப்பு 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நறுமணத் தோட்டம் என்னும் அரேபிய நூலில் காணப்படுகிறது. எனவேதான் பல குடும்பத்தினர் விரத நாட்களில் வெங்காயத்தையும் வெள்ளைப்பூண்டையும் தவிர்த்து விடுகின்றனர்.
வெங்காயம் கண்திருஷ்டி நீங்கும்
கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டவர்கள் 7 சிறிய வெங்காயத்தை எடுத்து வெள்ளை துணியில் கட்டி தலை முதல் கால் வரை உடல் மேல் படாமல் ஏற்றி இறக்கி சுற்ற வேண்டும். அதனை மடித்து அப்படியே சாலைகள் சந்திப்பில் தூக்கி வீசி விட வேண்டும். இந்தப் பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று செய்தால் நல்ல பலன் தரும். வெங்காயம் ஒரு கிலோ 200 ரூபாய் என்று யோசிக்க வேண்டாம் திருஷ்டி சுற்ற பயன்படுத்தும் வெங்காயம் 10 ரூபாய் கூட இருக்காது பயன்படுத்தி பாருங்க.