சொந்த வீடு கனவு நிறைவேறனுமா? சிறுவாபுரி முருகனை தரிசனம் பண்ணுங்க!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: சொந்த வீட்டில் வாழ்வதென்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். அதுபோல நமக்கென ஒரு வீடு இருப்பதென்பது மனநிறைவை தரக்கூடியதுதானே. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது.
இன்று மக்கள் எல்லோரும் 'சொந்த வீடு' வேண்டும் என்பதில் மிகவும் முனைப்போடு இருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். அது ஒரு அந்தஸ்து சின்னமாக ஆகி விட்டது எனலாம். தகவல் தொழில்நுட்பம் துறை இந்தியாவில் எழுச்சி பெற்ற பின் மக்களின் வாங்கும் திறன் கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பது நிஜம். ஜாதகப்படி யார் யாரால் வீடு எளிதாக கட்ட முடியும்? ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும்.
சொந்த வீடு யாருக்கு?
1. சொந்த வீட்டுமனை அமைய ஜாதக ரீதியாக நான்காம்பாவம் பலமாக அமைந்திருக்கிறதா என ஆராய வேண்டும். நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் எனவும் குறிப்பிடுகிறோம். செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று சுக்கிரனோடு தொடர்பு பெற்றுவிட்டாலே அனேகமாக சொந்தவீடு அமைந்துவிடும்.
2. ஜென்ம லக்னத்திற்கு நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும் உண்டாகும். நான்காம்அதிபதி கேந்திர ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 1,4,7,10 ம் இடத்து அதிபகளுடன் இணைந்து அமையப்பெற்றோ இருந்தாலும்,திரிகோண ஸ்தானங்களில் அமைந்தோ அல்லது 5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.
3. நான்காம் அதிபதியும், நான்காம் வீட்டையும் குரு போன்ற சுபகிரக பார்வை செய்வது நல்லது. நான்காம் வீட்டதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி சுக்கிரனும் பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகி, அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். அது போல பூமி காரகன் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று பலமாக 4ல் அல்லது 4 ம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தால், ஒருவருக்கு பூமியோகம் உண்டாவது மட்டுமின்றி பூமியுடன் கூடிய வீட்டை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அல்லது பூமியை வாங்கி அதில் வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும்.
4. மேலும் கால புருஷனுக்கு நான்காம் பாவாதிபதியான சந்திரனும் செவ்வாயும் இணைந்து சந்திர மங்கல யோகம் பெற்றாலும் ஜெனன ஜாதக
நான்காம் பாவாதிபதியும் செவ்வாயும் இணைவு பெற்றுவிட்டாலும் சொந்த வீடு அமைந்துவிடுகிறது.
5 ஜெனன ஜாதத்தில் வீட்டில் எத்தனை பலமான சுப கிரகங்கள் அமைகின்றதோ, 4ம் அதிபதியுடன் எத்தனை பலமான சுப கிரகங்கள் சேர்க்கைபெறுகின்றதோ, 4ம் வீட்டை எத்தனை பலமான சுப கிரகங்கள் பார்வை செய்கின்றதோ அத்தனை வீடுகள் அமையக் கூடிய யோகம் உண்டாகும்.
6. ஜெனன ஜாதகத்தில் செவ்வாய் எந்த பாவாதிபதியானாலும் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ருசக யோகத்தை அடைந்தால் அவர்களுக்கு அரண்மணை போன்ற வீடுகள் அமைந்துவிடும். என்றாலும் செவ்வாய் அசுப தொடர்பு பெற்று விட்டால் அந்த வீடே அவர்களுக்கு பிரச்சனையாக அமையும்.
7. ஜெனன ஜாதகத்தில் புதன், குரு, சனி, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் நான்காம் பாவாதிபதிகளாகி முறையே பத்ர யோகம், ஹம்ச யோகம், சச. யோகம், மாளவியா யோகம் ஆகிய பஞ்சமகா புருஷ யோகங்களை (ஏதாவது ஒன்று) பெற்றுவிட்டால் அவர்களுக்கு அரண்மணை போன்ற வீடுகளும் ராஜ வாழ்க்கையும் அமைந்துவிடும்.
8. ஜெனன ஜாதகத்தில் அழகிய சொகுசு வீடுகளுக்கு காரகனான சுக்கிரன் சூரியனை கடந்து நின்று சுப வெசியோகம் பெற்றுவிட்டாலும் மிக அழகான சொகுசு மிக்க வீடு அமைந்துவிடும்.
ஜாதகத்தில் மேலே கண்ட அமைப்பு இருந்தும் சொந்த வீடு கனவு நிறைவேறவில்லையா? அப்படியென்றால் நீங்கள் சிறுவாபுரி முருகனைதான் வணங்கவேண்டும்.
சிறுவாபுரி எங்குள்ளது?
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும்.
சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது.
சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
ஸ்தலபுராணம்:
அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட ராமபிரான் யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட அது வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் வந்தது. அதை அங்கு வளர்ந்து வந்த ராமனின் பிள்ளைகளான லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர். இது அறிந்து குதிரையை மீட்டுப் போக வந்த லட்சுமணனாலும் சிறுவர்களை வெல்ல முடியவில்லை. ராமனே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது. இவ்வாறு சிறுவர்களான லவனும் குசனும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று வழங்கியது.
ஸ்தல சிறப்புகள்
சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன் இடக்கரம் இடுப்பிலும்பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடியுள்ளார்.
வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் இவரை வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை!
மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை வேறு எங்கும் கிடையாது. இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கி மனம் போல துணை அமையும் என்பது ஐதீகம்.
பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது நிதர்சன உண்மையாகும்.