சனி திசை கேது புத்தி கூடவே ஜென்ம சனி: ஜெயில் வாசத்திற்கு காரணமான ப.சி. ஜாதகம்
ஜென்ம சனி, சனி திசை கேது புத்தி என மொத்தமும் சேர்ந்து ப. சிதம்பரத்தை சிறைக்கு தள்ளி விட்டது. இந்த சிக்கலில் இருந்து ப. சிதம்பரம் விடுபடுவாரா? அல்லது தண்டனை அனுபவிப்பாரா என்று பார்க்கலாம்.
Recommended Video
சென்னை: ராஜபோக வாழ்ந்தாலும் ராஜாவாகவே இருந்தாலும் சிறை செல்லும் தோஷம் இருந்தால் ஒருவர் கண்டிப்பாக ஒரு நாளேனும் சிறைக்குள் சென்றுதான் தீர வேண்டும் என்பது விதி. சுக்கிர திசையில் பிறந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு இப்போது ஏழரை சனியில் ஜென்மசனி நடைபெறுகிறது. தசாபுத்தி படி பார்த்தால் சனி தசை கேது புத்தியும் சேர்ந்துள்ளது இந்த காலகட்டம் கடுமையானது உடல் நல பாதிப்புகள் வரலாம் என்று எச்சரித்தனர் ஜோதிடர்கள். அவரது கெட்ட நேரம் அவரை சிறையில் தள்ளியுள்ளது.
ஒருவரின் ஜாதகத்தில் 6 ம் இடத்தில் லக்னாதிபதி மறைவு பெற்றால் அந்த ஜாதகர் தன்னுடைய ஊர் மட்டுமே அன்றி மாவட்டம் மாநில அளவில் புகழோடு இருப்பார்கள். ஆனால் அதே ஆறாம் இடத்தில் லக்னாதிபதி உடன் பாவர்கள் சேர்க்கை இருக்க அந்த சேர்க்கைக்கு பெயர் பந்தன யோகம் எனப்படும். இது சிறைபடும் யோகம் ஆகும். இதுபோன்ற அமைப்புகள் இருக்கப் பெற்ற ஜாதகர்கள் ஏதேனும் ஒரு வழக்கு விஷயங்களில் சிக்கி ஒரு தினம் ஆவது சிறைச்சாலையில் உறங்கி மீண்டும் ஜாமீனில் வரும் நிலையை தருகிறது.
ப. சிதம்பரம் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் மீனம் லக்னம். மிதுனத்தில் ராகு, செவ்வாய், சனி, கடகத்தில் சுக்கிரன், சிம்மத்தில் புதன், கன்னியில் சூரியன் குரு, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் அமைந்துள்ளன. பிறக்கும் போது சுக்கிரதிசை குரு புத்தி இருந்துள்ளது. அதன் பின் வரிசையாக சூரியன், சந்திரன், செவ்வாய். ராகு, வியாழ திசைகள் முடிந்து 2011ஆம் ஆண்டு முதல் சனி திசை தொடங்கியுள்ளது.
ஏழரை சனி காலம்
சனி திசை தொடங்கியது முதலே ப.சிதம்பரத்திற்கு பிரச்சினைகள் ஆரம்பித்து விட்டன. 2014 முதல் ஏழரை சனி தொடங்கியது முதலே ஒரே ஏழரைதான். தேர்தலில் தோல்வி, தொடர்ந்த வழக்குகள் என சிக்கல் மேல் சிக்கல்தான். அவ்வப்போது சிபிஐ ரெய்டு, அமலாக்கத்துறை ரெய்டு என மகனால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
சிறைக்கு தள்ளிய சனி கேது
2017ஆம் ஆண்டு ஜென்ம சனி தொடங்கியது. இப்போது சனியோடு கேதுவும் இணைந்துள்ளது. ப. சிதம்பரத்திற்கு இப்போது சனி திசை கேது புத்தி நடக்கிறது. இந்த தசை புத்தி அத்தனை சிறப்பானதல்ல என்று ஜோதிடர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். தலைக்கு மேல் கத்தியாக ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொங்கிக் கொண்டிருந்தது. கடைசியில் அந்த வழக்கில் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சரியில்லாத கால கட்டம்
வரும் செப்டம்பர் 16ஆம் தேதியுடன் அவருக்கு 74 வயது முடியப்போகிறது. சுக்கிரதிசையில் பிறந்த ப. சிதம்பரத்திற்கு ராகு திசை, வியாழதிசை அற்புதமான யோகங்களை கொடுத்துள்ளது. எம்.பி பதவி, அமைச்சர் பதவி என ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார். ஜென்ம சனி முடிய இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது. அதே போல குருவும் இப்போது விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். இதுவும் சரியில்லாத காலகட்டம்தான். நவம்பர் மாதம்தான் குரு ஜென்மத்திற்கு வந்து சனி கேது உடன் இணைகிறார். அதுவரை தாக்கு பிடித்திருந்தால் சிறைக்கு போவதில் இருந்து தப்பித்திருக்கலாம். ஆனால் சனி திசை கேது புத்தி, ஜென்ம சனி காலம் எல்லாம் சேர்ந்து ப. சிதம்பரத்தை சிறையில் தள்ளி விட்டது.
ஜாதகம் சொல்வதென்ன
இவரது ஜாதகத்தில் சூரியன்,குரு,செவ்வாய் போன்ற அரசு கிரகங்கள் பலமாக இருக்கின்றன. அரசியல், நிர்வாகம் என உச்சத்திற்கு சென்றார். கன்னி ராசியில் சூரியன் குரு இணைந்து சிவராஜ யோகம் யோகத்தை கொடுத்தது. அதே போல செவ்வாய் சந்திரனை பார்வையிட்டு சசி மங்கள யோகம் பெற்றார். கேதார யோகமும் இவர் ஜாதகத்தில் உள்ளது.
ஏழாவது தசை கூடவே ஏழரை
சுக்கிர திசையில் பிறந்த ப. சிதம்பரத்திற்கு சனி திசை ஏழாவது தசை. ஏழாவது தசை நீச தசை. குற்றச்சாட்டுகள், அவமானங்களை சந்தித்தார். இருந்தாலும் தெய்வ பலன், கஜகேசரி யோகம் இவருக்கு இதுநாள் வரை பலத்தை கொடுத்தது. கைதில் இருந்து தப்பித்து வந்தார். என்னதான் இருந்தாலும் சனி திசை கேது புத்தி கூடவே ராசியில் ஜென்ம சனி கேது கூட்டணி ராகு பார்வை எல்லாம் சேர்ந்து ஒரேடியாக அமுக்கி விட்டது.
யார் சிறைக்கு செல்வார்
சிறை செல்லும் அமைப்பு யாருக்கு இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் பந்தன யோகத்தைப் பற்ரி நிறைய சொல்லி இருக்கிறது. ஒரு ஜாதகத்தில் உள்ள 12 பாவங்களுமே ஏதோ ஒரு விதத்தில் இந்த பந்தன யோகத்திற்கு காரணமாகின்றது. முக்கியமான பாவங்கள் 6, 8 12. லக்னாதிபதியும் 6 ம் அதிபதியும் சேர்ந்து கேந்திரம் அல்லது திரிகோணத்தில் சனியுடன் சேர்ந்து அமர்ந்து ராகுவால் பார்க்கப்பட்டாலும் (கேதுவுடன் சேர்ந்து அமரும் நிலை) பந்தன யோகம் ஏற்படும்.
சிறைப்பறவைகள்
9 ம் பாவத்திலும் 10 ம் பாவத்திலும் தீயவர் வாசம் செய்து சுபர் தொடர்பு இல்லாமல் இருப்பின் அங்கு பந்தன யோகம் ஏற்படும். ஒருவருடைய ஜாதகத்தில் 8ஆம் இடத்தில் ராகு இருந்தால் அவர் சிறை செல்வார். மேலும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதே ராகு 12ஆம் இடத்தில் இருந்தால் பலமுறை சிறை செல்ல வேண்டி வரும் எனத் தெரிவித்துள்ளார்.
அரச குற்றம்
2-12 ம் பாவங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து அவை வேறு தீய கிரகங்களால் பார்க்கப்பட்டால் பந்தன யோகம் ஏற்படும். 4 ம் பாவத்தில் சூரியன் அல்லது செவ்வாய் அமர்ந்து 10 ல் சனி அமர்ந்தாலும் அல்லது 10 ம் பாவத்தை சனி பார்த்து 4 ம் வீட்டை சூரியன், செவ்வாய் பார்த்தாலும் பந்தன யோகம் ஏற்படும். ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் அதிபதி பாவியாக வந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சம்பந்தப்படுமானால் அரசுக்கு விரோதமான தொழில் ஈடுபட்டு குறைவான காலத்தில் பொருள் சேர்ப்பார்கள்.
தண்டனை பெறும் அமைப்பு
பத்தாமிடத்தை சனி,செவ்வாய் சேர்ந்து பார்க்கப்படும்போது சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு சனி திசை செவ்வாய் புத்தி அல்லது செவ்வாய் திசை சனி புத்தி நடக்கும் காலங்களில் சிறை செல்ல வேண்டியிருக்கும்.சுபர் பார்வை ஏற்பட்டால் தண்டனை குறையலாம். ஒருவரது ஜாதகத்தில் இரண்டு ,பன்னிரண்டாமிடங்களில் பாவிகள் இடம்பெறுவதும், இவர்களுடன் லக்னாதிபதி இவ்விடங்களில் அமர்வதும் சிறை செல்லும் அமைப்பை தரும். தனகாரகனான குரு பகவான் ஏழு மற்றும் பத்தாம் அதிபதியாகி நீசம் பெற்று தனஸ்தானத்தில் இருப்பதும்,இரண்டாம் பாவத்திற்கு ராகு ,கேது சம்பந்தம் சிறை செல்லும் யோகத்தை உண்டாக்கும்.
பரிகாரம் செய்யலாம்
நம் ஊரில் அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு அவ்வப்போது சிறைக்கு செல்கின்றனர். இதெல்லாம் சிறைதோஷத்தை கழிப்பதற்கான பரிகாரம் என்று எத்தனை பேருக்கு தெரியும். உங்க ஜாதக அமைப்பு இப்படி இருந்தால் நீங்களும் பரிகாரம் பண்ணிடுங்க. செய்யாத தவறுக்கு கம்பி எண்ணுவதில் இருந்து தப்பிக்கலாம். அதெல்லாம் சரிதான் ப. சிதம்பரம் தண்டனையில் இருந்து தப்பிப்பாரா என்றுதானே கேட்கிறீர்கள் காலம் பதில் சொல்லும்.