2018 பிளாஷ்பேக் : மழை, புயல், பங்குச்சந்தை வீழ்ச்சி - பஞ்சாங்கம் கணித்து பலித்தது
புத்தாண்டு பிறக்கப் போகிறது. 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை நிகழ்ந்தவைகளை சற்றே திரும்பி பார்க்கலாம்.
சென்னை: விளம்பி வருட பஞ்சாங்கத்தில் தென்மேற்கு பருவமழை வெள்ளம் பற்றியும், கேரளாவின் வெள்ளம், தமிழகத்தின் புயல் பாதிப்பு பற்றியும் கணிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பஞ்சாங்கம் கணித்து அப்படியே பலித்தவை என்னென்ன என்று பார்க்கலாம்.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம், விலைவாசி உயர்வு, பங்குச்சந்தை வர்த்தகம், தங்கம், வெள்ளி விலை உயர்வு, வீழ்ச்சி என அனைத்தையும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
நவகிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் இந்த பூமியில் எங்கெங்கு பூகம்பம் ஏற்படும், வெள்ளம் வரும், புயல் தாக்கும் எனவும் பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர். வானிலை மைய அறிக்கை மழை பாதிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வெளியாகும் நிலையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கு முன்பே நடக்கப் போவதை பஞ்சாங்கத்தில் கணித்து விடுகின்றனர்.
கெண்டாதி கெண்டம்
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மரணத்தை பஞ்சாங்கத்தில் கணித்திருந்தனர். அதே போல இந்த விளம்பி வருட பஞ்சாங்கத்தில் அரசியல் தலைவர்களின் உயிருக்கு கெண்டாதி கெண்டம் ஏற்பட்டு உயிர் பிரிய நேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக மூத்த தலைவர் கருணாநிதி தொடங்கி பல மத்திய அமைச்சர்கள் மரணமடைந்துள்ளனர்.
மழை வெள்ளம் பாதிப்பு
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்தது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது. இது பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. ஆடி முதல் கார்த்திகை வரை நல்ல மழை பெய்யும் என்றும் தண்ணீர் பிரச்சினை தீரும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது போலவே பலித்துள்ளது.
வங்கிகளில் புதிய மாற்றங்கள்
வங்கிகளில் புதிய மாற்றங்கள் ஏற்படும், புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவார்கள் என்றும் பஞ்சாங்கம் கணித்தது பலித்துள்ளது. இதே போல சூரியனும் குருவும் ஒருவரை ஒருவர் பார்ப்பதால் ரியல் எஸ்டேட் வியாபாரம் நன்றாக இருக்கும். தானியங்கள், நவரத்தினங்கள் விலை வீழ்ச்சியடையும், பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்படும், பணத்திற்கு தட்டுப்பாடு இருக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் வெள்ளம்
ஆடி மாத சந்திரகிரகணத்தினால் அக்னி பயம் ஏற்படும். சூறாவாளி காற்றினால் கடும் பாதிப்பு ஏற்படும். இந்த ஆண்டு மழை வெள்ளத்தினால் கோவில்களில் வெள்ளம் சூழும் என்றும் சரணாலயங்களில் விலங்குகள் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்றும் பஞ்சாங்கம் கணித்தது பலித்தது. கஜா புயல் தாக்கியதில் காவிரி டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கோடியக்கரை சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் மரணமடைந்தன. கஜா புயல் பாதிப்பின் துயரத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.
வெடி இல்லாத தீபாவளி
இந்த ஆண்டு வெடி இல்லாத தீபாவளியாக இருக்கும் என்று பஞ்சாங்கம் கணித்தது. தீபாவளி நேரத்தில் வெடி வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. காலையில் இரண்டு மணிநேரம், மாலையில் இரண்டு மணி நேரம் வெடி வெடிக்க அனுமதிக்கப்பட்டது. பட்டாசு விற்பனை மந்தமானது. பட்டாசு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.