பெருமழை, வெள்ளம், நிரம்பி வழியும் அணைகள் - கணித்து சொன்ன பஞ்சாங்கம்
கர்நாடகா, தமிழகம், கேரளாவில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. அணைகள் நிரம்பி வழிகின்றன. பெருமழை, வெள்ளம் பற்றி பஞ்சாங்கம் கணித்துள்ளது.
சென்னை: விளம்பி வருட பஞ்சாங்கத்தில் பெருமழை, வெள்ளம் பற்றி கணிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் முதல் கார்த்திகை வரை அதாவது தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் அதிக அளவில் பெய்து அணைகள் நிரம்பி வழியும் என்று கணித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் முதல் அக்டோபர் வரை தென்மேற்கு பருவமழைக் காலமாகும். பருவமழை நடப்பாண்டு துவங்கி பெய்து வருகிறது. குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது. வானிலை ஆய்வாளர்கள் மழையை பற்றி கணித்து மக்களுக்கு கூறி வரும் நிலையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எப்படியிருக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
கடந்த 2015 ஆண்டு சென்னை பெருவெள்ளம், வர்தா புயலை பஞ்சாங்கம் கணித்தது பலித்தது. அதே போல நெல்லை, குமரியை சூறையாடிய ஓகி புயலை பஞ்சாங்கம் கணித்திருந்தது. அதே போல நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்குப் பருவமழையை பஞ்சாங்கம் கணித்துள்ளது.
கனமழை கொட்டும்
ஆடி முதல் கார்த்திகை வரை கனமழை கொட்டும் என்றும் அருவிகளில் வெள்ளம் பெருகும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும், அணைகள் நிரம்பி வழியும் என்றும் விளம்பி வருட பஞ்சாங்கம் கணித்துள்ளது. பஞ்சாங்கம் கணித்துள்ளது போலவே கர்நாடகாவிலும், கேரளாவிலும் கனமழை கொட்டி வருவதோடு அணைகள் நிரம்பி வழிகின்றன.
வெள்ளக்காடான கேரளா
கேரளாவில் பெய்து வரும் பெருமழையினால், அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளை வரை பெருமழையிலிருந்து மிகப் பெருமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆறுகளில் பெருவெள்ளம்
கேரளா, கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அணைகள் நிரம்பி அங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தமிழக ஆறுகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. காவிரியில் பெருகிய வெள்ளம் டெல்டா மாவட்ட மக்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. தாமிரபரணியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் நீர்நிலைகளை நிரப்பியுள்ளது.
ஆகஸ்ட் வெள்ளம்
ஆகஸ்ட் மாதத்தில் அதாவது 18ஆம் தேதி பெருவெள்ளம் ஏற்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. ஏற்கனவே கேரளா வெள்ளக்காடாக மாறியுள்ளது. தமிழகத்திலும் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. இதில் மேலும் வெள்ளம் வரும் எச்சரித்துள்ளது பஞ்சாங்கம். சந்திரனுக்கு தெற்கில் குரு சஞ்சரிப்பதால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்று கணித்துள்ளது.
கனமழை கொட்டும்
தமிழகத்தில் புரட்டாசி மாதம் அதாவது செப்டம்பர் அக்டோபர் மாதம் நல்ல மழை பெய்யும் என்றும் விளைச்சல் அதிகரித்து விலைவாசி குறையும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. மழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடையும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. ஆடியில் பெய்த மழையிலேயே அணைகள் எல்லாம் நிரம்பி விட்டன. இனி புரட்டாசி வரை பெய்யும் மழை தண்ணீரை சேர்த்து வைக்க இடமே இல்லையே என்ன செய்யப்போகிறோமோ?