பஞ்சாங்கம் கணித்ததும்... பலித்ததும் - 2017 பிளாஷ் பேக்
2017 ஆம் ஆண்டு பஞ்சாங்கம் கணித்த பல சம்பவங்கள் பலித்துள்ளன. வானிலை ஆய்வு அறிக்கை வரும் முன்பே ஓராண்டுக்கு முன்பாகவே பஞ்சாங்கத்தில் மழை, வெள்ளம் பற்றி கணித்துள்ளனர்.
சென்னை: 2018 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களை சற்றே திரும்பி பார்ப்போம். 2017ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் வஞ்சனையின்றி பெய்துள்ளது. நீர் நிலைகள், ஏரிகள், அணைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
கடந்த 2015 ஆம்ஆண்டு மழை பற்றியும், 2016ஆம் ஆண்டு வர்தா புயல் பற்றியும் பஞ்சாங்கத்தில் கணித்திருந்தது பலித்தது.
2017ஆம் ஆண்டு பஞ்சாங்கத்திலும் மழை, புயல், வெள்ளம் பற்றி கணித்துள்ளது. இதில் பல சம்பவங்கள் பலித்துள்ளன. ஓகி புயல் தென்மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. கனமழை, சூறாவளிக் காற்றால் கன்னியாகுமரி மாவட்டம் உருக்குலைந்துள்ளது. மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
2017 மழையை கணித்த பஞ்சாங்கம்
ஹேவிளம்பி வருடத்திய ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் இந்த புயல், வெள்ளச் சேதம், பாதிப்பு பற்றியும், பூமி அதிர்வு, நிலநடுக்கம் பற்றியும் சில மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முக்குறுணி மழை பெய்யும். 10 பங்கு சமுத்திரத்திலும் 6 பங்கு காடுகளிலும் 4 பங்கு பூமியிலும் பெய்யும் என்று கணித்தனர். அதேபோல மழையானது கடலில் அதிக அளவு பெய்தது.
கடல் சீற்றம்
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றங்களும் ஏற்படும் என்று கணித்தது பஞ்சாங்கம்.
கடலை ஒட்டிய நகரங்களான பாண்டிச்சேரி, சென்னை, நாகை, காரைக்கால், கன்னியாகுமரி, திருச்செந்தூர், ஆகிய பகுதிகளில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மக்களுக்கு பொருட் சேதம், உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புண்டு என்று கணித்திருந்தது.
ஆறுகளில் வெள்ளம்
அதிகமான சூறாவளி காற்று வீசும். மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும், அனைத்து ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல தென்மாவட்டங்களில் குறிப்பாக தாமிரபரணியில் பலத்த வெள்ளம் ஏற்பட்டது. அணைகள் நிரம்பியுள்ளன.
மழையும், புயலும்
அதே போல மார்கழி மாதத்தில் புயல், பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் மழை சென்னையை தாக்குமோ என்று அச்சம் எழுந்தது. நவம்பர் இறுதியிலும் டிசம்பர் துவக்கத்திலும் ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தை சூறையாடியது புயல் மழை.
ஜோதிடர் பச்சை ராஜென்
ஆசியா, ஐரோப்பிய நாடுகள் இந்தோனேசியா, ஜப்பான், இந்தியா, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும்,அக்னிக்குழம்புகள் வெளிப்படும். எரிமலை தாக்கமும் பல நாடுகளில் இருந்து வரும். என்றாலும் பெரிய அளவில் பாதிப்புகள் வந்து குறைந்து விடும் என்று கணித்துள்ளார் பண்டிதர் பச்சை ராஜென். அதே போலவே நிலநடுக்கம் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு பஞ்சாங்கம், ஜோதிடர்கள் கணித்த பல கணிப்புகள் பலித்துள்ளன.