பங்குனி உத்திர நாளில் தெய்வீக திருமணங்கள் - இந்த மாசத்துல இத்தனை சிறப்பு இருக்கா
ஜோதிட சாஸ்திரப்படி மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பனிரெண்டாவது நட்சத்திரமாக வருவது, உத்திர நட்சத்திரமாகும்.
மதுரை: தமிழகத்தை பொருத்த வரையில் மற்ற மாதங்களில் எல்லாம், ஒவ்வொரு தெய்வத்திற்கு என தனியாக திருவிழா கொண்டாடுவார்கள். ஆனால் பங்குனி மாதத்தில் மட்டும் தான், நகரம், கிராமம் என பாரபட்சமில்லாமல் அனைத்து தெய்வங்களுக்கும் ஒன்று சேர்த்து திருவிழா கொண்டாடுகிறார்கள். இதற்காக ஆறு, குளம், கிணறு, கடல் என அனைத்து நீர்நிலைகளிலும் மக்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சியை கொண்டாடுவதுண்டு.
பங்குனி மாதம் என்றாலே மண்டையை பிளக்கும் வெயில் உக்கிரமாகும் மாதம். இந்த வெயிலுக்கு பயந்து கொண்டு மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பார்கள். இதனால் ரோடுகளில் வாகன போக்குவரத்து அதிகமில்லாமல், வெறிச்சோடிக்கிடக்கும். எப்போதுடா பசங்களுக்கு பரீட்சை முடிந்து விடுமுறை விடுவார்கள் என்று காத்திருந்து கோடை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்றுவிடுவார்கள்.
தமிழ் மாதங்களில் மற்ற பதினோறு மாதங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பங்குனி மாதத்திற்கு மட்டுமே உண்டு. மற்ற மாதங்களில் எல்லாம், அந்தந்த நட்சத்திரத்தோடு பவுர்ணமி திதி ஒன்றாக இணையும் நாள் அந்த நட்சத்திரத்தோடு சேர்த்து பவுர்ணமி என்று அழைக்கப்படும். ஒரு சில மாதங்களில் மட்டும் வேறுபடும். இதன் காரணமாகவே அந்த நட்சத்திரத்தோடு இணைத்து தான் அந்த மாதத்தின் பெயரும் இருக்கும். அப்படித்தான் நம்முடைய முன்னோர்கள் தமிழ் மாதத்திற்கு உரிய பெயரையும் பொருத்தி வைத்துள்ளனர்.
குரு அருள் நிறைந்த மாதம்
பங்குனி மாதம் குருவின் அருள் நிறைந்த மாதம். குருவின் வீடான மீனம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது. நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குருவின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது.
பார்வதி - பரமேஸ்வரன், மீனாட்சி - சுந்தரேஸ்வரர், ஆண்டாள் - ரங்கமன்னார், தெய்வானை - முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்னை காமாக்ஷி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான். சாமானிய மனிதர்களாகிய நமக்கு மட்டுமல்ல, சிவனேசச் செல்வர்களான அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் இறைவன் காட்சியளித்து மெய்ஞ்ஞானத்தைப் போதிப்பதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான்.
பங்குனி உத்திரம்
தமிழ் மாதங்களில் ஆண்டின் இறுதி மாதமான பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமி திதியும், உத்திர நட்சததிரமும் இணையும் நாளுக்கு ஒரு சிறப்பு உண்டு. காரணம், உத்திரம் நட்சத்திரம் தான். ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் சுழற்சி முறையில் வந்தாலும் கூட, பங்குனி மாதத்தில் வருவது தான் இந்த மாதத்திற்கும் உத்திர நட்சத்திரத்திற்கும் வெகு சிறப்பாகும்.
உத்திரத்தின் சிறப்பு
ஜோதிட சாஸ்திரப்படி மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பனிரெண்டாவது நட்சத்திரமாக வருவது, உத்திர நட்சத்திரமாகும். தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதமாக வருவதும் பங்குனி மாதம் தான். இதனால் தான் பங்குனி மாதமும் உத்திர நட்சத்திரமும் அதிக சிறப்பு பெறுகிறது.
மிகப்பெரிய பவுர்ணமி
பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வரும்போது சூரிய பகவானின் பார்வை முழுவதும் சந்திரன் மீது படுவதால் பிரகாசமாக ஜொலிக்கிறது. அதோடு, உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் ஆவார். அதே நாளில் பவுர்ணமியும் உத்திர நட்சத்திரமும் ஒன்றாக இணைவதால், மற்ற மாத பவுர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாத பவுர்ணமி பெரிய அளவில் பிரகாசமாக ஜொலிக்கிறது. இதனால் தான் தெய்வங்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாக பங்குனி மாதம் கருதப்படுகிறது.
திருவிழாக்கள் கோலாகலம்
தமிழகத்தை பொருத்த வரையில் மற்ற மாதங்களில் எல்லாம், ஒவ்வொரு தெய்வத்திற்கு என தனியாக திருவிழா கொண்டாடுவார்கள். ஆனால் பங்குனி மாதத்தில் மட்டும் தான், நகரம், கிராமம் என பாரபட்சமில்லாமல் அனைத்து தெய்வங்களுக்கும் ஒன்று சேர்த்து திருவிழா கொண்டாடுகிறார்கள். இதற்காக ஆறு, குளம், கிணறு, கடல் என அனைத்து நீர்நிலைகளிலும் மக்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சியை கொண்டாடுவதுண்டு. இதற்கு உதாரணமாக விளங்குவது, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் அறுபத்து மூவர் உற்சவ திருவிழா தான். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவீதியுலா வைபவம் நடைபெறும். அன்றைய நாளில் சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் திரளாக வந்திருந்து அறுபத்து மூவர் திருவீதியுலாவை கண்டு ரசித்து மகிழ்வதுண்டு.
பழனி தேரோட்டம்
அதே போல், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி மலையில் காவடி உற்சவம் நடைபெறுவதும் இந்த பங்குனி மாதத்தில் தான். பழனியில் பங்குனி உத்திரம் கோலாகலமாக நடைபெறும் தேரோட்டமும் திருக்கல்யாணமும் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள்.
இந்த மாதம் வேறு என்ன விஷேச தினங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
முக்கிய முகூர்த்த நாட்கள்
- பங்குனி 1 காரடையான் நோன்பு - தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரத நாள்
- பங்குனி 2 பானுசப்தமி - சூரியனுக்காக விரதம் இருக்கும் நாள்
- பங்குனி 8 சனிப்பிரதோஷம்
- பங்குனி 12 உகாதி பண்டிகை
- பங்குனி 14 குரு பகவான் அதிசாரமாக தனுசு ராசியில் இருந்து
மகரம் ராசிக்கு செல்கிறார். - பங்குனி 20 ஸ்ரீ ராம நவமி பண்டிகை
- பங்குனி 24 பங்குனி உத்திரம் சிவன் முருகன் ஆலயங்களில்
திருவிழாக்கள் நடைபெறும் - பங்குனி 27 காரைக்கால் அம்மையார் விவாகம்
- பங்குனி 30 வராக ஜெயந்தி