கொரேனாவால் களையிழந்த பங்குனி உத்திரம் - கோவில்களில் பக்தர்கள் இல்லை அரோகரா முழக்கமில்லை
சென்னை: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றாலும், மூன்றாவது படைவீடான திருஆவிநன்குடி எனப்படும் பழனியில் தான் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இங்கு பங்குனி உத்திர நாளில் பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்து தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் நடத்துவார்கள். மேலும், இந்நாளில் நடைபெறும் தேரோட்டமும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பினால் அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு கோவில்கள் களையிழந்து காணப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்கு பிடித்தமான மாதமாகவும், அந்த கடவுளை வணங்குவதற்கு மிகவும் உகந்ததாகவும், திருவிழாக்களை நடத்துவதற்கு பொருத்தமாகவும் அமைந்திருக்கும். அதனால் தான் மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியிருக்கிறார். ஆனால், அனைத்து கடவுளையும் வணங்குவதற்கும் திருவிழாக்களை நடத்தவும் மிகவும் உகந்த மாதம் பங்குனி மாதம் தான்.
அதிலும் பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளும், உத்திர நட்சத்திமும் சேர்ந்து வரும் நாள் தான் இறைவழிபாட்டுக்கு உகந்ததாகவும், அநேக தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாளாகவும் அமைந்திருக்கின்றது. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், தமிழ் மாதங்களில் 12ஆவது மாதமாக வருவது பங்குனி மாதம். அதோடு, நட்சத்திரங்களில் 12ஆவது நட்சத்திரமாக வருவது உத்திர நட்சத்திரம். இதனாலும் பங்குனி உத்திரம் நட்சத்திரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கல்யாண வைபோகமே
நம் வாழ்க்கைக்கு தேவையான வளத்தை அளிக்கும் விரதங்களில் முக்கியமான விரதமாக பங்குனி உத்திர விரதமாகும். இதை கல்யாண விரதம் என்று நம் முன்னோர்கள் குறிப்பிடுகின்றனர். திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும், பங்குனி உத்திர நாளில் இந்த கல்யாண விரதத்தை வழிபட்டால் கூடிய விரைவில் திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். அன்னை பார்வதி தேவியார் எம்பெருமான் ஈசனை கரம் பிடித்த நன்னாளும் பங்குனி உத்திர திருநாள் தான்.
தெய்வீக திருமணங்கள்
பங்குனி உத்திர நாளின் இன்னொரு சிறப்பு என்னவெனில், உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் ஆவார். இந்நன்னாளில், பவுர்ணமியான முழு நிலவும், சூரியனும் ஒன்று சேர்ந்து வருவதால் இரட்டை சிறப்பு பெறுகின்றது மேலும், இந்நாளில் தான், மிக அதிகமாக தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் பங்குனி உத்திர நாள் கூடுதல் மகத்துவம் பெற்றதாக உள்ளது.
முருகன் தேவயானை திருமணம்
அசுரர்களின் கொட்டத்தை அடக்க வேண்டி, முருகப் பெருமான் தன் தாய் தந்தையை வணங்கி பயணத்தை தொடங்கியது இந்த பங்குனி உத்திர நாளில் தான். தாரகாசுரனை கொன்று, பின்னர் சூரபத்மனையும் சம்ஹாரம் செய்துவிட்டு, தேவயானையை திருமணம் முடித்ததும், இந்த பங்குனி உத்திர நாளில் தான். வேடவர் குலத்தில் நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்த திருநாளும் இந்த பங்குனி உத்திர நாள் தான். அன்னை பார்வதி தேவியார் எம்பெருமான் ஈசனை கரம் பிடித்த நன்னாளும் பங்குனி உத்திர திருநாள் தான்.
திருக்கல்யாணம்
தேவர்களின் தலைவனான தேவேந்திரன் இந்திராணியை கரம் பிடித்ததும் பங்குனி உத்திர நாளில் தான். ஸ்ரீராமபிரான் அன்னை சீதா தேவியை மணம் முடித்ததும், பரதன்-மாண்டவி, லட்சுமணன்-ஊர்மிளை, சத்ருகனன்-ச்ருத கீர்த்தி ஆகியோரின் திருமணம் நடந்ததும் இந்த நாளில் தான். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்தும் இந்த பங்குனி உத்திர நாளில் தான்.
ரதி மன்மதன் திருமணம்
அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தாயார் திருப்பாற்கடலில் இருந்து தோன்றியதும், விரதம் மேற்கொண்டு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பெற்றதும் இந்த பங்குனி உத்திர திருநாளில் தான். தன்னுடைய தவத்தை கலைத்த மன்மதனை எரித்த சிவபெருமான், ரதிதேவியின் வேண்டுதலுக்கு மனமிரங்கி மீண்டும மன்மதனை உயிர்பித்ததும் இந்த பங்குனி உத்திர திருநாளில் தான். அகத்திய மகரிஷி-லோபமுத்திரை திருக்கல்யாணமும், ஐயப்பன்-பூரணா, புஷ்கலா திருக்கல்யாணமும், ரதி மண்மதனை கரம் பிடித்ததும் இந்த பங்குனி உத்திர நாளில் தான்.
சாஸ்தா அவதாரம்
சைவ சமயக்குறவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரருக்கு எம்பெருமான் திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்ததும் இந்நாளில் தான். பிரம்மன் சரஸ்வதியை தன் நாவில் வைத்ததும் பங்குனி உத்திர நாளில் தான். அழகிய 27 கன்னியர்களை சந்திரன் மணம் முடித்ததும் இந்த பங்குனி உத்திர நாளில் தான். தர்மசாஸ்தா அவதரித்ததும், பாண்டவர்களின் ஒருவரான அர்ஜுனன் அவதரித்ததும், எம்பெருமான் ஈசனே, எம் அம்மையே என்று அழைக்கும் பேறு பெற்ற காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றதும் இந்நாளில் தான்.
ரங்கநாதர் ரங்கநாயகி
முக்கியமாக, கங்கையைக் காட்டிலும் புனிதமான காவிரி ஆற்றின் நடுவில் ஸ்ரீபூலோக வைகுந்தம் எனப்படும் ஸ்ரீரங்கத்தில் பாம்பணையில் பள்ளிகொண்ட பெருமாளாக வீற்றிருக்கும் ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கநாயகி தாயாருடன் சேர்த்தி திருக்கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதும் இந்த நன்னாளில் மட்டும் தான். ஒரு வருடத்தில் வேறு எந்த திருநாளிலும் பக்தர்களுக்கு இந்த திவ்ய தரிசனம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீரங்கநாதரும் தாயாரும் இணைந்து காட்சியளிக்கும் இந்த திருக்கோலத்தை தரிசிப்பர்களுக்கு நினைத்ததெல்லாம் நடக்கும் என்பது ஐதீகம்.
கொரோனாவினால் கொண்டாட்டமில்லை
பங்குனி உத்திர திருவிழா சைவ, வைணவ ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தினால் எந்த கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கூட்டமின்றி அரோகரா முழக்கமின்றி முருகன் கோவில்கள் களையிழந்து காணப்படுகின்றன. வரலாற்றிலேயே முதன் முறையாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாஸ்தா கோவில்களில் குல தெய்வ வழிபாடும் ரத்தாகியுள்ளது.