தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் - ஏப்ரல் 1ல் ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில், பங்குனி உத்திர ஆழித் தேரோட்டப் பெருவிழா கொடி ஏற்றத்துடன் நேற்று தொடங்கியது.
சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித் தேரோட்டவிழா வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. ஆழித் தேரோட்ட விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவலாக உள்ளனர்.
காலையில் விநாயகர், சுப்ரமணியர், சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுடன் ரிஷபப் படம் வரையப்பட்ட கொடி வீதியுலா வந்தது. பின்னர், வன்மீகநாதர் சந்நிதியில் உள்ள 48 அடி உயரம் கொண்ட பெரிய கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேளதாளங்கள் இசைக்க, வேதமந்திரங்கள் ஒலிக்க, கொடிமரத்தில் திருவிழா தொடங்குவதை அறிவிக்கும் வகையில் ரிஷபக் கொடியை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.
ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.
பிறந்தால் முக்கி தரும் தலம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது. திருவாரூர் நகரமும் ஆலயமும் சிவபெருமானின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது என்கின்றன புராணங்கள். ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.
இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது.
சிவனை வழிபடும் நவகிரகங்கள்
நளனும் சனியும் வழிபட்ட தலம் இது. தியாகேசர் சந்நிதியில், மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்! பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கும். சந்தனத்தின் மீது குங்குமப் பூவையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து, உத்ஸவ வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.
தியாகேசரின் பாத தரிசனம்
தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். வருடத்தில் இரண்டு முறை மட்டுமே எம்பெருமான் தியாகேசரது திருப்பாதம் இந்த உலக மக்களுக்கு காட்சியளிக்கும். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திரத்தன்று நிகழும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தியாகேசரின் இடது பாதம் மார்கழி திருவாதிரை பதஞ்சலி முனிவர்க்கு காட்சி கொடுத்தார். வலது பாதம் பங்குனி உத்திர நாளில் வியாக்ரபாதருக்கு காட்சி கொடுத்ததாக புராண கதைகள் கூறுகின்றன.
திருவாரூர் தேர்
இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது திருவாரூர் தேர். ஆழி என்றால் மிகப்பெரியது என்று பொருளாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.
பங்குனி உத்திர தேரோட்டம்
அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ‘ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டு்ள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப் படுகிறது.
மிக பிரமாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க நான்கு வீதிகளிலும் தேர் வீதியுலா வரும் அழகு காண்போரை அதிசயிக்க வைக்கும்.
ஏப்ரல் 1ல் ஆழித்தேரோட்டம்
இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் ஆரூரா தியாகேசா என மனம் உருகி பக்கர்கள் முழக்கத்துடன் நேற்று டியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், சைவமத சான்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவாக திருவாரூர் ஆழித் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக சுப்பிரமணியர், விநாயகர் தேரோட்டமும் இறுதியாக அம்பாள், சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெறும். தியாகேசரின் பாத தரிசனம் காணவும் ஆழித் தேரோட்டத்தைக் காணவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவலாக உள்ளனர்.