பங்குனி உத்திரம் முருகன் ஆலயங்களில் கோலாகலம் - பழனியில் இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம்
பழனியில் பங்குனி உத்திர திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. தண்டாயுதபாணி சுவாமியைக் காண பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தீர்த்த காவடி, மயில் காவடிகள் எடுத்து வந்து முருகனை தரிசன
பழனி: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பழனி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காவடிகள் சுமந்து வந்து முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பழனியில் இன்று திருக்கல்யாணமும், நாளை திருத்தேரோட்டமும் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாள் நட்சத்திரத்தால் பவுர்ணமியின் பலன் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி பல்வேறு சிறப்புகளை அளிக்கிறது. அதில் பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவதுடன், தமிழ் கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் பங்குனி உத்திரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரனை சம்ஹாரம் செய்ததற்கான பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத்தந்த நாள் பங்குனி உத்திரம் அன்றுதான் என்பதால் இத்திருமணம் நடந்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீட்டில் தனித்தன்மை பெற்றதாக அமைகின்றது.
மார்ச் 20ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!
கணவன் மனைவி ஒற்றுமை
பங்குனி உத்திர நாளில் தம்பதி சமேதரராக இருக்கும் முருகப்பெருமானை மனதில் நினைத்து விரதம் இருப்பதன் மூலம் தம்பதிகளிடையே பிரிந்த தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். சுமங்கலி பெண்களில் பலர் இன்று கோயிலிற்கு சென்று புதுத்தாலியைப் பெருக்கிக் கட்டிக்கொள்வது வழக்கம். வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்கி கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடும் ஒற்றுமையுடனும் அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவுகிறது.
திருமண வரம் தரும் விரதம்
பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரும் வரன் கை கூடி வரும் என்பதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டும். திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இன்று விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும்.
திருக்கல்யாணம் பாருங்க
பங்குனி உத்திர நாளில் தான் முருக பெருமான் தெய்வானையை மணந்துள்ளார். சிவன் பார்வதி, ராமன் சீதை, தேவேந்திரன் இந்திராணி போன்றோர்களின் திருமண நாளாகவும் பங்குனி உத்திர நன்னாள் திகழ்கிறது. இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவத்தை காண்பது சிறப்பம்சம். இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
முருகனுக்கு உகந்த விழா
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழனி மருதமலை, பழமுதிர்சோலை, உள்ளிட்ட பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் பங்குனி உத்திரம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகனைக் காண தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தீர்த்த காவடி, மயில் காவடிகள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர்.
பழனி பங்குனி உத்திர விழா
பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு பழனியில் முத்துக்குமாரசுவாமியின் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர். திருஆவினன்குடியில் தீர்த்த காவடியுடன் பக்தர்கள் மேள தாளங்களுடன் ஆடிவருவது பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது. திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதராக வெள்ளி ரதத்தில் திருவீதி உலா வருகின்றனர். நாளை வியாழக்கிழமை தண்டாயுதபானி சுவாமியின் பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெறும்.
பழனியில் குவிந்த பக்தர்கள்
பழனியில் இன்று நடைபெறும் திருக்கல்யணத்தையும், வெள்ளிரத ஊர்வலத்தையும் காண வரும் பக்தர்கள் தீர்த்தக்காவடியையும் சுமந்து வருகின்றனர். மலை அடிவாரத்தில் நாளை திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.