தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா : மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த மாதா திரு உருவ சப்பரம்
தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமயமாதா ஆலய சப்பர திருவிழா நேற்று நடைபெற்றது. முக்கிய வீதிகளில் வலம் வந்த அன்னையை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி: தூய பனிமய மாதா பேராலயத்திருவிழா தூத்துக்குடியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வலம் வந்த அன்னையின் திரு உருவத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. சப்பர பவனியைக் காண இலங்கை, சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும் பக்தர்கள் திரளாக வந்திருந்தனர்.
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஜூலை கடந்த 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 437வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த ஜூலை 26ஆம் தேதி சனிக்கிழமை காலை அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் 7.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியும் நடந்தது.
ஆகஸ்ட் 5ஆம் தேதியான நேற்று நேற்று அன்னையின் சப்பர பவனி நடந்தது. விழாவையொட்டி ஆலயத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மாலை 3 மணிவரை சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடந்தது.
நிகழ்ச்சியையொட்டி ஆலயத்தை சுற்றிலும் திரண்டு இருந்த மக்கள் அன்னையின் சப்பரத்தை தூக்கி வந்தனர். அப்போது மக்கள் மரியே வாழ்க என்று உற்சாக முழக்கமிட்டனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பவனி வந்த அன்னையை சாலைகளின் இருபுறமும் நின்றிருந்தவர்களும். கட்டிடங்களில் இருந்தவர்களும் பூக்களை தூவி வழிபட்டனர்.
மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அன்னையின் சப்பரத்தை சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபட்டனர். சப்பரம் கோவிலின் பின்புறமாக பெரியகடை தெரு, கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு வழியாக ஆலய வளாகத்தை வந்தடைந்தது. விழாவில் தமிழகம் மட்டுமல்லாது இலங்கை உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.