புரட்டாசி சனி புராண கதை: பெருமாளுக்கு உகந்த பாரிஜாதம்... என்னென்ன பலன்கள் தெரியுமா?
பாரிஜாத மலர்கள் பகவான் விஷ்ணுவிற்கு பிடித்தமானது. ஆஞ்சநேயர் பாரிஜாத மரத்தின் வேரில் வசிப்பதாக ஐதீகம். பாற்கடலை கடைந்த பொழுது வந்த ஐந்து பொருள்களில் பவளமல்லி எனப்படும் பாரிஜாதம் ஒன்றாகும். குற்று மரமாக
சென்னை: பாரிஜாதம் எனப்படும் பவளமல்லியின் வாசனை அற்புதமானது. தெய்வீக குணம் கொண்ட பாரிஜாத மலர்கள் நம் வீடுகளில் இருந்தால் தீயசக்திகள் நம்மை அண்டாது. பாரிஜாத மலர்கள் பகவான் விஷ்ணுவிற்கு பிடித்தமானது. ஆஞ்சநேயர் பாரிஜாத மரத்தின் வேரில் வசிப்பதாக ஐதீகம். இரவில் பூக்கும் இந்த மலர்கள் காலையில் உதிர்ந்து விடும். அது ஏன் என்பதற்கு புராண கதையே உள்ளது புரட்டாசி சனிக்கிழமையான இன்று பெருமாளுக்கு பிடித்தமான பாரிஜாத மலர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பாரிஜாத மலரின் மீது ருக்மணிக்கு கொள்ளைப் பிரியம். இதனை அறிந்த கிருஷ்ணர் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத செடியை கொண்டு வந்து ருக்மணியின் தோட்டத்தில் நட்டு வைத்தார். ஆனால் அந்த மரம் நன்றாக வளர்ந்து சத்யபாமாவின் அரண்மனையில் பூக்களைச் சொரிந்தது. இதனால் ருக்மணி வருத்தமுற்றதாலேயே இதனை வருத்தமரம் என்று அழைக்கின்றனர். திரௌபதியின் விருப்பப்படியே பீமன் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரத்தை கொண்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை. தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள். இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் சுகந்த மணத்தை பரப்பும் தன்மை கொண்டது.
சூரியனின் காதலி
உலகிற்கே ஒளிதரும் சூரியனிடம் காதல் கொண்டாள் ஒரு அரசகுமாரி. அந்த காதலை ஏற்க மறுத்த சூரியனை எண்ணி மனமுடைந்து தன்னையே மாய்த்துக் கொண்டாளாம். அவளின் அஸ்தியிலிருந்து இம்மரம் உருவாகியதாகவும், இம்மரம் வளர்ந்ததும் சூரியனின் பார்வையைத் தாங்க முடியவில்லை என்றும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. இதன் காரணமாக இந்த மரம் இரவிலே பூக்களை மலர்வித்து காலையிலே பூக்களையெல்லாம் உதிர்த்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது. இவ்விதம் வருத்தமுடன் வாழும் பவள மல்லிகையைக் குறிப்பிட வருந்தும் மரம் என்கின்றனர்.
திருமாலுக்கு உகந்த மலர்
சிரஞ்சீவியாக திகழும் ஆஞ்சநேயர் பவளமல்லி வேரில் வசிப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் பகவான் கிருஷ்ணன் பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவன். இந்த மரத்தில் பூக்கும் சுகந்தமான மலர் திருமாலுக்கு ஏற்றது. பவள மல்லிகை, மருக்கொழுந்து, போன்ற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து திருமாலின் அருளைப் பெறமுடியும்.
நறுமண மலர்
திருமாலிற்கு பிரியமானதுமான பவள மல்லிகையை ஆலய நந்தவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் நட்டு வளர்ப்போம். இதன் மூலம் திருமாலின் அர்ச்சனைக்குகந்த இப்பூக்களையும் பெறுவதுடன் பவள மல்லிகையின் இனிய மணத்தை இரவு முழுவதும் நுகர்ந்து, நம் சூழலையும் பசும் போர்வையாக்குவோம். நல்ல நறுமணத்தை உடைய மலர்களை இம்மரத்தில் தோன்றுகின்றன.
அற்புதமான வாசனை
அற்புதமான வாசனையை உடையது இம்மலர் மலரின் காம்பு நல்ல சிவப்பாக இருக்கும். இதழ்கள் வெண்ணிறமாக காணப்படும். ஐந்தெழுத்தை நினைவுபடுத்தும் வகையில் ஐந்து வெள்ளை இதழ்கள் காணப்படுகின்றன. கண்ணை கவரும் நிறம். நடுஇரவில் மலரத் தொடங்கும். காலையில் பூக்கள் உதிர்ந்து விடும். அதிசயத் தன்மை நிறைந்த மலர்.
தீய சக்திகள் அண்டாது
இறைவனை அர்ச்சிப்பதற்கு உரிய மலர்கள் எட்டு. அந்த எட்டு மலரில் இந்த பாரிஜாத மலரும் ஒன்று. பெருமாளுக்கு மட்டுமல்ல சிவார்ச்சனைக்கு ஏற்ற மலர் இது. இந்த செடி மரமாக வளர்ந்து பூ பூக்கும் போது வீட்டில் எந்தவித தீய சக்திகள் அண்டாது. மனிதர்களுக்குத் தெரியாத பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது.
மருத்துவ குணம்
பவளமல்லியை பெண்கள் தலையில் வைப்பதால் பொடுகு பிரச்சனை தீரும். ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் இலைகள், பூக்கள், விதைகள், வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும். வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும். இதன் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து முறைக் காச்சலுக்கு தினம் இரு வேளை கொடுத்தால் குணம் காணலாம்.
இடுப்புவலி குணமாகும்
மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களை எதிர்கொள்ள பவளமல்லி தாவரம் சிறந்த மூலிகையாக இருக்கிறது. பவளமல்லி மரத்தின் வேர் முதல் இதழ்கள் வரை பயனுடையது. இடுப்பு வலி பிரச்சனை உள்ளவர்கள் பவளமல்லியின் இதழ்களை கசாயம் வைத்து காலை, மாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் இடுப்பு வலி குணமாகும்.
கண்வலி குணமாகும்
பவளமல்லி இலையை தேநீராக்கி குடித்தால் எல்லா வித காய்ச்சலுக்கும் நல்ல மருந்தாக இருக்கும். கண்வலிக்கும் இந்த மருந்து பயன்படுகிறது. சிலருக்கு தலையில் புழுவெட்டு ஏற்பட்டிருக்கும். இதன் மீது பவளமல்லி இலைகளை தேய்த்தால் போதும். புழுவெட்டு மறைந்து முடி வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
வயிற்றில் புழுக்கள் வெளியேற இவ்விலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அத்தோடு தேன் கலந்து அருந்தினால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.
கிருமி நாசினி
இது சிறந்த கிருமி நாசினியாக பயன்படக்கூடியது. கீரிப் பூச்சிகள், நாடாப் புழுக்கள், நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புதமான மருந்தாகிறது. வயிற்றை சுத்தப்படுத்தும் மூலிகையாக பவளமல்லி பயன்படுகிறது. பவளமல்லியின் இலைகளில் செய்யப்படும் கசாயம், பருவ காலத்தில் ஏற்படும் படர்தாமரை நோயையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது. தெய்வீகத்தன்மையும் அழகும் நிறைந்த பாரிஜாத மலர்களை நாமும் வளர்க்கலாம் வளம் பெறலாம்.