2 சூரிய கிரகணங்கள்... ஒரு சந்திர கிரகணம் - பாதிப்பு வருமா?
ஜூலை மாதம் அடுத்தடுத்து சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்பட உள்ளது. இப்படி ஒரே மாதத்தில் 2 கிரகணங்கள் ஏற்படுவதால் யாருக்கு என்ன பாதிப்பு என்று பார்க்கலாம்.
சென்னை: ஜூலை மாதம் 13ஆம் தேதி பகுதி நேர சூரிய கிரகணமும், 27ஆம் தேதி முழு சந்திர கிரகணமும் நிகழ உள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று மீண்டும் பகுதி நேர சூரிய கிரகணமும் ஏற்பட உள்ளதால் ஜோதிட ரீதியாக பரிகாரங்களைப் பார்க்கலாம்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. எப்போதும் சூரிய கிரகணமானது, அமாவாசை நாளில்தான் ஏற்படும். அப்போது சூரியனின் முழுப்பகுதியோ அல்லது ஒரு பகுதியோ மறைந்து காணப்படும்.
ஜூலை 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை அடுத்தடுத்து சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்பட உள்ளது. இதே போல சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்துள்ளன.
ஆனி மாத கிரகணம்
விளம்பி வருடம் ஆனி மாதம் 29ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை புனர்பூசம் நட்சத்திரத்தில் இந்திய நேரப்படி காலை 7.18 மணி முதல் 9.43 மணிவரை நிகழ உள்ள ராகு கிரஹஸ்த பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.
ஆடி மாத சந்திர கிரகணம்
விளம்பி வருடம் ஆடி மாதம் 11ஆம் தேதி ஜூலை 27ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் நிகழும் கேது கிரஹஸ்த முழு சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும்.
சிவப்பு சந்திர கிரகணம்
இந்தாண்டின் தொடக்கத்தில் முழு சந்திர கிரகணம் தெரிந்த நிலையில், வருகிற ஜூலை 27 மற்றும் 28ம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சந்திர கிரகணம் தோன்றவுள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இதுவாகும். கடந்த முறையை விட பெரிய அளவிலான இந்த சந்திர கிரகணம், 1 மணி 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் என தகவல் வெளியாகிஉள்ளன. ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும். வட அமெரிக்கா, ஆர்டிக்-பசிபிக் பகுதிகளில் இது தெரியாது.
ராகு கிரக சூரிய கிரகணம்
விளம்பி வருடம் ஆடி மாதம் 26ஆம் தேதியன்று ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று சனிக்கிழமை ஆயில்யம் நட்சத்திரத்தில் பகல் 1.32 மணி முதல் மாலை 5 மணிவரை நிகழும் ராகு கிரஹஸ்த பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.
பரிகாரம் என்ன?
ஒரே மாதத்தில் இரண்டு கிரகணங்கள் அடுத்தடுத்து தோன்றுவதால் அரசியலில் குழப்பங்கள் நேரிடலாம் என்று ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது நிலநடுக்கம், கடும் மழை போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படலாம் என்றும், அரசியலில் பெரும் குழப்பம் உண்டாகலாம் என்றும் கூறப்படுகிறது. ராகு கேது பரிகார தலங்களுக்குச் சென்று வழிபடலாம். கிரகணம் முடிந்த உடன் குளித்து விட்டு கடவுளை வணங்கி சாப்பிடலாம்.