கார்த்திகை தீபத் திருநாள் - வீடுகள், கோவில்களில் விளக்கேற்றி வழிபாடு
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு வீடுகளிலும், கோவில்களிலும் விளக்கேற்றி மக்கள் இறைவனை வழிபட்டனர்.
சென்னை: தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் கந்த சஷ்டி கொண்டாட்டம் அதைத் தொடர்ந்து கார்த்திகை தீபத் திருநாள் என ஒரே பண்டிக்கைக் காலமாக உள்ளது. இன்று தீபத்திருநாளை முன்னிட்டு நேற்று மாலை முதலே வீடுகளிலும், கோவில்களிலும் மக்கள் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 15ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா தொடர்ந்து வருகிற 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
திருவிழாவையொட்டி தினமும் காலை தங்க சப்பர வாகனத்திலும், இரவில் தங்க மயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம்
மாலை 6.45 மணி அளவில் கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப் பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இன்று காலையில் கார்த்திகை தேரோட்டம் நடைபெற்றது. பதினாறு கால் மண்டபத்தில் இருந்து கீழரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதிகளில் தேர் வலம் வந்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு கோவிலுக்குள் பால தீபம் ஏற்றப்படுகிறது. அதே நேரத்தில் கோவில் மணி ஓசை ஒலித்ததும் மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரையில் 350 லிட்டர் நெய், 150 மீட்டர் நீளமுள்ள கடா துணியில் தயாரிக்கப்பட்ட திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் தீப விழா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதப்பெருமான் ஆலயத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள உத்தமர்கோயிலில் கார்த்திகை தீபத் திருநாள்விழா மற்றும் சொக்கப்பானை ஏற்றுதல் நடைபெற்றது. காரைக்காலில் உள்ள ஸ்ரீபார்வதீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீசுயம்வரதபஸ்வினி தாயாருக்கு நடைபெற்ற சகஸ்ர தீப வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜொலித்த ஏழுமலையான் கோவில்
திருமலை ஏழுமலையான் கோவிலில் தீபங்கள் ஏற்றி கார்த்திகை தீப உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கார்த்திகை தீபத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் நேற்று மாலை 5 மணிக்கு கோவிலில் உள்ள யோக நரசிம்மர் சுவாமி சன்னதி அருகே உள்ள பரிமள மண்டபத்தில் நூறு தீபங்கள் ஏற்றப்பட்டன. மூலவர் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலையத்தை வலம் வந்து அங்குள்ள விமான வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.
பவுர்ணமி கருட சேவை
கருவறையில் உள்ள அகண்ட தீபம், குலசேகர படி, துவாரபாலகர்கள், கருடாழ்வார் சன்னதி, வரதராஜ சுவாமி சன்னதி, தங்க கிணறு, யோக நரசிம்ம சுவாமி சன்னதியிலும் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று நடைபெற வேண்டிய பவுர்ணமி கருட சேவை மற்றும் சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.
தெருவெங்கும் ஒளி வெள்ளம்
கார்த்திகை தீப விழா நேற்று மாலை முதலே கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளை சுத்தம் செய்த மக்கள் வாசல்களில் வண்ண கோலமிட்டு விளக்குகளை ஏற்றி வைத்தனர். வீதிகள் எங்கும் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. இன்றைய தினம் திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் வீடுகள் தோறும் விளக்குகளை ஏற்றி வழிபடுவார்கள்.