காதலை தூண்டும் கிரகங்கள்... எந்த வீட்டில் என்ன கிரகம் இருந்தால் மன்மதன் அம்பு பாயும்
மதுரை: பருவ வயதை எட்டிய மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்து வைக்க ஜாதகத்தை எடுக்கும் போதே நாம் பார்க்கும் வரனை திருமணம் செய்வார்களா? அல்லது காதலித்து திருமணம் செய்து கொள்வார்களா என்று பெற்றோர்கள் யோசிக்கத் தொடங்குவார்கள். இன்றைக்கு காதல் திருமணம் செய்வது சகஜமான ஒன்றுதான் என்றாலும் எல்லோருக்கும் காதல் வாய்ப்பதில்லை. அப்படியே காதலித்தாலும் அந்த காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடிவதில்லை. ஜாதக கட்டத்தில் கிரகங்களின் அமர்வும், கூட்டணியும் ஒருவருக்கு காதல் திருமணத்தை நிர்ணயிக்கின்றன.
காதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பதை பார்க்க ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஐந்தாம் பாவகம் எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானம், ஏழாம் பாவகம் எனப்படும் களத்திர ஸ்தானம் பாக்ய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் பாவகத்தை வைத்து முடிவு செய்யலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் வீடு தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரத்தையும் வீரியத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். காதலுக்கும் காதலிப்பவர்களுக்கும் துணிச்சல் ரொம்ப முக்கியம் அந்த துணிச்சலை தருபவர் செவ்வாய் பகவான். சனியும் காதலுக்கு அடித்தளம் போடுபவர்தான்.
காதல் மணியடிக்கும் காலம்
ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஐந்தாம் பாவம், அல்லது ஐந்து ஏழு வீடுகள் தொடர்பு இருந்தால் காதலிப்பார்கள். அதே போல லக்கினம் களத்திர பாவம், அல்லது லக்கினம் ஐந்தாம் இடம் ஏழாம் பாவகம் தொடர்பு இருந்தால் காதல் திருமணம் நிச்சயம் நடைபெறும். காதல் கிரகங்கள் நான்காம் அதிபதியோடு தொடர்பு ஏற்பட்டால் கல்லூரியிலும் ஒன்பதாம் பத்தாம் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் வேலை செய்யும் இடத்திலும் காதல் மணியடிக்கும்.
செவ்வாய் சனி சேர்க்கை
ஓருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை, காதலை நிர்ணயிக்கும் இடம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் செவ்வாய் சனி இணைந்திருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியை சுக்கிரன் செவ்வாய் சனி பார்த்தாலே காதல் திருமணம் நடைபெறும்.
கலப்புத்திருமணம்
ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் அதன் அதிபதி பாதிக்கப்பட்டிருந்தாலே குரு பாதிக்கப்பட்டிருந்தாலோ கலப்புத்திருமணத்தில் முடியும்.
ராகு கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ஐந்து ஏழு அதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பது, இணைவது சுக்கிரனுடன் ராகு கேது இணைவது வேறு மதத்தினருடன் திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.
பாம்பு கிரகங்களினால் பிரிவு
அதேபோல ஐந்து ஏழாம் வீடுகளில் சுக்கிரன் சனி செவ்வாய் இணைந்திருப்பதும் சுக்கிரன் ராகு தொடர்பு ஏற்படுவதும் காதல் திருமணத்திற்கான ஜாதக அமைப்பாகும். ஜாதகத்தில் ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம்.
காதல் சுகத்திற்கு காரணம்
ஒருவரின் ஜாதகத்தில் 12ம் இடமான அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.
திருமண தடை ஜாதக அமைப்பு
லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் இருந்தாலோ அல்லது சேர்ந்திருந்தாலோ களத்திர தோஷ ஜாதகம் ஆகும். சுக்கிரனுடன் சூரியன், சனி அல்லது ராகு, கேதுவுடன் கூடி இருந்தாலும், 7ஆம் இடம் பாவக் கிரகங்களின் வீடாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், மிகவும் பாதகமான களத்திர தோஷம் ஆகும். களத்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருந்தாலும் திருமண தடை ஏற்படும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
களத்திர தோஷம் உள்ள ஜாதகர்கள் அதே ஜாத அமைப்புள்ள ஜாதகரை திருமணம் செய்து கொள்வது சிறப்பு. அடிக்கடி குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். சுக்கிரன் ஸ்தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்வது, ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசனம் செய்வதும் களத்திர தோஷ ஜாதகருக்கு பரிகாரம் ஆகும். திருமண தடை நீங்கும் காதல் திருமணமோ, பெற்றோரினால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணமோ நடைபெறும்.