1010 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் ராஜராஜேஸ்வரம்... படையெடுத்து வந்தவர்கள் பட்டபாடு
ராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டி முடித்ததும், சிவபாத சேகரன் என்ற பட்டத்தையும் பெற்றான். ஆகவே, சிவபாத சேகரன் அதாவது ராஜராஜன் இறுதி காலத்தில் அமரரான இடம் என்பதை குறிக்கும் வகையில் இந்த ஊருக்கு சிவபாத சேக
Recommended Video
தஞ்சாவூர்: தமிழர்களின் கட்டடக் கலைத்திறனுக்குச் சான்றாக உயர்ந்து நிற்கிறது தஞ்சைப் பெரியகோயில், ஆயிரத்து பத்து ஆண்டுகளைக் கடந்து, நம் கண் முன்னே நிற்கும் பிரம்மாண்டம் என பெரிய கோயில் கட்டுமானத்தைப் பற்றி வரலாற்று வல்லுநர்கள் அதிசயிக்கின்றனர். 1010 ஆண்டுகளை கடந்தாலும் சந்திர சூரியர் உள்ளவரை தான் எழுப்பிய ராஜராஜேஸ்வரம் கொண்டப்படும் என்பதை அவர் அறிவார்.
ராஜ ராஜ சோழன் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்டது.
1010 ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும், இன்றைக்கும் பெரிய கோவிலை உலகமே அன்னாந்து பார்த்து வியக்கின்றது. 23 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் என்ற உடன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரிய கோவிலில் பெருமையை தேடி தேடி படிக்கின்றனர். தஞ்சாவூருக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து சிவ தரிசனம் பெற்று செல்கின்றனர். இப்படி ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் எப்படி ராஜ ராஜ சோழனுக்கு வந்தது என்பது பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
ராஜ ராஜ சோழனுக்கு ஆலோசனை சொன்ன கருவூர் சித்தர் - வணங்கினால் வளம் பெறலாம்
சிவ ஆலயம்
ராஜ ராஜன் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் மீது படையெடுத்து அதை கைப்பற்றிய பின்னர் தான், அங்குள்ள சிவாலயங்களை பார்த்து பிரமித்துப் போய் நாமும் ஏன், இதே போல் ஒரு சிவாலயத்தை மிகப்பிரமாண்டாக எழுப்பக்கூடாது என்று தன்னுடைய மனதில் கேள்வியை எழுப்பினான். அதற்கு பதிலாக தோன்றியதே தஞ்சை பெருவுடையார் ஆலயம். பல்லவ மன்னனான ராஜ சிம்மனால் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டிருந்த கயிலாதநாதர் கோயிலின் கட்டமைப்பும், சிற்ப வேலைப்பாடுகளும் ராஜ ராஜ சோழனின் மனதை பெரிதும் கவர்ந்தன. இதுவே இப்படி ஒரு ஆலயம் கட்டுவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. தஞ்சை பெருவுடையார், பஞ்ச பூதங்களின் அம்சம். இவரை தொழுவது பஞ்ச பூத லிங்கங்களை தொழுவதற்கு சமம்.
நோய் தீர்க்கும் ஈசன்
சரும நோயினால் அவஸ்தைப்பட்ட சோழ மன்னர், நோயின் கொடுமை தீர ஆலய யாத்திரையை மேற்கொண்டார். அருணகிரிநாதருக்கு வந்த நோய்க்குச் சமமான நோயால் பீடிக்கப்பட்ட சோழன், தனது ஆட்சிக்கு உட்பட்ட இலங்கை என இந்நாளில் அழைக்கப்படும் தலை மன்னார் காடு உறை ஈசனை வணங்கச் சென்றார். சென்றார்.
ஈசன் உத்தரவு
அப்போது மன்னரின் குலகுருவும் உடன் இருக்க, கருவறையின் உள்ளிருந்து அசரீரி ஒலித்தது ராஜராஜனே, எமக்கொரு கோ இல் சமை இம்மொழி கேட்ட மன்னர் தன் நாடு மீண்டு மனைவி லோகமாதேவியோடு திருவாரூர் தியாகராசரைத் தொழுது நாடி கேட்டனர். அப்பொழுது அகஸ்திய மகரிஷியே வானில் தோன்றி ஆசி கூற, ஓலைச்சுவடி படிக்கப்பட்டது. அதில் தஞ்சை, உறையூர், காஞ்சி என்ற மூன்று தலைநகர்களில் தஞ்சையில் காவிரிக்கரையில் கோயில் கட்டவும், இதற்கான கற்கள் திருச்சி மலைப் பகுதியிலிருந்து எடுக்கவும் ஆணை வந்தது. சிவனே நாடி படித்ததாக கூறுகிறார், சிவ வாக்கியர்.
நோய் நீக்கும் சிவன்
நர்மதை நதிக்கரையில் இருந்து மூலவருக்கு கற்களை கொண்டு வந்து அதில் ஒளி பொருந்தியதும், நீரோட்டம் நிறைந்ததுமான ஒரு லிங்க ஸ்வரூப கல்லை ப்ரஹந் நாயகி என்ற சோழரின் குலதெய்வம் காட்டி மறைந்தது. இந்தக் கல், லிங்க வடிவில் தானே பெரு வளர்ச்சி அடைந்ததால் இந்த லிங்க மூர்த்திக்கு பெருவுடையார் என்ற பெயர் வழங்கி வருகிறது. ராஜராஜனின் நோய் நீங்கும், வம்சம் தழைக்கும் என்றெல்லாம் கூறி வந்தவர், காலத்தால் கோயில் சிதிலம் அடையாது இருக்க, திருத்ர ப்ரஹந்மாதா தக்ஷிண மேரு என்ற யாகத்தை செய்யச் சொன்னார்.
சிம்மாசனம் பறிபோகும்
திருத்ர ப்ரஹந்மாதா தக்ஷிண மேரு யாகம் 288 நாட்கள் நடைபெற்றது. சுமார் ஆறு மண்டல காலம். கோவிலை கைப்பற்றும் எண்ணத்தில் - மாற்று அரசர்கள், அமைச்சர்கள், அரசு பிரதானிகர்கள் யாரும், ஆலயத்துள் எவ்வகையில் நுழைந்தாலும் அவர்கள் சிம்மாசனத்தை இழப்பர்; குலம் நசியும் என்று நந்தி மண்டபத்திலிருந்து அசரீரி ஒலித்தது. இதனாலேயே, பிரகதீஸ்வரன் சந்நதியுடைய தஞ்சை பெருங்கோயிலுக்கு அரசரோ, அவர் குடும்பத்தவரோ நுழைவது தீமை பயக்கும் என்கிறது, நாடி. இதனாலேயே மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்ற அரசர்களிடம் இருந்து இந்தக் கோயில் காப்பாற்றப்பட்டிருக்கிறது.
பிரம்மாண்ட நந்தி
பிரம்மாண்ட கோவிலைப்போல 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட நந்தி சிலை கோயில் முன்பாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சொந்த வீடு, கடை, நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்க எண்ணுபவரும், வாங்கிய சொத்துகள் விருத்தி ஆகவும் அமாவாசை திதியில் உச்சி வேளையில் நந்தியின் வால்புறத்தில் நின்று நந்தி சகஸ்ரநாமம் சொல்ல சித்திக்கும் என்கிறார் அகஸ்தியர்.
நோய்கள் நீங்கும் பிரதோஷ வழிபாடு
கொடிய நோய்கள், குறிப்பாக முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாக தோன்றும் கர்ம வினை நோய்களான புற்று, குஷ்டம், மலட்டுத்தன்மை போன்றவை 48 தேய்பிறை பிரதோஷ தரிசனத்தால் நீங்கும் என்கிறது நாடி. வேலையின்மை, தரித்திரம், பொருள் விரயம், மனக்குழப்பம், கொடிய சேதம், விபத்து, விபத்துக்களால் மரணம், பொருட்சேதம் போன்றவற்றிற்கும் வளர்பிறை பிரதோஷ பூஜையை 49 முறை மேற்கொண்டால், கண்டிப்பாக விமோசனம் உண்டு என்கிறது நாடி.
கல்வெட்டில் பெயர்
பெரிய கோவில் கல்வெட்டில் தஞ்சைப் பெரியகோயில் ராஜராஜீச்சரம் என்று குறிக்கப்படுகிறது. இலக்கணப்படி ராஜராஜேச்சரம் என்பது சரியானதாக இருந்தாலும், கல்வெட்டுகளில் ராஜராஜீச்சரம் என்ற பெயரே இடம் பெற்றுள்ளது. இக்கோயிலை உருவாக்கியவர், வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன். இவருடைய பணிக்கு உதவியாக மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன், இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்பவர்களும் குஞ்சரமல்லனுக்கு துணையாக கோயில் திருப்பணிகளைச் செய்தனர். இதனை கல்வெட்டில் இன்றைக்கும் நாம் காணலாம்.
ராஜராஜனின் குடும்பம்
மாமன்னன் ராஜராஜனுக்கு 10 மனைவியர் இருந்தனர். இவர்களில் தந்திசக்திவிடங்கி என்னும் லோகமாதேவியே பட்டத்தரசியாக இருந்தார். இவரைத் தவிர, சோழமாதேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன் மாதேவி, அபிமானவல்லி, லாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வில்லவன்மாதேவி, வானவன்மாதேவி ஆகியோர் இருந்தனர்.
பாசமான அப்பா
வானவன் மாதேவிக்குப் பிறந்த ஒரே மகன் புகழ் மிக்க ராஜேந்திரச் சோழன். இவனுக்கு ராஜராஜனால் வைக்கப்பட்ட பெயர் மதுராந்தகன். இது ராஜராஜனின் சித்தப்பா நினைவாக வைக்கப்பட்டதாகும். மதுராந்தகனுக்கு இரு சகோதரிகள். மூத்தவள் மாதேவ அடிகள். இளையவள் குந்தவை.
ராஜராஜசோழனும் குந்தவையும்
ராஜராஜன் தன்னை வளர்த்த பாட்டி செம்பியன் மாதேவியின் நினைவாக ஒரு மகளுக்கு மாதேவஅடிகள் என்றும், சகோதரி குந்தவையின் நினைவாக ஒரு மகளுக்கு குந்தவை என்றும் பெயரிட்டார். இதன்மூலம் அவருடைய பாசபந்தமும் அனைவருக்கும் தெரியும். சகோதரியின் மீதும் மகள்களின் மீது அதிக பாசம் கொண்டவர் ராஜ ராஜ சோழன்.
பொன்னியின் செல்வன்
அபயகுலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருண்மொழி, அழகிய சோழன், ரணமுக பீமன், ரவிகுல மாணிக்கம், ரவி வம்ச சிகாமணி, ராஜ கண்டியன், ராஜ சர்வக்ஞன், ராஜராஜன், ராஜாச்ரையன், ராஜகேசரி வர்மன், ராஜ மார்த்தாண்டன், ராஜவிநோதன், ராஜேந்திர சிம்மன், உத்தம சோழன், உத்துங்கதுங்கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கீர்த்தி பராக்கிரமன், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாத சேகரன், சோழகுல சுந்தரன், சோழ மார்த்தாண்டன், சோழ நாராயணன், சோழேந்திர சிம்மன், திருமுறை கண்ட சோழன், தெலிங்க குலகாலன், தைலகுலகாலன், நிகரிலிச் சோழன், நித்திய வினோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச் சோழன், மூர்த்த விக்ரமாபரணன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், க்ஷத்திரிய சிகாமணி. கல்வெட்டுக்கள் மூலம் இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.
மாமன்னர் சமாதி
கி.பி.1014ல் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள உடையலூரில் ராஜராஜன் மறைந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. அந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அதிலிருந்து சுமார் 80 அடி தொலைவில் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. இன்றைக்கு அது கவனிப்பாரற்று சிதிலடைமடைந்துள்ளது என்பதுதான் சோகமான உண்மை.