கனா கானும் காலங்கள்...
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
ஆழ்மனதிற்க்கும் மூளைக்கும் உள்ள தொடபினால் ஏற்படும் நிகழ்வே கனவு எனப்படும். கனவுகளைப் பற்றி விளக்கும்போது, 'நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு' என்றும், 'மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்' என்றும் சொல்லப்படுகிறது.
பொதுவாக வாதம், பித்தம், கபம் ஆகிய தாதுக்களின் மாறுபாட்டால் விளைவது கனவு என்று ஆயுர்வேதம் விவரிக்கும் கனவுகளை பற்றிய பலன்களை விஞ்ஞான பூர்வமாக இன்னமும் யாரும் நிரூபிக்கவில்லை. என்றாலும் நம்முடைய பழங்கால ஏடுகளில் காணப்படும் "ஸ்வப்பன சாஸ்திரம்" எனும் நூலும் இதில் உதவுகின்றது.
நாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத, எதிர்பார்க்காத கனவுகள் தோன்றுவதே உண்மையான கனவுகள் ஆகும். அப்படிப்பட்ட கனவுகளுக்கு உரிய பலன்களைத் தான் ஸ்வப்பன சாஸ்திரம் சொல்கிறது.
கனவுகள் எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். இரவு உறங்கும் போது எந்த நேரத்திலும் வரலாம். அதாவது படுத்துறங்கிய சில மணிகளிலோ, நள்ளிரவிலோ, விடியல் நேரத்திலோ வரக்கூடும். இப்படி நாம் காணும் கனவுகள் பலிக்கும் காலம் பற்றியும் கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
உறக்கம் என்பது உயிரினங்களுக்கு இயற்கை அளித்த மாபெரும் புத்துணர்வு நடத்தை. இது நம் அன்றாட அலுவலால் நம் உடல் அடையும் களைப்பினை போக்கவும் புத்துணர்வு பெறவும் உறக்கம் பெரும் உதவி செய்கிறது. பொதுவாக மன அழுத்தத்தில் இருப்பவர்களும், மன நிலை சரி இல்லாதவருக்கும் உறக்கம் வருவதில்லை.
பொதுவாக ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகள் வருவதில்லை என்பார். சற்றே குழப்ப மனதுடன் உறங்க செல்லும்போது கனவுகள் வருவது உண்டு. நல்ல தூக்கம் ஒரு வரப்பிரசாதாம். ஆனால் எப்படிப்பட்ட தூக்கம் என்பதை ஒருவர் ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளே தீர்மானிக்கின்றன.
ஜோதிடத்தில் கனவுகள்:
1.ஆழ்மனதிற்க்கும் மூளைக்கும் உள்ள தொடர்பினால் ஏற்படும் கற்பனை காட்சிகளே கனவுகள் என மனநிலை மற்றும் உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். "சந்த்ரமா மனஸோ ஜாத:" என வேதம் சந்திரனை போற்றுகிறது.கனவுதொழிற்சாலைக்கு சொந்தகாரர்கள் விஷ்னுவை அதிபதியாக கொண்ட புதனும் மனோகாரகன் சந்திரனும்தான் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது. கனவு என்பது உறக்கத்தோடு தொடர்புடைய நிகழ்வு என்பதால் சுக்கிரனும் காரகனாகிறார்.
2. ஒருவருக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும்.அதிக மகிழ்ச்சி, கோபம், அதிக பயம் இதுபோன்ற உணர்வுகள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. ஆக ஒருவருக்கு நல்ல மனோநிலை அமைய சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும்.
3. இரவின் காரகன் சந்திரன் ஆகும். அந்த சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொருத்தே ஒருவரின் இரவு பொழுதின் தன்மையையும் தூக்கத்தையும் தீர்மானிக்கமுடியும். இரவில்தான் தூங்கவேண்டும் என்பது இயற்க்கையின் நியதி. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டுவிட்டால் அவருக்கு தூக்கம் என்பது ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.
4. அடுத்ததாக தூக்கத்தை தீர்மானிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்க்கு வரும். நல்ல சுவையான உணவு (சுக்கிரன்), குளுமையான சூழ்நிலை (சுக்கிரன்) இனிமையான இசை (சுக்கிரன்) வசதியான படுக்கைகள் மற்றும் நறுமணம் மிக்க மலர்கள் மற்றும் சுவை நிறைந்த பழங்கள் (சுக்கிரன்) கூடவே அழகான மற்றும் அன்பான மனைவி (சுக்கிரன்) இவையெல்லாம் நினைத்து பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம் சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும்.
5.ஒரு ஜாதகத்தில் புதன் சந்திரன் சுக்கிரன் ஆகிய மூன்றும் கேந்திர பலம், திரிகோண பலம் பெற்று நல்ல நிலையில் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருப்பதோடு இனிமையான தூக்கத்திற்க்கு குறைவிருக்காது. இந்த மூன்று கிரகங்களில் ஒரு கிரகம் பலமிழந்துவிட்டாலும் அந்த ஜாதகரின் தூக்கம் சுகமானதாக அமையாது. சந்திரன் புதன் மற்றும் சுக்கிரன் அசுபதன்மை பெற்றவர்களுக்குதான் தேவையற்ற கனவுகள் வருகின்றன.
6. கர்ம வினைக்கும் தூக்கத்திற்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறான காரியங்கள் தொடர்ந்து செய்யும் ஒருவரின் கர்மவினையால் தூக்கம் கேள்விக்குறியாகிவிடும். "வினை விதைத்தவன் வினையறுப்பான்" பழமொழி.
கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்கள் சனி, ராகு, கேது மற்றும் குருவாகும். சனி, ராகு மற்றும் கேது லக்னத்திலோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களிலோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ அல்லது லக்னாதிபதி, சந்திரன் மற்றும் சூரியனோடு நின்று கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்களாகும். குரு மறைமுகமாக கர்ம வினையை தெரிவிப்பவர் ஆவார். கெட்ட கனவுகள் உறக்கத்தில் ஏற்படுவது நாம் செய்த கர்ம வினை பலன்களாகும்.
7 . பாவக ரீதியாக ஒருவர் தூக்க சுகத்தை அனுபவிக்க லக்ன பாவம் பலமாகவும் அசுப கிரகங்கள் தொடர்பில்லாமலும் சுப கிரக சேர்க்கையும் பெற்று இருக்க வேணெடும். ஓருவர ஜாதகத்தில் லக்னம் கெட்டுப்போன நிலையில் எந்தகிரகம் எந்த சுகம் தந்தாலும் அது ஒட்டை பாத்திரத்தில் நிரப்பிய நீர் போன்று ஜாதகருக்கு பலனளிக்காமல் போய்விடும்.
சூரியன் முதல் பாவத்துக்கு அதிபதி மற்றும் ஆத்ம காரகன் ஆகின்றார். மற்றும் செவ்வாய் காலபுருஷ ராசிக்கு லக்னாதிபதி ஆகின்றார். இவற்களின் நிலையும் நிம்மதியான தூக்கத்திற்க்கு முக்கியமானதாகும்.
8. அடுத்தது தூக்கத்திறக்கும் கனவிற்க்கும் ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். எனவேதான் இதனை அயன சயன போக மோக்ஷ. ஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் 12ம் பாவம் வலுவாகவே கூடாது. தூக்கத்தை பொருத்தவரை 12ம் பாவாதிபதியின் நிலையை கொண்டும் அதனோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களை கொண்டும் தூக்கத்தின் தன்மையை தீர்மானித்துவிடலாம். 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல. புதனோ சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூக்கிக்கொண்டே இருப்பார்கள்.
காலபுருஷனுக்கு 12ம்பாவ அதிபதியான குரு கெட்டுவிட்டால் அவர்களுக்கு நல்ல தூக்கம் என்பது கனவில் கூட கிடைக்காது. விதவிதமான கனவுகளைதான் காணமுடியும்.
எந்த ராசிக்காரர்களுக்கு கனவு நிறைய வரும்?
1. சந்திரனின் கடகராசியையும் புதனின் மிதுன கன்னியையும் மற்றும் சுக்கிரனின் ரிஷப துலா ராசிகளை லக்னமாகவோ ராசியாகவோ பன்னிரெண்டாம் பாவமாகவோ கொண்டவர்களுக்கு கனவு வரும்.
2. காலபுருஷனுக்கு 12ம்மிடம் மற்றும் சுக்கிரன் உச்சாமாகி புதன் நீசமாகும் நீர்ராசியான மீனத்தை லக்னம் மற்றும் ராசியாக கொண்டவர்களுக்கு கலர் கலராக கனவு வரும்.
3. புதனின் வீடான கன்னியில் சுக்கிரன் நீசமானவர்களுக்கு ஸ்வப்பன சுந்தரியின் நினைப்பாகவே இருப்பதால் கனவில் ஸ்வப்பன சுந்தரியும் அதனால் அதனால் ஸ்வப்பன ஸ்கலிதமும் ஏற்பட்டு நரம்புத்தளர்ச்சி நோயும் வரும்.
4. மீன ராசியில் பிறந்த கணிதமேதை ராமானுஜர் அவர்களுக்கு கணிதத்தை பற்றியே சிந்திப்பதால் சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற ஸ்ரீமகாலக்ஷமியான நாமகிரி தாயார் கணித சூத்திரங்களை கனவில் வந்து அளித்தது குறிப்பிடத்தக்கது.
கனவுகளற்ற அமைதியான தூக்கத்திற்கான பரிகார ஸ்தலங்கள்:
கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார். நவதிருப்பதிகளில் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும்.
சந்திர ஸ்தலங்கள்:
கும்பகோணத்திற்கருகில் உள்ள திங்களுர், திருப்பதி மற்றும் குணசீலம், சோமநாதேஸ்வரர், போன்றவை திங்கள் பரிகார ஸ்தலங்களாகும்.
சுக்கிர பரிகார ஸ்தலங்கள்:
கஞ்சனுர், ஸ்ரீரங்கம், மற்றும் திரு மயிலை அருள்மிகு வெள்ளீஸ்வரர் ஆலயங்கள் சுக்கிரன் பரிகார ஸ்தலங்களாகும்.