அரசு தேர்வெழுதும் மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவ மஹாயாகம் - சரஸ்வதி மந்திரம்
அரசு தேர்வெழுதும் மாணவர்களுக்காக கீழப்பாவூர் நரசிம்மர் பீடத்தில் பிப்ரவரி16 ஆம் தேதி ஞாயிறு கிழமை லட்சுமி ஹயக்ரீவ மஹாயாகம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி: அரசு பொதுத்தேர்வுகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளன. மார்ச் மாதம் நடக்க இருக்கும் அரசு பொதுத் தேர்வை நினைத்து, ஜனவரி மாதத்திலேயே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிறு பய உணர்வு தோன்ற ஆரம்பித்து விடும். பொது தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பே அன்றாட வாழ்வியல், உணவு முறையில் சிறு மாற்றங்கள் செய்தால் உங்களின் ஓராண்டு உழைப்பு பலன் தரும். அரசு தேர்வெழுதும் மாணவர்களுக்காக கீழப்பாவூர் நரசிம்மர் பீடத்தில் பிப்ரவரி16 ஆம் தேதி ஞாயிறு கிழமை லட்சுமி ஹயக்ரீவ மஹாயாகம் நடைபெற உள்ளது. இறை வழிபாடு, மந்திரங்கள் மனதில் தைரியத்தை அளிப்பதோடு மாணவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்கும்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர்-சுரண்டை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்மர் பீடத்தில் அரசு தேர்வெழுதும் மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவ மஹாயாகம் நாளை மறுதினம் ஞாயிறு காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
10,11,12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர், மாணவியருக்காக நடத்தப்படும் இந்த யாகமானது, சிறந்த கல்வி, நிறைந்த ஞானம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவதற்காக நடத்தப்படுவதுதாகவும், எனவே மாணவர்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டு பயன்பெறும் படி லட்சுமி நரசிம்ம பீடத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இறை வழிபாடு நம்பிக்கையை அதிகரிக்கும் நினைவாற்றலை அதிகமாக்கும். தடைகளை தகர்த்து வெற்றிகளை நம் கைவசமாக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்கள் முருகப்பெருமானை வணங்கலாம். தேர்வில் அதிக மதிப்பெண் பெற சரஸ்வதி தேவியை வணங்குங்கள். அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
‘ஓம் வாக்தேவ்யை ச
வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீ
ப்ரசோதயாத்'
என்ற சரஸ்வதி மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும். நினைவாற்றல் அதிகமாகும்.
ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட நீங்க பொதுத்தேர்வில் வெற்றி பெற விநாயகரை வணங்குங்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெண்மை.
‘சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே'
என்ற சுலோகத்தை தினமும் 6 முறை பாராயணம் செய்து, விநாயகரை வழிபடுங்கள். .
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்டவர்கள். தேர்வில் வெற்றி பெற மகா விஷ்ணுவை வணங்குங்கள். அதிர்ஷ்ட நிறம் பச்சை.
‘ஓம் நாராயணாய வித்மஹே
வாசு தேவாய தீமஹி தந்தோ
விஷ்ணு: ப்ரசோதயாத்'
இந்த மந்திரத்தை தினமும் 5 முறை பாராயணம் செய்து மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள். வெற்றிகள் தேடி வரும்.
கடகம்
சாதனை படைக்கப் போகும் கடக ராசிக்காரர்கள் சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள். அதிர்ஷ்ட நிறம் வெண்மை. அபிராமி அன்னையை வழிபட வேண்டும்.
‘தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
என்ற அபிராமி அந்தாதி பாடலை தினமும் 2 முறை பாராயணம் செய்வதோடு, அபிராமியை வழிபாடு செய்யுங்கள். தேர்வில் வெற்றிகள் தேடி வரும்.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே நீங்கள் தினமும் உங்கள் ராசிநாதனான சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள்.
உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
‘ஓம் நமோ ஆதித்யாய..
ஆயுள், ஆரோக்கியம்,
புத்திர் பலம் தேஹிமே சதா!'
என்ற மந்திரத்தை தினமும் காலை நேரத்தில் சூரிய நமஸ்காரணம் செய்யும் போது பாராயணம் செய்து வாருங்கள். அதோடு ஆதித்ய ஹிருதயம் கேட்பதும் நல்ல பலன் தரும்.
கன்னி
புத பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, நீங்கள் லட்சுமி ஹயக்ரீவரை வணங்குங்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
‘ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ
முபாஸ்மஹே'
இந்த மந்திரத்தை தினமும் 5 முறை படித்து ஹயக்ரீவரை வழிபாடு செய்து வந்தால் வெற்றி நிச்சயம்.
துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற விரும்பிய கல்லூரிகளில் சேர புவனேஸ்வரி அம்மனை வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் வெண்மை.
‘ஓம் ஸ்ரீம்
ஹ்ரீம் ஸ்ரீம்
புவனேஸ்வர்யை நமஹ'
என்ற மந்திரத்தை தினமும் 6 முறை பாராயணம் செய்து வந்தால், சாதனை படைக்கலாம்.
விருச்சிகம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே உங்கள் லட்சியம் நிறைவேற, முருகப்பெருமானை வழிபடுங்கள். அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
‘சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு'
என்று செவ்வாய் கிரகத்திற்கான பாடலை, தினமும் 9 முறை பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் தேர்வில் வெற்றிகள் தேடி வரும்.
தனுசு
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, நீங்க குரு கவச பாடலை மூன்று முறை பாட வேண்டும். வெற்றிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
‘குணமிகு வியாழ குருபகவானே
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்'
மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாக மகரம் ராசிக்காரர்கள் பொதுத்தேர்வில் வெற்றி பெற ராம பக்தர் ஆஞ்சநேயரை வழிபடலாம். அனுமன் மந்திரத்தை தினமும்
‘ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்'
என்ற மந்திரத்தை 8 முறை பாராயணம் செய்து அனுமனை வழிபாடு செய்து வந்தால் நினைவாற்றல் அதிகமாகும். தேர்வில் வெற்றி கிடைக்கும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்கள் தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து வாருங்கள். அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கீழ்கண்ட மந்திரத்தை தினமும் 8 முறை கூறி வழிபாடு செய்து வந்தால் நினைவாற்றல் அதிகமாகும்.
‘கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்'
மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்கார மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற குரு மந்திரத்தை தினமும் மூன்று முறை பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் வெற்றி வந்து சேரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
‘குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹ;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ'
மந்திரம் சொல்வதோடு ஒருமுறை சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வணங்கி வரலாம்.