பிரதோஷம்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் தரிசனம்
ருண விமோசன பிரதோச தினத்தை முன்னிட்டு நேற்று பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் பெரியகோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில்
விருதுநகர்: ருண விமோசன பிரதோச தினத்தை முன்னிட்டு நேற்று பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் பெரியகோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஆறு மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.
இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பெளர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் தமிழக அரசு கடந்த 1ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
நாளைய தினம் மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று முதல் பக்தர்கள் நான்கு நாட்கள் கோவிலுக்கு சென்று தரிசிக்க கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ருண விமோசன பிரதோஷ தினத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு
தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் அமர்ந்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு கடந்த ஆறு மாத காலத்தில் 12 முறை பக்தர்கள் இன்றி பிரதோஷம் நடந்தது. நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி நந்தியெம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்க 6 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பெரிய கோவிலுக்குள் வந்த பக்தர்களுக்கு வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். உள்ளூர் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2-ஆக பிரிப்பு... விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம்..!
பக்தர்கள் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. பிரதோஷத்தில் பங்கேற்கும் பக்தர்கள் அமருவதற்காக சமூக இடைவெளியுடன் வட்டம் போடப்பட்டிருந்தது. இதில் வெளியூரில் இருந்து வந்த பக்தர்களும், உள்ளூர் பக்தர்களும் அமர வைக்கப்பட்டனர். பின்னர் பெரிய நந்திக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழக்கமாக பிரதோஷ வழிபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். நேற்றைய தினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.