பிரயாக்ராஜ் கும்பமேளா 2019: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் கிடைக்கும் புண்ணியங்கள்
பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யமுனை, கங்கை, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
Recommended Video
பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், புனித நீராடலுடன் அர்த்த கும்பமேளா திருவிழா ஜனவரி 15ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவதே புண்ணியம் இதனால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் என்கின்றனர் சாதுக்ககள்.
பிரயாக்ராஜ் நகரில் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்த கும்பமேளா தை 15ஆம் தேதி மகரசங்கராந்தி தினத்தன்று அதிகாலை 4 மணிக்குத் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலுடன் தொடங்கியது. பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரில் திரண்டுள்ளனர்.
வேதங்களும், ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்கள் கொண்டாடும் புண்ணிய பூமி பிரயாக் நகரம். இந்த புண்ணிய நகரில் ஜனவரி 15 தொடங்கி மார்ச் 4ஆம் தேதி வரை நடைபெறும் இந்த அர்த்த கும்பமேளாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 16 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரயாகை பகுதியில் 1580ஆம் ஆண்டு, மாமன்னர் அக்பர் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி, அதற்கு 'இலாஹாபாத்' என்று பெயரிட்டார். பின்னர், ஷாஜகான் காலத்தில் 'அலகாபாத்' என்று மாறியதாக வரலாறு குறிப்பிடுகிறது.
ஆர்த கும்பமேளா
பூர்ண கும்ப மேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், அர்த்த கும்ப மேளா 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கும்பமேளா ஹரித்துவாரில் முதலில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிரயாக், நாசிக், உஜ்ஜயினி நகரில் நடைபெறுகிறது. இந்த நகரங்களில் மட்டும் ஏன் கும்பமேளா நடைபெறுகிறது என்பதற்கு ஒரு புராண கதை கூறப்படுகிறது. இந்த நகரங்களில் அமுதம் சிந்தியுள்ளதாம்.
புராண கதை
தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, இந்திரனின் மகன் ஜெயந்தனுக்கு அவசரம் தாங்கவில்லை. பறவை வடிவில் வந்து அமுதக் கும்பத்தைத் தூக்கிக்கொண்டு பறந்தான். அசுரர்கள், வாயு வேகத்தில் அவனைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் இடையே பன்னிரண்டு நாட்கள் (அதாவது பன்னிரண்டு வருடங்கள்) இழுபறிப் போர் நடந்தது. அந்த சமயம் சந்திரன் கும்பத்திலிருந்து அமுதம் சிந்தாமல் தடுக்க முயற்சி செய்தான். சூரியன், கும்பம் உடைந்து விடக்கூடாதே என்று வருத்தப்பட்டான். பிரகஸ்பதி அசுரர்கள் அபகரித்துச் சென்றுவிடாமல் காப்பாற்ற முயன்றான். சனி பகவானோ, ஜயந்தன் ஒரே மிடறில் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வதென்று கவலைப் பட்டான். இப்படி நால் வரும் கூடி முயன்றும் நான்கு இடங்களில் அமுதம் சிந்திவிட்டது. அதன் விளைவால் அந்த இடங்களின் புனிதம் பலமடங்கு உயர்ந்தது. அந்த இடங்கள்தான் ஹரித்வார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக் ஆகியவை.
புனித நீராட குவிந்த பக்தர்கள்
உலகிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடும் மதம் சார்ந்த விழாவாக கும்ப மேளா உள்ளது. இதற்காக பல கோடிக்கணக்கான இந்து மத யாத்ரீகர்கள் பிரயாக்ராஜ் நகரில் கடல்போல திரண்டுள்ளனர். பிரயாக்ராஜில் கும்ப மேளாவிற்காக 4,300 கோடி ரூபாய் செலவில் புதிய நகரமே உருவாக்கப்பட்டுள்ளது. கும்ப மேளாவிற்கு உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என்ற பெருமையை யுனெஸ்கோ அளித்துள்ளது. கும்ப மேளாவிற்கு வருபவர்களை கவரும் விதமாக பிரயாக்ராஜ் நகர் முழுவதும் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
மூன்று நதிகள் சங்கமம்
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, புராணம் சார்ந்த சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிப்பதால் திரிவேணி சங்கமம் என்றழைக்கப்படுகிறது. இந்த சங்கமத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துமதத்தினர் நம்பிக்கை. கங்கையாற்றங்கரையில் 250 கி.மீ நீளம் கொண்ட ‘கும்ப்நகரி' என்ற தற்காலிக நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக நகரத்தில் மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், கடை தெருக்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
சாம்பல் பூசிய சாதுக்கள்
மதுபழக்கம் இல்லாத மற்றும் மாமிசம் சாப்பிடாத சைவ போலீசார் 20,000 பேர் கும்ப மேளா பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வி.ஐ.பிக்கள் ஹெலிகாப்டரில் வந்து செல்ல வசதியாக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அகோரிகள் முகாம்
பக்தர்கள் தங்குவதற்கு தற்காலிகக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வி.ஐ.பிக்கள், முக்கியப் பிரமுகர்கள் தங்குவதற்கு வசதியாக 4,000 சொகுசு குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 நட்சத்திர ஹோட்டல் அறைகளுக்கு இணையான வசதிகளுடன் இருக்கும் இந்த சொகுசு குடில்களில் தங்குவதற்கு 15,000 ரூபாயில் இருந்து 24,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கும்ப மேளா நடைபெறும் இடத்தில் தற்போது, ஆயிரக்கணக்கான சாதுக்கள், அகோரிகள் முகாமிட்டுள்ளனர்.
யுனெஸ்கோ பெருமை
இந்த கும்ப மேளாவிற்கு உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என்ற பெருமையை யுனெஸ்கோ அளித்துள்ளது. கும்ப மேளாவிற்கு வருபவர்களை கவரும் விதமாக பிரயாக்ராஜ் நகர் முழுவதும் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
மகர சங்கராந்தி நாளன்று 2 கோடி பேர் கும்ப மேளாவில் நீராடியுள்ளனர் என்று பிரயாக்ராஜ் மேளா ஆணையத்தின் புள்ளிவிபரம் கூறுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டில் நடந்த கும்ப மேளாவில் 12 கோடி பேர் இங்கு திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடிக்கணக்கான மக்கள் நீராடல்
பிப்ரவரி 4ஆம் தேதி தை அமாவாசை தினம் வட மாநிலங்களில் மவுனி அமாவாசையாக அனுஷ்டிக்கப்படுகிறது. உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாள். இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி மூன்னோர்களை வழிபடுவது மரபு. கும்பமேளா நடைபெறும் இந்த சமயத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு அன்றைய தினம் 3 கோடி பக்தர்கள் நீராட திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புனித நீராட ஏற்ற நாட்கள்
பிப்ரவரி 10ஆம் தேதி வசந்த பஞ்சமி அன்று ஒரே நாளில் பல லட்சம் பக்தர்கள் வருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 12 ரத சப்தமி, பிப்ரவரி 13 பீஷ்டாஷ்டமி, பிப்ரவரி 16 ஜெய ஏகாதசி, பிப்ரவரி 19 மகாபூர்ணிமா, மார்ச் 05 நாள் மகாசிவராத்திரி ஆகிய நாட்களும் நீராடுவதற்கு புண்ணிய தினங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.