மனசுக்கு பிடித்த கணவன் அமையனுமா? அங்காரக ஜெயந்திநாளில் செவ்வாயை வணங்குங்கள்!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: அங்காரகனுக்கு பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.
அத்தகைய செவ்வாயை பற்றி வேதங்களில், பூமாதேவியின் கர்பத்தில் உதித்தவன், மின்னலை போல ஒளியைக் கொண்டவன், அழகானவன், சக்தி ஆயுதம் தரிப்பவன் என்று கூறப்பட்டுள்ளது.
பௌமன், பூமிகாரகன்,அங்காரகன் மற்றும் செவ்வாய் என்று அழைக்கப்படும் சிவந்த நிறம் கொண்ட இக்கோள் சிவன் தியானத்திலிருந்தபோது பூமியில் சிந்திய வியர்வையிலிருந்து தோன்றியது. பூமாதேவி வளர்த்ததால் பௌமன் என்ற பெயரினைப் பெற்றது எனப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவபெருமான் யோகத்திலிருந்த பொழுது, அவருடைய நெற்றிக் கண்ணில் வியர்வை உண்டாகி அது பூமியின் மீது விழுந்தது. அந்த வியர்வையே பின்னர் ஆண் குழந்தையாக மாறியது. பூமாதேவி அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தாள். முருகப்பெருமானின் சகோதரர் இவர் என்பதால் "செவ்வாய்" என்ற, அங்காரகனை முருகப் பெருமானின் அம்சமாக வளர்த்து வந்தார் என்று மேலும் புராணங்எளில் செவ்வாயை பற்றி சிறப்பாக கூறுகின்றன.
மற்றொரு கதையும், செவ்வாயை பற்றி கூறப்படுவதுண்டு. பாரத்வாஜ மகரிஷி நதி தீரத்தில் மிக அழகான ஒரு பெண்ணைக் கண்டார். அவளது அழகும், சொந்தர்யமும், பரத்வாஜ மகரிஷிக்கு மனத்தைக் கவர்ந்தது. எவ்வளவோ முறை தன் மனத்தைக் கட்டுப்படுத்திப் பார்த்தும் அவரால் அவள் மீது கொண்ட ஆசையை மாற்ற முடியவில்லை.
அவரது உடலில் இருந்து "ரேதஸ்" பூமியில் விழுந்தது. பின்னர் அந்த "ரேதஸ்" ஒரு ஆண்குழந்தையாக உருமாறிற்று. பூமாதேவி அந்த ஆண் குழந்தையை எடுத்து வளர்த்தாள். அந்த குழந்தைக்கு பௌமன் என்ற திருநாமம் வழங்கப்பட்டது. பௌமன் இறைவனை நோக்கி நீண்டகாலம் கடும்தவம் இயற்றினான். அவனுடைய தவவலிமையைக் கண்டு, நவக்ரகத்தில் ஒரு கிரகமாக மாற்றி, அவனுக்கு "அங்காரகன்" என்ற மற்றொரு பெயரும் வழங்கப்பட்டது. லிங்கபுராணம் அங்காரகனின் பிறப்பை கூறுகிறது.
பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர், செவ்வாய். அவந்தி நாட்டிற்கு அதிபதி. வேல், கதை, சூலம், கட்கம் வைத்துள்ள நான்கு கைகளை உடையவர். அக்னி நிறத்தோடு காணப்படும் சிவந்த ஆடை, செந்நிறப்பூவையும், பவளத்தையும் அணிந்தவர்.
பன்னிரண்டு ராசிகளில் மேஷம் மற்றும் விருச்சக ராசியுடன் செவ்வாய் தொடர்புபடுத்தப்படுகிறது.
ஜோதிடத்தில் செவ்வாய்:
ஜோதிடத்தில் ரத்தத்திற்கும் ரத்த தொடர்பில் உள்ள சகோதரர்களுக்கும் நமது உடலில், எலும்பினுள் மஜ்ஜை, பூமிக்கும் உஷ்ணம், கோபம்,
ஆண்மைக்கும், வீரத்திற்க்கும், உடல் உறுதிக்கும், மன உறுதிக்கும் செவ்வாய் தான் காரகர்.
பெண்களுக்கு கணவரை குறிப்பவரும், காமத்தில் வீரியத்தை குறிப்பவரும் செவ்வாய்தான். அவர் அருள் இருந்தால்தான் திருமண வாழ்க்கை.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்கள் ஜாதகங்களில் செவ்வாயின் பலம் நிறைந்திருக்கும்.
அரசியல் தலைவர்கள், காவல் அதிகாரிகள், நாட்டுத் தளபதிகள், நீதிபதிகள், பொறியியல் வல்லுனர்கள் ஆகியோருக்கு அங்காரகனே காரகர்
புரட்ச்சி செய்கின்ற அனைவரும் அங்காரகன் அருளை பெற்றவர்கள். கண்டிப்பு, தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை பந்தாடும் பராக்கிரமம் இவற்றையும் அருளுபவன் செவ்வாய்.
ஆயுதம் தரிப்போன், அரச இனத்தோன், செந்நிறத்தோன், கடும் பார்வை உடையவன், தற்பெருமை பிரியன், பொறுமை இல்லாதவன், வேட்டைப் பிரியன், துணிச்சல்காரனும் அங்காரகன்தான். பவழம் இவனது ரத்தினம். நெருப்புக்கு சொந்தக்காரன். ஆண்மகன். தென்திசைக்கு அதிபதி.
மருத்துவராவதற்க்கும்,
வியாதிகள் குணமாவதற்கும், செவ்வாயின் அருள் வேண்டும்.
அறுவை சிகிச்சை செய்வதும்
வியாதி குணமாக மருந்து சாப்பிடுவதையும் செவ்வாய் அன்று தொடங்கினால், விரைவில் குணமடையலாம்.
கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள் செவ்வாய் கிழமையிலோ அல்லது செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்கள் உள்ள நாளிலோ கடனில் சிறுபகுதியை அடைத்தால் விரைவில் அடைந்துவிடும்.
ஜோதிடத்தில் செவ்வாய் தரும் யோகங்களில் பஞ்சமகா புருஷ யோகமான ருச்சக யோகம், சந்திர மங்கள யோகம், குரு மங்கள யோகம், ப்ருகு மங்கள யோகம் போன்றவை மிகவும் பிரசித்தி பெற்ற நன்மை தரும் யோகங்களாகும்.
செவ்வாய் பரிகார ஸ்தலங்கள்:
தமிழ்நாட்டில் அங்காரகனுக்கு மூன்று பிரசித்திப் பெற்ற கோவில்கள் உண்டு.
திருச்சிறுகுடி - இது மாயாவரத்திர்க்கு பக்கத்தில் பேராளம் ரயில் நிலையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
வைத்தீஸ்வரன் கோவில் - மாயவரத்திலிருந்து சிதம்பரம் போகும் பாதையில் இருக்கிறது.
ஆறு படை வீடுகளில் முக்கியமானதாக கருதப்படும் பழனி மலைக்கு அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி கூட முருகப்பெருமனுக்குரிய (செவ்வாய்) பரிகாரத் தலமாகும்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் செவ்வாய்க்கு தனி சன்னதி உள்ளது. இது சென்னையில் உள்ள நவக்ரஹ ஸ்தலங்களில் செவ்வாய்க்குறிய ஸ்தலமாகும்.