புரட்டாசி பவுர்ணமி பூஜை: தன்வந்திரி பீடத்தில் கல்யாண வரம், குழந்தை வரம் தரும் யாகங்கள்
தன்வந்திரி பீடத்தில் பவுர்ணமியை முன்னிட்டு கல்யாண வரம் தரும் கந்தர்வ ராஜ ஹோமம் - காத்யாயனி யாகத்துடன் குழந்தை வரம் தரும் சந்தான ராஜ கோபால யாகம் நடைபெற்றது.
வேலூர்: திருமணம் மனிதர்களின் வாழ்வில் முக்கியமானது. கோடிக்கணக்கான சொத்துக்கள் செல்வங்கள் இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லை என்றால் மனிதர்கள் வாழ்க்கை பூர்த்தியடையாது. இந்த இரண்டிற்கும் ஏற்படும் தடைகள் நீங்க வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 24.09.2018 திங்கள்கிழமை பவுர்ணமியை முன்னிட்டு யாகங்கள் நடைபெற்றன.
ஆண்-பெண் திருமணத் தடை நீங்க காத்தயாயனி யாகம், சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் தினசரி ஹோமங்களாலும், மந்திர ஜபங்களாலும், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆத்மார்த்த பூஜைகளின் மூலமாகவும், ஸ்ரீ தன்வந்திரி பகவானின் பார்வையினாலும், ஹோம புகையினாலும், மூலிகை விருட்சங்களாலும், பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி ஸ்ரீ தன்வந்திரி மந்திரத்தின் அதிர்வுகளாலும், பல்வேறு தெய்வங்களின் தெய்வீக தன்மையினாலும், புனித பூமியினாலும், இங்கு வருகை புரியும் புனித ஆத்மாக்களாலும் இத்தலத்திற்கு பல்வேறு வகையிலும் ஆகர்ஷணங்கள் ஏற்பட்டு வளாகம் முழுவதும் அதிர் வலைகளை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது இந்த மஹா ஆரோக்ய பீடம்.
இச்சிறப்பின் மூலமாக இங்கு நடைபெறும் யாக பூஜைகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்து வருகிறது. மேலும் பங்கேற்கும் நபர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் செல்கின்றனர். இப் பீடத்தில் பிரதி மாதம் பவுர்ணமியில் குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை வரம் வேண்டி சந்தான பரமேஸ்வரர் யாகம், சந்தான கோபால யாகம், நவநீத கிருஷ்ணர் யாகம், போன்ற யாகங்களும் நடைபெறுகின்றன.
திருமணம் ஆகாத ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வ ராஜ யாகமும், பெண்களின் திருமணம் விரைவில் நடைபெற வேண்டி சுயம்வர கலாபார்வதி யாகம், காமேஸ்வரி துளசி யக்ஞமும் காத்யாயனி யாகம், மங்கள கௌரி யாகம் போன்ற யாகங்கள் பக்தர்களின் விருப்பத்திற்கு தகுந்தவாறு நடைபெற்று வருகிறது.
பவுர்ணமி நாளில் யாகங்கள்
அந்த வகையில் நேற்று நடைபெற்ற பவுர்ணமி யாகத்தில் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், சுக்கிர தோஷம் அகலவும், கால சர்ப தோஷம், பித்ரு தோஷங்கள் நீங்கவும், பல்வேறு வகையான மந்திரங்களை உச்சரித்து நூறுக்கும் மேற்பட்ட மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், நெய், தேன் கொண்டு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கலச பூஜை, காலசக்கிர பூஜை, விநாயகர் வழிபாடு, சிவன் - பார்வதி வழிபாடு, ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணெய் சார்த்தி வைபவமாக நடைபெற்றது.
கலசாபிஷேகமும் தொட்டில் பூஜையும்
பின்பு திருமணம் ஆகாத ஆண், பெண்களுக்கு கலசாபிஷேகமும், குழந்தை வரம் வேண்டி வந்துள்ள தமபதிகள் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தொட்டில் பூஜையும் நடைபெற்று, ஸ்வாமிகளின் ஆசி பெற்று சிறப்பு அன்னதானத்தில் பங்கேற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.
மாலை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஏக சரீர ராகு - கேதுவிற்கு அன்னதோஷம் விலகவும், உணவு செரிமானம் ஏற்படவும், வயிறு உபாதைகள் நீங்கவும் அன்னாபிஷேகமும், 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும், ஸ்ரீ சத்திய நாராயண பெருமாளுக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.