புரட்டாசி அமாவாசை : சுக்கிரவார அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர தோஷங்கள் நீங்கும்
புரட்டாசி அமாவாசை தினமான இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. சுக்கிரவார அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டால் சுகங்கள் கிடைக்கும்.
சென்னை: அமாவாசை தினம் நமது முன்னோர்களை வழிபட ஏற்ற நாள், இன்றைய தினம் திதி தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடுவது மட்டுமல்லாமல் அன்னதானம் செய்வது நல்லது. ஏழை எளியவர்களுக்கு உணவு தானம் செய்ய முன்னோர்கள் ஆசி கிடைக்கும் சந்ததிகள் விருத்தியடையும், எத்தகைய ஜாதக தோஷம் இருந்தாலும் நீங்கும். சுக்கிரவார தினமான இன்றைய தினம் அமாவாசை வருவதால் முன்னோர்களை வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கும்.
நம்மோடு வாழ்ந்து மறைந்துவிட்ட நமது முன்னோர்களான பித்ருக்கள் அனைவருமே, நாமும் நம்முடைய சந்ததிகளும் நலமுடன் வாழவேண்டும் என்று தான் விரும்புவார்கள். எனவே தான், அவர்கள் உயிரோடு இருந்தபோது, அவர்களை முறையாக பேணி காத்து அவர்களின் பசியை போக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் இறந்த பிறகாவது அவர்களின் பசியை போக்கி அவர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்த வேண்டும். இது தான் பிதுர்க்கடன் என கூறப்படுகிறது.
வீட்டில் இருந்த முன்னோர்கள் இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம். இதன் மூலம் முன்னேர்களின் ஆன்மா மகிழ்ச்சியடைவதோடு தலைமுறைகளும் சிக்கல் இன்றி வாழ ஆசி கிடைக்கும்.
சுக்கிரவார அமாவாசை
ஆண்டு தோறும் ஆடி,புரட்டாசி, தை அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வணங்குவது சிறப்பு. இந்த ஆண்டு புரட்டாசி 1ஆம் தேதி மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டது. இன்று புரட்டாசி கடைசி நாள் அமாவாசை வந்துள்ளதால் இன்றும் திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்பு.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
முன்னோர்களுக்கு அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ சமுத்திரக் கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட்டு வேண்டிக்கொள்வது அவசியம். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொது இடங்கள் கடற்கரைகளில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரவர் வீடுகளிலேயே திதி கொடுக்கலாம்.
பித்ரு தோஷம் நீங்கும்
அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால், நமது பித்ருக்கள் மிகுந்த வருத்தத்துடன் பிதுர் லோகம் சென்றுவிடுவார்கள். இதனால் நமக்கு தோஷங்கள் ஏற்பட்டு நல்ல காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். நாம் முறையாக பித்ரு கடன் செய்து அவர்களின் பசியை போக்கி அவர்களை சாந்தப்படுத்துவதன் மூலம் நம்முடைய பித்ரு தோஷத்தை போக்கிக்கொள்ளலாம்.
அன்னதானம்
அமாவாசை நாளில் நவ கிரகங்களும் வலுவடைகின்றன. நம்முடைய உடம்பும் மனமும் உற்சாகமடைய மந்திரஜபம் செய்யலாம். உணவு தானம் செய்ய முன்னோர்கள் ஆசி கிடைக்கும் சந்ததிகள் விருத்தியடையும், ஜாதக தோஷம் இருந்தாலும் நீங்கும். ஏழைகளுக்கு உணவு தானம் கொடுக்க பலன்கள் கிடைக்கும். சிரமப்படுபவர்களுக்கு உதவிகள் செய்யலாம். எந்த கெடுதலும் நடைபெறாது. காகத்திற்கு உணவு வழங்கலாம். அமாவாசை நாளில் குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.