வாசுதேவநல்லூர் புரட்டாசி பொங்கல் விழா - சப்பரத்தில் உலா வந்த மாரியம்மன்
வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை அருள்மிகு மாரியம்மன், ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது
திருநெல்வேலி: மாரியம்மனுக்கு சித்திரை, வைகாசியிலும், புரட்டாசி மாதத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை அருள்மிகு மாரியம்மன், ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 8ம் தேதி தொடங்கி 12 ம் தேதி வரை நடை பெறுகிறது. காப்புகட்டுதலுடன் தொடங்கிய விழா தினசரியும் அம்மன் வீதி உலா உடன் நடைபெற்றது. 9ஆம் தேதி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். இதனைத் தொடர்ந்து 11ஆம் தேதியன்று அம்மன் முளைப்பாறி ஊர்வலம் நடைபெற்றது.
நேற்று காலை 8 மணிக்கு பத்ரகாளியம்மன் சின்ன சப்பரத்தில் வீதி உலா, மாலையில் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் பத்திரகாளியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முளைப்பாரியுடன் திருவீதி உலாவும் நடைபெற்றது. பத்திரகாளியம்மனுக்கு பொங்கலிட்டும், நேர்த்திக்கடன் செலுத்தியும், ஆயிரக்கண் பானை எடுத்தும், மாவிளக்கு எடுத்தும் அக்னி சட்டி ஏந்தியும் அம்மனை வழிபட்டனர்.