புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய கூடலழகர் பெருமாள்
Recommended Video
ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பகவானின் வாகனமாகிய கருடாழ்வாரின் அம்சமாய் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து அந்த பெருமாளுக்கே மாமனார் ஆனவர் விஷ்ணு சித்தர் எனப்படும் பெரியாழ்வார். அவரது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான நிகழ்ச்சியை இந்த புரட்டாசி சனிக்கிழமை நாளில் தெரிந்து கொள்வோம்.
மதுரை: இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை இந்த நாளில் மக்கள் பெருமாளுக்கு விரதம் இருந்து பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வருகின்றனர். காலை முதலே பக்தர்கள் கூட்டம் பெருமாள் கோவில்களில் அலைமோதி வருகிறது. இன்றைய தினம் மதுரை கூடல் அழகர் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் கருடாழ்வாரின் அம்சமாக அவதரித்த விஷ்ணு சித்தர் எனப்படும் பெரியாழ்வாருக்கு அருள்புரிந்தது பற்றியும் அவரது வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்ச்சியைப் பற்றியும் பார்க்கலாம்.
ஒரு சமயம் மதுரையை அரசாண்ட மன்னன் வல்லப பாண்டியன் இரவு, நகர் வலம் சென்றான்.
ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டார். அவரருகே சென்று எழுப்பி, "பெரியவரே தாங்கள் யார்.?" எனக் கேட்டான்.
" நான் புனித கங்கையில் நீராடிவிட்டு, சேதுக்கரைக்குச் சென்று கொண்டிருக்கிறேன்," என்றார் முதியவர்.
"ஓ...அப்படியா ? மிக்க மகிழ்ச்சி. ஆன்மிகப் பற்றுடைய தாங்கள் ஏதாவது சுலோகம் சொன்னால் நன்றாக இருக்கும்," என்றான் மன்னன்.
முதியவர் சுலோகமும் சொல்லி அதற்கான பொருளையும் சொன்னார். "
மழைக் காலமான ஆடி முதல் ஐப்பசி வரை இன்பமாய் வாழ,மற்ற எட்டு மாதத்திலும் உழைக்க வேண்டும். இரவுக்குத் தேவையானதை பகலிலும்,முதுமைக்குத் தேவையானதை இளமையிலும் தேட வேண்டும். அதே போல அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியிலேயே தேட வேண்டியது அவசியம்," என்றார் முதியவர் .
அவரை வணங்கி வழியனுப்பி வைத்த மன்னன். முதியவர் சொன்ன முதல் மூன்று விசயங்களை முடித்து விட்டேன். அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியிலேயே தேடுதல் என்றால் என்ன....!! என்று குழம்பியவாறே, அரண்மனைக்குச் சென்றான்.
முதல் மந்திரியை அழைத்துக் கேட்டால் அவருக்கு தெரிந்திருக்கும் என்று தோன்றியது. மந்திரி செல்வ நம்பி நல்ல தெய்வ பக்தி மிக்கவர். பல கலைகள் கற்றுத் தேர்ந்தவர். குலகுருவும் கூட. நூல் அறிவு மட்டும் இன்றி அனுபவ அறிவும் மிக்கவர். அவரிடம் கேட்டால் நிச்சயமாய் பதில் தெரியும் போல் தோன்றியது. அது இரவு நேரம் என்பதையும் பாராமல் முதல் மந்திரியை அழைத்து வரக் கட்டளையிட்டான்.
செல்வ நம்பி வந்து சேர்ந்தவுடன் தன் சந்தேகத்தைக் சொல்லி விளக்கம் கேட்டான். அவர் சொன்ன விளக்கம் எதுவும் பாண்டியனுக்குத் திருப்தி அளிப்பதாய் இல்லை. அதைப் பார்த்த முதல் மந்திரி, சபையில் ஒரு பொற்கிழி அமைத்து எல்லா பண்டிதர்களையும் அழைத்து இந்த கேள்வியைக் கேட்கலாம் என்று கருத்து சொன்னார். மன்னன் ஒரு மூங்கிலின் உச்சியில் பொற்கிழி அமைத்து எல்லா பண்டிதர்களும் அழைக்கப் பட்டனர்.
வந்தவர்கள் ஒவ்வொருவரும் பல விதமாக மன்னனின் கேள்விக்குப் பதில் சொன்னார்கள். ஆனால் மன்னன் மனம் திருப்தி அடைய வில்லை. வந்தவர்கள் மனம் எல்லாம் மன்னன் அமைத்துள்ள பொற்கிழியை அடைவதிலேயே இருந்ததால் அவர்கள் தாம் கற்ற நூல்களில் இருந்து என்னவிதமாய் எடுத்து சொன்னாலும் அது சரியான பதிலாய் அமையவில்லை. சபையில் கட்டிய அந்த பொற்கிழி அப்படியே இருந்தது.
படிப்பறிவு மட்டும் கொண்டு பட்டறிவு இல்லாமல் இருந்ததால் அந்த பண்டிதர்களால் எல்லா கேள்விகளுக்கும் தகுந்த பதில் சொல்ல முடியவில்லை.
எங்கே தன் சந்தேகம் தீராமலேயே போய்விடுமோ என்ற கவலை பாண்டியனுக்கு வந்துவிட்டது. தன் கேள்விக்கு தகுந்த பதில் கூறி தன்னை நல்வழியில் அழைத்துச் செல்லும் ஒரு அறிஞரை அனுப்புமாறு இறைவனை இறைஞ்சுவதே நல்லது என்று எண்ணி நகரின் தென்மேற்கில் இருக்கும் கூடல் அழகனின் ஆலயத்தை அடைந்து இறைவனை திருமாலழகனை வணங்கி நின்றான்.
கருணைக்கடலல்லவா மணிவண்ணன்? நான்மாடக் கூடலாம் மாமதுரை வாழும் அந்த அழகன் அன்றைய இரவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் கனவில் தோன்றி,"என் பக்தனான பாண்டியன் உண்மைப் பொருளை அறிய வேண்டி ஒரு பொற்கிழி அமைத்து எல்லா அறிஞர்களையும் அழைத்துள்ளான். நீர் மதுரைக்குச் சென்று வேண்டிய வேதங்கள் ஓதி உண்மைப் பொருளைப் பற்றி தெளிவுறுத்தும்' என்று கண்ணன் கட்டளையிட்டான்.
விஷ்ணு சித்தரோ 'எம்பெருமானே. அடியேன் ஒரு குருவின் காலடியில் அமர்ந்து கற்றது இல்லை. எனக்குத் தெரிந்தது எல்லாம் பூமாலை கட்டி உன்னைத் தொழுவது மட்டும் தான். எப்படி நான் உண்மைப் பொருளை வரையறுத்துக் கூறமுடியும்?' என்றார். அதற்கு பெருமாளோ, பரம்பொருளைத் தொழுது அருளைப் பெறுதலே ,அடுத்த பிறவிக்கான தேவை," என்று சொல்லி மன்னன் சந்தேகம் போக்கும்படி கூறி மறைந்தார்.
பெரியாழ்வாரும் அதன்படியே அரண்மனையருகே வந்து ,வாசலில் மூங்கில் மரமருகே நின்றபடி, வல்லப தேவனை அழைத்து, " மன்னா,! நாராயணனே பரம்பொருள் இப்பிறவியில் அவரை வணங்கி அருள் பெறுதலே அடுத்தபிறவிக்கான தேடல் ஆகும்,"என்று சொல்லி முடிக்கும் தறுவாயில் மூங்கில் மரம் வளைந்து தாழ்ந்து பொற்காசு முடிச்சை நீட்டியது. மன்னனும் ஆச்சரியமடைந்து பெரியாழ்வாரின் கருத்தை ஏற்றான்.
அதே நேரத்தில் கருட வாகனத்தில் பெருமாளும் காட்சியளித்தார். அப்போது தான் ஆழ்வாரும் பல்லாண்டு பல்லாண்டு எனத் தொடங்கும் பாசுரம் பாடினார். "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரம் சொல்லி வழிபட்டால் பல்லாண்டு நலமுடன் வாழலாம்.