திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் நிறைவு - 5 டன் மலர்களால் புஷ்பயாகம்
திருச்சானூர் பத்மாவதி தாயாரின் வருடாந்திர பிரம்மோற்சவம் பஞ்சமி தீா்த்தத்துடன் நிறைவு பெற்றதையடுத்து, திங்கள்கிழமையன்று தாயாருக்கு புஷ்பயாகம் நடைபெற்றது.
திருப்பதி: அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தை அடுத்து புஷ்ப யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ரோஜா, சமாந்தி, அரளி உள்ளிட்ட 5 டன் மலர்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ரூ.500 கட்டணம் செலுத்தி பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தனர்.
மங்காளா சாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், வைணவ பக்தர்களுக்கு பிடித்தமானது திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்கள். பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு அடுத்ததாக பெரிதும் பயபக்தியுடன் சென்று தரிசனம் செய்யும் கோவில்களாக இவ்விரண்டு கோவில்களும் உள்ளன.
உலகம் முழுவதும் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துவிட்டு செல்லும் கோவில்களாகும். திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதோ, அதுபோலவே, திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு நடைபெறும் கார்த்திகை பிரம்மோற்சவமும்.
திருமலையில் 9 நாட்கள் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, இங்கும் 9 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அது போலவே இந்த ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று நிறைவடைந்தது.
பிரம்மோற்சவ விழா நடத்தியதில் ஏதாவது தவறுகள், குறைகள் இருந்தால், அதை நிவர்த்தி செய்வதற்காக புஷ்பயாகம் நடத்துவது நடைமுறை. அதே போல் இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த ஞாயிறன்னு பஞ்சமி தீர்த்தத்துடன் இனிதே நிறைவடைந்ததை அடுத்து, திங்களன்று பத்மாவதி தாயாருக்கு புஷ்பயாகம் நடைபெற்றது.
அதை முன்னிட்டு, பத்மாவதி தாயாருக்கு திங்களன்று காலையில் வசந்த மண்டபத்தில் மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், பால், தயிர், பழங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் பத்மாவதி தாயாரை அலங்கரித்து, தீப, தூப ஆராதனைகள் நடத்தி மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர்.
அதன் பின்னர் தாமரை, அல்லி, ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, சம்பங்கி, தேன் பூக்கள் போன்ற பூக்களைக் கொண்டும், தாயாருக்கு பிடித்தமான துளசி, வில்வம், தவனம், மருவு, மரிக்கொழுந்து உள்ளிட்ட இலைகளைக் கொண்டும் அரச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடத்தினார்கள். இதில் தேவஸ்தன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
புஷ்ப யாகத்திற்காக 4 டன் மலர்கள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பூக்கள் கொண்டுவரப்பட்டன. இதில் ரூ.500 கட்டணம் செலுத்தி பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தனம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.