ராகு-கேது தோஷம் போக்கும் அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் ஆலயம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
சிவன் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் திருக்கோவிலாகும். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபயவரதீஸ்வரராக இத்தல சிவன் விளங்குவதால் இறைவன் அபயவர தீஸ்வரராக போற்றப்படுகிறார்.
மாதங்கள் போற்றும் மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம், "ஆருத்ரா தரிசனம்" என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த மார்கழி மாதத்தில், சந்திரனும் சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரமும் இணையும் நாள் ஆருத்ரா தரிசனம் ஆகும்.
"கர்மாவே பெரிது, கடவுள் இல்லை" என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாக கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை நாள்.
ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், "ஆ...ருத்ரா' என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அத்தகைய அழகு கோலத்தில் சிவன் காட்சி தருகிறார். இதுவே ஆருத்ரா தரிசனம் பெயர்க் காரணம் எனலாம்.
மார்க்கண்டேயருக்கு அருள்
சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு பதினாறு வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வரவும் தன் பிரிவால் தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக மார்கண்டேயர் சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால் எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் எமனின் பாசக் கயிறிலிருந்து தப்பித்தார். எமனுக்கு பதவி பறிபோனது. பூலோகத்தில் பாரம் அதிகரித்ததால் பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பைஞ்ஞீலி என்ற தலத்தில் எமனுக்கும் மீண்டும் பதவி கிடைத்தது என்பது புராண வரலாறு.
திருவாதிரையில் பிறந்தவர்கள்
சிவன் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் திருக்கோவிலாகும். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபயவரதீஸ்வரராக இத்தல சிவன் விளங்குவதால் இறைவன் அபயவர தீஸ்வரராக போற்றப்படுகிறார்.
தலவரலாறு:
முன்னொரு காலத்தில் அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். ஏனென்றால் பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நாளிலும், சிவபெருமான் அபயம் தருபவராக உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. எனவே இந்த மண்டலத்தில் நுழைந்திடவே அசுரர்கள் பயப்படுவர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும் என்றும் கூறப்படுகிறது. பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகிய இரு மகரிஷி களும் தினமும் இத் தலத்தில் அருவமாக அபய வரதீஸ்வரரை வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.
இத்தலத்தின் சிறப்புகள்:
தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஸரவதம் என்பது சிவனது கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ஸரவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்த காரணத்தினால் இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுவது இத்தலத்தின் சிறப்பு ஆகும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது என்பது ஐதீகம்.
கடல்பார்த்த நாயகி
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதி வீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளார்.அவரது பெயரால் அதிவீரராமன் பட்டனமாகி, தற்போது அதிராம்பட்டினமாக மாறி விட்டது. இத்தல அம்மன் சுந்தரநாயகி கடலை நோக்கி அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் இத்தல இறைவிக்கு உண்டு.
இத்திருத்தலத்திற்கு செல்லும் வழி:
தஞ்சாவூரில் இருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் உள்ள பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் சென்றால் அதிராம்பட்டினத்தை அடையலாம்.