ராகு கேது பெயர்ச்சி : பரிகார தலங்களில் பக்தர்கள் தரிசனம்
இன்று ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாதர் சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கீழப்பெரும்பள்ளம் கேது பரிகார ஆலயத்திலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்
சென்னை: வாக்கியப்பஞ்சாங்கப்படி இன்று ராகு கேது பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு ராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாதர் சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாலபிஷேகம் செய்து தரிசித்தனர். கீழப்பெரும்பள்ளம் கேது பரிகார ஆலயத்திலும் பக்தர்கள் பரிகார யாகங்களில் பங்கேற்றனர்.
குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர். ராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள்.
பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவே! ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம்.
மிதுன ராகு தனுசு கேது
குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு - கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு - கேது பெயர்ச்சி என்கிறோம். வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று 13.02.2019 புதன்கிழமை அன்று கடகம் ராசியிலிருந்து இருந்து மிதுனம் ராசிக்கு ராகு இடப்பெயர்ச்சி அடைந்தார். கேதுபகவான் மகரம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார்.
பரிகார யாகம்
ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகுகேது யாகமும் சிறப்பு அபிஷேகமும், விமரிசையாக இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்றது. இந்த யாகத்தில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் பரிகாரங்கள் செய்தனர். இந்த ஹோமத்தில் திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைபேரின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகள் அகல கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. வருகிற 09.03.2019 சனிக்கிழமை திருக்கணித பஞ்சாங்க பிரகாரம் ராகு-கேது பெயர்ச்சி யாகம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற உள்ளது.
திருநாகேஸ்வரத்தில் அபிஷேகம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில் நவக்கிரகங்களான ராகு, பகவானிற்கு நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சுசீல முனிவரின் குழந்தையை அரவாகிய ராகு தீண்டியதால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இதையடுத்து நான்கு தலங்களில் வழிபட்டு, இக்கோயிலின் நாகநாத சுவாமியை மகா சிவராத்திரி நாளில் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். திருநாகேஸ்வரத்தில் மட்டுமே நாகவல்லி, நாகக்கன்னி என இரு தேவியருடன் தனிக்கோயில் கொண்டு மங்கள ராகுபகவான் ஆக அருள்பாலிக்கின்றார்.
பக்தர்கள் தரிசனம்
ராகு பரிகார தலமான இக்கோவிலில் கடந்த 16ஆம் தேதி காலை முதல் கால யாக பூஜையுடன் தொடங்கி, இரண்டாம் காலம், மூன்றாம் காலம் என தொடர்ந்து காலை, மாலை நடை பெற்று இன்று நான்காம் கால யாக பூஜைகள் மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ராகு பகவானுக்கு பல்வேறு நறுமணப் பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்து புனித நீரை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1.24 மணிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கேது பரிகார தலம்
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கேது ஆலயத்தில் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றன. கேது பகவான் ஞானத்துக்கும், மோட்சத்துக்கும் அதிபதியானவர். கேது பகவானை ஞாயிற்றுக் கிழமைகளில் எமகண்டத்தில் வழிபட்டால் மிகவும் சிறப்பானது. நாகநாதசுவாமி ஆலயத்தில் சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பரிகாரம் செய்தனர்.