ராகு கேது: 2020 ஆண்டில் ராகு கேதுவினால் கோடீஸ்வரர்கள் ஆகப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா
சென்னை: 2020ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டில் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். சனியின் சஞ்சாரம் பார்வைகள், குருவின் சஞ்சாரம் பார்வைகள் சிலருக்கு நன்மைகளையும் தீமைகளையும் பார்த்து வருகிறோம். சர்ப்ப கிரகங்களான ராகு கேதுவினால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். காரணம் தனித்த ராகுவை இத்தனை நாட்களாக சனி கேது பார்த்து வந்த நிலையில் மிதுனத்தில் உள்ள ராகுவின் மீது குரு பார்வை விழுகிறது. தனுசு ராசியில் கேது உடன் குரு சேர்ந்து இருக்கிறார். இதுநாள் வரை கேது உடன் இணைந்திருந்த சனி விலகி மகரத்திற்கு நகரப்போகிறார். இதனால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நன்மைகள் நடைபெற உள்ளது. ராகு கேதுவினால் துலாம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.
நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. கால புருஷ தத்துவதத்திற்கு மூன்றாவது வீடு தைரிய வீரிய ஸ்தானம். இளைய சகோதர ஸ்தானம். கால புருஷ தத்துவத்திற்கு ஒன்பதாம் வீடு பாக்ய ஸ்தானம் உயர்கல்வி, வெளிநாட்டு பயணம், தந்தையை குறிக்கும். மூன்றாம் வீடான மிதுனத்தில் ராகுவும், ஒன்பதாம் வீடான தனுசு ராசியில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர்.
பொதுவாகவே ராகு கேது கிரகங்கள் இருக்கும் இடத்துக்கேற்ப அந்த வீட்டின் அதிபதியைப் போல் பலன் தருவார். மிதுனம் புதன் வீட்டின் அதிபதி தனுசு குருவின் வீட்டின் அதிபதி என்பதால் ராகு அதிக காதலையும் தனுசில் உள்ள கேது அதிக ஆன்மிகத்தையும் அளிப்பார். துலாம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் இந்த ராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு ராகு கேதுவினால் பொருளாதார நிலை உயரும். தொட்ட காரியங்கள் துலங்கும் உங்களின் எண்ணங்கள் நிறைவேற குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்க ராசிக்கு ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது பகவான் தைரிய ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். ராகு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரப்போகிறது. மனதில் அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பாடாய் படுத்தி வந்த நோய்கள் குணமடையும். புதிய வீடு கட்டி குடியேறும் யோகம் வரப்போகிறது. திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை இல்லையே என்று கவலைப்பட்டு வந்த உங்களின் ஏக்கம் தீரப்போகிறது. நீண்ட நாட்களாக வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஞான காரகன் கேதுவின் 3ஆம் இடத்துச் சஞ்சாரத்தினால் குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். மறைமுக எதிரிகள் மாயமாவார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும். விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளால் அமைதி பிறக்கும். குடும்பத்தில் அந்தஸ்து உயரும். விநாயகப்பெருமானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.
விருச்சிகம்
2020ஆண்டு விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவடையும் நேரம் உங்களுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும். ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளனர். அஷ்டம ராகுவின் மீது குருவின் பார்வை விழுவதால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் நிறைய நடக்கும் நேரம் கைகூடி வரப்போகிறது. கை நழுவிப்போன நல்ல விசயங்கள் உங்களை மீண்டும் தேடி வரும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்களுக்கு மீண்டும் கட்டி முடித்து குடியேறும் காலம் வரப்போகிறது. பணவரவு அற்புதமாக இருக்கும். கழுத்தை நெரித்து வந்த கடன்கள் அடைபடும். சொத்துக்கள் வாங்குவீர்கள். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.
குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனை வழிபட நன்மைகள் நடைபெறும்.
தனுசு
2020 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் ஏழாம் வீட்டிலும் கேது பகவான் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கின்றனர். ஜென்ம குருவின் பார்வை களத்திர ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீது விழுகிறது. இதுநாள் வரை பட்ட கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. முகத்தில் ஒருவித பொலிவு ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் உண்டாகும். வருவாய் அதிகரித்தாலும் செலவுக்கு குறையிருக்காது. உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். நல்ல காரியங்கள் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். ஆன்மீக தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள கேது பகவான் குரு உடன் சேர்ந்து உள்ளது கோடீஸ்வர யோகத்தை தருகிறார். மனதில் இருந்த கலக்கம் நீங்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்க பேச்சிற்கு நல்ல மதிப்பு கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகமும் கைகூடி வருகிறது. அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
மகரம்
2020ஆம் ஆண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. ராகு பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பார்வை பெற்று அமர்ந்துள்ளார். இதுநாள் வரை சனி பார்வையோடு ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகு நோய்களையும் கடனையும் கொடுத்து வந்தார். இனி நோய்கள், கடன்கள் நீங்கும் வயிறு செரிமான கோளாறுகள் நீங்கும். இந்த புத்தாண்டில் புதியதாக கடன் வாங்க வேண்டாம் யாருக்கும் கடன் கொடுக்கவும் வேண்டாம் ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். மோட்ச ஸ்தானத்தில் விரைய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்கள் உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த சண்டைகள் முடிவுக்கு வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பிள்ளைகளுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வண்டி வாகனம், எலக்ட்ரானிக் சாதனம் வாங்குவீர்கள். நல்ல வேலையும் உத்யோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். நோய்கள் தீரும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பெண்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் முகத்தில் அருள் தாண்டவமாடும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போங்க. வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும். வெற்றி மீது வெற்றிகள் வந்து உங்களை சேரும்.
கும்பம்
2020ஆம் ஆண்டு முதல் கும்ப ராசிக்காரர்களுக்கு உத்யோக உயர்வையும், பணவரவையும் தரப்போகின்றனர் ராகுவும் கேதுவும். ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவும் லாப ஸ்தானமான 11வது வீட்டில் கேதுவும் அமர்ந்துள்ளனர். உங்க பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு இருக்கிறார் சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் புகழ் கூடும். தொழிலுக்காக வெளியூர் பயணம் சென்று தங்க வேண்டியிருக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஏற்படும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் துறையில் இதுநாள்வரை ஏற்பட்டிருந்த சங்கடங்கள் நீங்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள் தொழிலில் லாபம் கிடைக்கும். புதிய வேலைகள் நிறைய சம்பளத்துடன் கிடைக்கும். வங்கியில் பணம் சேமிப்பும் அதிகரிக்கும். குடும்பத்தை விட்டு வெளியூரில் பிரிந்து இருந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பு உருவாகும். ஆன்மீக விசயங்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். குலதெய்வத்தின் அருள் கூடியிருக்கிறது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலக விசயமாக வெளிநாடு பயணம் அடிக்கடி செல்வீர்கள். புதிதாக சிலருக்கு வெளிநாடு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ராகுவினால் டென்சன் குறையும், கேதுவினால் பொருளாதார வரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். பதவிகள் தேடி வரும். செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
மீனம்
2020ஆம் ஆண்டு மீனம் ராசிக்காரர்களுக்கு சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்திருக்கின்றனர் இது சிறப்பான அம்சமாகும். உங்க வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சிலர் புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாள் கனவுகள் பலிக்கும். தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். சொந்த பந்தங்கள் நண்பர்களிடையே மதிப்பு மரியாதை கூடும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமண பேச்சுவார்த்தை வெற்றிகரமான முடியும். சிலருக்கு காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடியும் அதிர்ஷ்டகரமான ஆண்டாக உங்களுக்கு அமையப்போகிறது. சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் இழப்பை சரி செய்யலாம். இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள். பொருளாதார நிலை சீரடையும். இந்த ஆண்டு நீங்க எந்த விசயத்திலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெடுநாளைய கனவு பலிதமாகும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகமாகும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் கிடைக்கும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் சிவ ஆலயத்திற்கு சென்று துர்க்கையை வழிபட நன்மைகள் நடைபெறும். தடைகள் நீங்கும்.